குவகாத்தி: என்ன தான் பல மாடல்களில் பைக்குகள் வந்திருந்தாலும், யமஹாவின் ஆர் எக்ஸ் 100 என்றாலே இன்றும் மவுசு அதிகம் தான்.
அதிலும் கிராமப்புறங்களில் பழைய வண்டியானாலும், இதனை தேடிப்பிடித்து வாங்குபவர்கள் ஏராளம்.
இப்படி மக்கள் வாழ்வில் ஒன்றிப்போன யமஹா பைக் நிறுவனம், கடந்த சில வருடங்களாகவே சரிவின் பிடியில் தான் இருந்து வருகிறது. யமஹா மட்டும் அல்ல ஒட்டுமொத்த வாகன நிறுவனங்களும் சரிவினைக் கண்டு வருவதை காண முடிகிறது.
மோசமான சரிவினை காணும்
இது குறித்து யமஹா பிடிஐக்கு அளித்த அறிக்கையின் படி, கொரோனா தொற்று நோயினால், நடப்பு ஆண்டில் நுகர்வோரின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. இது 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது இந்தியாவில் நடப்பு 2020ம் ஆண்டில் மோசமான சரிவினைக் காணும் என்றும் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நடைமுறையை மாறலாம்
நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் இந்த ஜப்பான் நிறுவனத்தின் இந்திய விற்பனை, 36 சதவீதத்திற்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. எனினும் கொரோனாவின் காரணமாக மக்கள் பாதுகாப்பு கருதி, தங்களது போக்குவரத்து நடைமுறையையே மாற்றக்கூடும் என்றும் யமஹா நம்புவதாக தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் மாதங்களில் தேவை அதிகரிக்க கூடும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
தேவை படிப்படியாக அதிகரிக்கும்
எனினும் யமஹா நிறுவனம் இந்தியாவில் தேவை படிப்படியாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. எப்படி இருந்தாலும் நடப்பு ஆண்டின் விற்பனையானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரியும் என்பதில் சந்தேகமில்லை என்று யமஹா மோட்டார்ஸின் இந்தியாவின் சீனியர் துணைத் தலைவர் ரவீந்தர் சிங், பிடிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால விற்பனை அதிகரிக்கும்
அடுத்த சில மாதங்கள் சந்தையில் கடுமையான போக்கினை சந்தித்தாலும், பண்டிகை கால விற்பனை சற்று மேம்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவலுக்கு மத்தியில், புதிய வணிக மாதிரிகளை ஊக்குவிக்கும். இதன் காரணமாக வளர்ச்சியினை ஊக்குவிக்க யமஹாவும் புதிய செயல்முறைகளை நிறுவ வேண்டும் என்றும் சிங் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளி முக்கியம்
தற்போது நாட்டில் பல இடங்களில் பொதுபோக்குவரத்துகள் தொடங்கப்பட்டாலும், மக்கள் பாதுகாப்பினை மேம்படுத்தும் விதமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் படையெடுத்து வருவதை காண முடிகிறது. இது இரு சக்கர வாகன விற்பனையை ஊக்குவிக்க பயன்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
விற்பனை இவ்வளவு தான்
கடந்த ஜனவரி - ஆகஸ்ட் வரையில் யமஹா இந்தியா 2,88,942 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 4,54,617 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 36.44% சரிவாகும். பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த பண்டிகை காலங்களில் விற்பனையை அதிகரிக்கும்.
விழாக்கால சீசன்
ஏனெனில் துர்கா பூஜை, தீபாவளி தொடங்கி கிறிஸ்துமஸ் என பல விழாக்கள் இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த காலகட்டங்களில் இரு சக்கர வாகன விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா மட்டும் அல்ல, மற்ற வாகன நிறுவனங்களின் எதிர்பார்ப்பும் இந்த விழாக்கால சலுகையாவது கைகொடுக்குமா என்பது தான். பொறுத்திருந்து தான் பார்ப்போமே? இனியாவது விற்பனை அதிகரிக்குமா என்று..