இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன விற்பனை நிறுவனமான யமஹா, அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து ஊழியர்களைக் காப்பாற்றும் விதமாகத் தற்காலிகமாக உற்பத்தி பணிகளை 100% முடக்கியுள்ளது.
யமஹா இந்தியாவில் 2 இடங்களில் தொழிற்சாலை வைத்து உள்நாட்டு தேவைக்கும், வெளிநாட்டுத் தேவைக்கான வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அளவீட்டைக் கட்டுப்படுத்த தொழிற்சாலையை மூடியுள்ளது.
ஜப்பான் யமஹா
ஜப்பான் நிறுவனமான யமஹா இந்தியாவில் சென்னையிலும், உத்தரப் பிரதேசம் சுராஜ்பூர் ஆகிய இரு இடங்களில் தொழிற்சாலை அமைத்து பைக் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா முதல் அலையை விடவும் 2வது அலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் 2 முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மே 31 வரை தொழிற்சாலை மூடல்
இந்தச் சூழ்நிலையில் யமஹா மே 15 முதல் மே 31 வரையிலான காலகட்டத்திற்குத் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை முழுமையாக முடக்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் பல தொழிற்சாலைகள் கொரோனா தொற்றுக் காரணமாக உற்பத்தி பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு அனுமதி இல்லை
தற்போது குறிப்பிட்டுள்ள மே 15 முதல் மே 31 வரையிலான காலகட்டத்தில் யமஹா தொழிற்சாலையில் ஊழியர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது, மேலும் கொரோனா தொற்றைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக யமஹா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்த 17 நாட்களுக்கு ஊழியர்களுக்குச் சம்பளம் கிடைக்குமா..?! என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று
மேலும் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா எனத் தெரிவிக்காத இந்த ஜப்பான் நிறுவனம் ஜூன் மாதம் கொரோனாவின் தாக்கத்தைப் பொருத்து தொழிற்சாலை பணிகளை முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
யமஹா நிர்வாகம்
இக்காலகட்டத்தில் ஏற்படும் வர்த்தகப் பாதிப்புகள், விநியோக பாதிப்புகளைச் சரி செய்ய நிர்வாகம் தொடர்ந்து சப்ளையர் மற்றும் டீலர்களுடன் பேச்சுவார்த்தையில் இருப்போம். மேலும் யமஹாவின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை நிர்வாக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து தங்களது பணிகளைத் தொடர்வார்கள் எனவும் யமஹா தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம்
இதேபோல் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி மே 9ஆம் தேதி வரையில் தற்காலிகமாகத் தொழிற்சாலையை மூடிய நிலையில் தற்போது 16ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதற்குக் காரணமாகக் கொரோனா தொற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டம்
இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கும், அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் கொரோனா ஒழிப்பில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமான உள்ளது என்றால் மறுக்க முடியாது.