2019ஆம் ஆண்டு முடிந்து 2020ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், 2019ஆம் ஆண்டை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை தான்.
இந்த வருடம் முழுவதும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த காரணத்தால் 2019ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஒரு ஆண்டாக அமைந்துள்ளது.
ஒரு வருட வளர்ச்சி
2019ஆம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 15.6 சதவீதமும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 13 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி சில முக்கியத் துறை மற்றும் நிறுவனங்களை மட்டுமே வைத்து ஏற்பட்ட வளர்ச்சி.
பெரும் நிறுவனங்கள்
இந்த வருடம் பல பெரும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை மட்டுமல்ல இந்தியப் பொருளாதாரத்தையும் ஏமாற்றியுள்ளது. அதீத மதிப்பீடு, பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலை, குறைவான வருமானம் மற்றும் லாபத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாகப் பல முக்கியமான பெரும் நிறுவனங்கள் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது.
BSE500
மும்பை பங்குச்சந்தையில் BSE500 பட்டியலில் இருக்கும் 500 நிறுவனங்களில் 300 நிறுவனங்கள் 2019ஆம் ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதில் 237 நிறுவனங்கள் இரட்டை இலக்கு சரிவை அடைந்துள்ளது, மேலும் 45 நிறுவனங்கள் 50 முதல் 95 சதவீத சரிவை அடைந்துள்ளது. இது இந்திய முதலீட்டாளர்களுக்கும் மட்டுமல்லாமல் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் பெரிய பாதிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
ரிலையன்ஸ் கேப்பிடல் 94.67 சதவீத சரிவு
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 93.75 சதவீத சரிவு
தீவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் 93.58 சதவீத சரிவு
ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர்ஸ் 92.68 சதவீத சரிவு
ஜெட் ஏர்வேஸ் 91.18 சதவீத சரிவு
ரிலையன்ஸ் பவர் 88.38 சதவீத சரிவு
ஜெயின் ஈரிகேஷன் சிஸ்டம்ஸ் 88.16 சதவீத சரிவு
காபி டே எண்டர்பிரைசர்ஸ் 84.83 சதவீத சரிவு
லட்சுமி விலாஸ் வங்கி 79.29 சதவீத சரிவு
இந்தியாபுல்ஸ் இன்டிகிரேடெட் சர்வீசஸ் 78.76 சதவீத சரிவு
SREI இன்பராஸ்டக்சர்ஸ் பைனான்ஸ் 78.01 சதவீத சரிவு இப்படிப் பல நிறுவனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.