2020ல் பெருத்த அடி வாங்கிய துறைகளில் எண்ணெய் துறையும் ஒன்று. ஏனெனில் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை கண்டது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலையானது மைனசில் சென்றது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு விதமாக பரவி வரும் கொரோனாவின் காரணமாக, நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பெரும்பாலான நாடுகள் லாக்டவுனை அமல்படுத்தின.
இதன் காரணமாக போக்குவரத்துகள், விமான சேவைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் முடங்கின.
தேவை சரிவு
இதனால் எரிபொருள் தேவையானது வெகுவாக குறைந்தது. இதனால் ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் இருப்பு வைக்க இடமே இல்லாமல் கூட போகலாம் என்றெல்லாம் அஞ்சப்பட்டது. அந்தளவுக்கு உற்பத்தியும் அதிகரித்தது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது கொரோனாவினால் வீழ்ச்சியடைவதை குறைக்க, உற்பத்தி குறைப்பை கையில் எடுத்தன opec நாடுகள்.
உற்பத்தி நிறுவனங்களுக்கு நஷ்டம்
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், 2020ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 145 பில்லியன் டாலர்களை write-down செய்தன. இது கடந்த 2010க்கு பிறகு ஒன்பது மாத காலத்தில் ரைட் டவுன் செய்த மிகப்பெரிய தொகையாகும். அந்த சமயத்தில் அமெரிக்காவில் சில எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தினை கண்டன. ஏன் சில திவால் நிலைக்கே கூட தள்ளப்பட்டன.
WTI கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலையானது நடப்பாண்டின் ஏப்ரல் தொடக்கத்தில் பேரலுக்கு -40.32 டாலர்கள் வரை சென்று திரும்பியது உண்மையில் கச்சா எண்ணெய் விலையானது இந்தளவுக்கு சரிவினை கண்டதில்லை எனலாம். எனினும் அப்போதிலிருந்து ஏற்றம் காணத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலையானது அம்மாதத்திலேயே பேரலுக்கு 18.84 டாலர்களாக முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று அதன் விலை 0.56% ஏற்றம் கண்டு 48.52 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 0.41% ஏற்றம் கண்டு, பேரலுக்கு 51.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பேரலுக்கு 15.98 டாலர்கள் வரையில் சென்று பின் திரும்பியது. எனினும் அதன் பின்னர் ஏற்றம் காணத் தொடங்கிய விலை செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சற்று குறைந்தது. தற்போது மீண்டு ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
மறக்க முடியாத ஆண்டு
உண்மையில் இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் வீழ்ச்சி கண்டது. ஆனால் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலையானது குறைந்தபாடாக இல்லை. எனினும் தனி நபர் இடைவெளி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை கடைபிடிக்கும் விதமாக மக்கள் வாகனங்களில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக எரிபொருள் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.