டாடாவுக்கு உண்மையில் 2021ம் ஆண்டு என்பது அவரது வாழ் நாளில் மறக்கமுடியாத ஆண்டாகவே இருக்கும்.
ஏனெனில் 68 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டாடாவின் வசமானது ஏர் இந்தியா நிறுவனம்.
1932ம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ், 1946ம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1953ம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடமையாக்கப்பட்டது.
அரசு தீவிர முயற்சி
இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்தது. இன்னும் சொல்லப்போனால் தொடர் நஷ்டத்தினை கண்டு வந்தது. இப்படி பல ஆயிரம் கோடி கடனில் சிக்கியிருந்த ஏர் இந்தியாவின் நிலை, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவு, எரிபொருளுக்கான தொகையை கொடுக்க முடியாத அளவு நெருக்கடியில் இருந்தது. இதற்கிடையில் கொரோனா இன்னும் ஏர் இந்தியாவின் நிலையை மோசமாக்கியது. இந்த நிலையில் தான் அரசு பங்குகளை விற்க அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.
டாடா வசமான ஏர் இந்தியா
எனினும் கொரோனாவின் காரணமாக இந்த பணிகள் பெரும் பின்னடைவை சந்தித்தன. எப்படியோ ஒரு வழியாக ஏலம் விட திட்டமிடப்பட்டு, இந்த ஏலத்தில் டாடா குழுமமும் விண்ணப்பித்திருந்தது. இந்த ஏலத்தில் 18,000 கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை வெற்றிகரமாக வாங்கியது.
மிக்க மகிழ்ச்சி
இப்படி பல போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்த ஏர் இந்தியா, கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் ஏர் இந்தியா, டாடாவின் வசம் சென்றது. இதற்கிடையில் தான் ஏர் இந்தியாவை வாங்கிய கையோடு வெல்கம் பேக் ஏர் இந்தியா என பழைய புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்போது பகிர்ந்தார். உண்மை மற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஏர் இந்தியாவினை கைபற்றியிருந்தாலும், இந்தளவுக்கு சந்தோஷப்பட்டிருப்பார்களா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
2021 மறக்க முடியாத ஆண்டு
ஏனெனில் 68 வருடங்களுக்கு தன் கை வசம் விட்டு போன ஒரு நிறுவனம், மீண்டும் தன்னை தேடி வரும்போது அது ஸ்பெஷலாகத் தானே இருக்கும். ஆக உண்மையில் இந்த 2021ம் ஆண்டு என்பது பல்வேறு சவால்கள் மிகுந்த ஆண்டாக இருந்தாலும், ரத்தன் டாடாவுக்கு மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும்.
உலகத் தரம் வாய்ந்த நிறுவனம்
ஏற்கனவே உப்பு முதல் சாப்ட்வேர் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் ஜாம்பவான் ஆன டாடா, வெற்றிகரமாக ஏர் இந்தியாவை கைபற்றியுள்ள நிலையில். இனி விமான வணிகத்திலும் முன்னோடியாக மாறலாம்.
ஏற்கனவே இரு விமான நிறுவனங்களிலும் பங்குகளை வைத்துள்ள டாடா, ஏர் ஏசியா நிறுவனத்தில் 84% பங்கினையும், விஸ்தாரா நிறுவனத்தின் 51% பங்கினையும் வைத்துள்ளார். இந்த நிலையில் டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவினையும் வாங்கியுள்ளது. இது ஏர் இந்தியாவினை உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உருவெடுக்க உதவும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.