இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் ஐஐடி-யில், நடப்பு ஆண்டில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பல மாணவர்கள் கோடிக் கணக்கில் சம்பளத்துடன் வேலைக்கான ஆஃபர்களை பெற்றுள்ளனர்.
பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகளை பொறுத்தவரையில் சாண்டா தாத்தா வருவார். ஒரு பரிசினை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றாலும் குழந்தைகளுக்கு மிக பிடித்தமானவராக இந்த தாத்தா வலம் வருவார். குழந்தைகளை கவர அவர்களுக்கு பிடித்தமான சாக்லேட்கள், கிஃப்ட்கள் என கொடுப்பார். இது பொதுவாக கிறிஸ்துமஸ்-க்கு முன்னதாக நடக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.
ஆனால் ஐஐடி மாணவர்களுக்கு சாண்டா தாத்தா முன்னரே வந்து பரிசுகளை வாரி வழங்கி விட்டார். அதுவும் பல லட்சம், கோடிக்கணக்கிலான பரிசுகளை வாரி வழங்கிவிட்டார் எனலாம்.
கோடிக்கணக்கில் சம்பளம்
மேலும் ஐடி மாணவர்களை பொறுத்தவரையில் இதுஒரு மறக்க முடியாத ஆண்டு எனலாம். ஏனெனில் 185 மாணவர்கள் கேம்பஸ்களில் கோடிக்கணக்கில் சம்பளத்திற்காக ஆஃபரினை பெற்றுள்ளனர். இதுவரையில் இல்லாத உச்சம். இந்த முறை வெளிநாட்டு ஆஃபர்கள் மட்டும் அல்ல, உள்நாட்டு ஆஃபர்களும் அதிகரித்துள்ளன.
களை கட்டிய கேம்பஸ்
நாட்டில் கொரோனாவின் மத்தியிலும் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் பலவும் திறன் மிக்க ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக சம்பளம் கொடுத்து கேம்பஸ் -களில் தேர்தெடுத்துள்ளன. பிரெஷ்ஷர்களாக இருந்தாலும், அவர்களுக்கு போதுமான பயிற்சியினை கொடுத்து, பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகின்றன.
அதிகபட்ச சம்பளம் எவ்வளவு?
குறிப்பாக டெல்லி ஐஐடி, கான்பூர், பாம்பே, சென்னை, ரூர்க்கி, கவுகாத்தி, காரக்பூர், வாரணாசி உள்ளிட்ட ஐஐடிக்களில் கேம்பஸில் தேர்தெடுக்கப்பட்டதில், உள்நாட்டு நிறுவனங்களில் அதிகபட்சம் 1.8 கோடி ரூபாயும், வெளி நாடுகளில் 2.15 - 2.5 கோடி ரூபாயும் அதிகபட்ச சம்பளமாக பெற்றுள்ளனர்.
டெல்லி ஐஐடி
இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் 60 பேர் கோடிக்கணக்கான சம்பளத்திற்கான சலுகையினை பெற்றுள்ளனர். இதே கான்பூரில் 49 பேரும், சென்னையில் 27 பேரும், மும்பையில் 12 பேரும், ரூர்க்கியில் 11 பேரும், கவுகாத்தியில் 5 பேரும், 1 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளனர். இதே ஐஐடி காரக்பூரில் 22-க்கும் மேற்பட்டோர் 90 லட்சம் முதல் 2.4 கோடி ரூபாய் வரையிலும் சம்பளத்திற்கான ஆஃபரை பெற்றுள்ளனர்.