இந்தியாவை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துக்கொண்டு இருக்கும் யெஸ் வங்கி செய்துள்ள மோசடிகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கும் நிலையில் சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக இவ்வங்கியின் தலைவர் ரானா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைப் போலி வங்கி கணக்கு துவங்கிப் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அமலாக்க துறை அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் யெஸ் வங்கி நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தற்போது கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனியார் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி இப்படி முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவது இது முதல் முறையல்ல, இதுபோல் பல முறை பல வங்கிகளிடம் அதிரடி காட்டியுள்ள ரிசர்வ் வங்கி.
திருவாங்கூர் நேஷனல் மற்றும் குளியன் வங்கி -1938
1937ஆம் ஆண்டுத் திருவாங்கூர் நேஷனல் வங்கி மற்றும் குளியன் வங்கி ஒன்றாக இணைத்து நாட்டின் 4வது பெரிய வங்கியாகவும், தென்னிந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் திகழ்ந்தது. இந்த இணைப்பின் மூலம் இரு வங்கிகளின் தலைமை மத்தியில் பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, மதம் மற்றும் ஜாதிய பிரச்சனைகளை வெடித்ததது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு வங்கி தலைமை அதிகாரிகள் சென்னையில் இவ்வங்கி திருடர்கள் மற்றும் மோசடியாளர்கள் நடத்தப்படுகிறது என நோட்டீஸ் கொடுக்கப்படும் அளவிற்குப் பிரச்சனை வெடித்தது.
இதைப் பார்த்த அப்போதைய மத்திய வங்கி (இன்றைய ரிசர்வ் வங்கி) திருவாங்கூர் நேஷனல் மற்றும் குளியன் வங்கியின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கையில் எடுத்துக்கொண்டு பணப் பரிமாற்றம் அனைத்தையும் ஜூன் 21, 1938ஆம் ஆண்டு முடக்கியது, இதன் பின்பு வங்கியை படிப்படியாகக் கலைத்தது. இது தான் ரிசர்வ் வங்கி முதல் முறையாக எதிர்கொண்டு வங்கி பிரச்சனை.
சுமார் 17 வருடங்களுக்குப் பின் 1955ஆம் ஆண்டு இவ்வங்கி முழுமையாகக் கலைக்கப்பட்டது.
வங்காள வங்கிகள் (!947-50)
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு வங்காளத்தில் கிட்டத்தட்ட 850-900 வங்கிகள் இருந்தது (ரிசர்வ் வங்கியின் தரவுகள் அடிப்படையில்), இவ்வங்கிகள் அனைத்தும் கடன் கொடுக்கும் ஒரு அலுவலகமாகவே இருந்தது. இந்த அமைப்புகள் ரிசர்வ் வங்கியின் எவ்விதமான விதிமுறைகளையும் பின்பற்றாது. அதனால் மக்கள் இத்தகைய அமைப்புகள் மோசடி நடக்கிறது என அறிந்துகொண்டால் அடுத்தச் சில வாரங்களில் வங்கிகள் முடங்கி விடுவது மட்டும் அல்லாமல் மக்கள் பணம் திரும்பப்பெறப்படமாட்டாது.
இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் 1950 மே மாதத்தில் கல்கத்தா-வை மையமாகக் கொண்ட பெரும் வங்கியான நாத் வங்கி பெரும் மோசடி செய்து ரிசர்வ் வங்கியிடம் சிக்கிக்கொண்டது. இவ்வங்கியின் வீழ்ச்சியில் தான் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கி உருவானது.
கொமிலா பேங்கி கார்ப்பரேஷன், பெங்காள் சென்டரல் பேங்க், கோமிலா யூனியன் பேங்க் மற்றும் ஹூக்கிலி வங்கி ஆகிய 4 வங்காள வங்கிகளை இணைத்து யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கியை உருவாக்கியது ரிசர்வ் வங்கி. இதன் பின்பு தான் பல வங்கி சார்ந்த பிரச்சனைகள் இப்பகுதியில் தீர்ந்தது.
பாலை சென்டரல் பேங்க் - 1960
1951 முதல் 1960 வரையிலான 315 வங்கிகள் முடங்கியுள்ளது, இதில் மிகப்பெரிய ஒரு வங்கி என்றால் அது பாலை சென்டரல் பேங்க் தான். 1927ஆம் ஆண்டில் திருவாங்கூர் உருவாக்கப்பட்ட இவ்வங்கியில் பல்வேறு மோசடி நடந்ததைக் கண்டுபிடித்த ரிசர்வ் வங்கி, இவ்வங்கியைக் கண்காணிக்கக் கோட்டயத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்தது. இதைக் கடுமையான எதிர்த்த பாலை சென்டரல் பேங்க் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டது. இந்தச் செய்தி அப்பகுதி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரவியதன் காரணமாக வைப்பு நிதி மற்றும் முதலீடுகள் அதிகளவில் குறைந்தது.
இதன் வாயிலாக ரிசர்வ் வங்கி, பாலை சென்டரல் பேங்க்-இன் தலைவர் ஜோசப் ஆகஸ்ட் பதிவியில் இருந்து நீக்கி நிர்வாகத்தைக் கையில் எடுத்தது. 1955 முதல் 1959 வரையில் ரிசர்வ் வங்கி மற்றும் பாலை சென்டரல் பேங்க் நிர்வாகம் இடையில் கடுமையான போராட்டம் நிலவியது. ஒரு வழியாக வங்கி உரிமத்தை ரத்துச் செய்யாமல் புதிய வைப்பு நிதிகளைப் பெற அனுமதி கொடுத்தது ரிசர்வ் வங்கி.
இதன் பின்பு சுமார் 5.28 கோடி ரூபாய் அளவிலான வைப்பு நிதியை பெற்ற வங்கி வெறும் 2.21 கோடி ரூபாய் அளவிலான பணத்திற்கு மட்டுமே பாதுகாப்பு கொடுக்க முடியும் சூழ்நிலையில் இருந்தது. இதனால் ஆகஸ்ட் 8, 1960ஆம் ஆண்டு இவ்வங்கியை முழுவதுமாக மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இவ்வங்கியை மூடும் பணிகள் மட்டும் சுமார் 27 வருடம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
குளோபல் டிரஸ்ட் பேங்க் -2004
1994ஆம் ஆண்டுத் தனியார் வங்கி துவங்க உரிமம் பெற்ற குளோபல் டிரஸ்ட் பேங்க், துவங்கிய 10 வருடத்தில் யெஸ் வங்கி சந்தித்த இதே நிலையைச் சந்தித்தது.
பல்வேறு நிதி சிக்கல் மற்றும் மோசடிகள் அடிப்படையில் குளோபல் டிரஸ்ட் பேங்க்-ஐ அக்டோபர் 23, 2004ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இப்போது ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் 10000 ரூபாய் வரையில் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
அதன் பின்பு இவ்வங்கியை Oriental Bank of Commerce உடன் இணைத்தது, மொத்த நிதி, வர்த்தகம் அனைத்தும் முழுமையாக OBC வங்கிக்கு மாற்றப்பட்டது.
யெஸ் வங்கி
யெஸ் வங்கி கொடுக்கப்பட்ட கடன்களில் ஏற்பட்ட ஏமாற்றத்தைச் சமாளிக்க 2 பில்லியன் டாலர் அளவிலான நிதியை பங்கு விற்பனை மூலம் திரட்ட திட்டமிட்டது ஆனால் அது நடக்காமல் போனது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் அதிகமான காலத்திற்கு நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறது யெஸ் வங்கி. இதன் எதிரொலியாகத் தான் ரிசர்வ் வங்கி தற்போது யெஸ் வங்கியின் நிர்வாகத்தைத் தற்காலிகமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துள்ளது.
50000 ரூபாய் லிமிட்
யெஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்த ரிசர்வ் வங்கி, குளோபல் டிரஸ்ட் பேங்க்-கு கொடுத்தது போலவே இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு 50000 ரூபாய் மட்டுமே வித்டிரா செய்யும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்துள்ளவர்களுக்கும் பொருந்தும். அதாவது எவ்வளவு கணக்கு வைத்திருந்தாலும் 50000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என அரசு ஆணையாக அறிவித்துள்ளது (gazette notification).
5 லட்சம் வரை
இதேவேளையில் மருந்து அவசரம், உயர் கல்வி கட்டணம், திருமணச் செலவு ஆகிய காரணங்களுக்காக 5 லட்சம் ரூபாய் வரையில் பணம் திரும்பப் பெற வழிவகைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரானா கபூர் கைது
யெஸ் வங்கியின் கட்டுப்பாடு தற்போது முழுவதும் ரிசர்வ் வங்கியின் கீழ் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் ரானா கபூர்-ஐ அதிகாலை 3 மணிக்கு டெல்லியில் அவரின் வீட்டில் வைத்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.
ரோஷினி கபூர்
இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோரின் கடன் மோசடி பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்னர் நாட்டை விட்டு ஓடியது போல் தற்போது யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர் மகள் ரோஷினி கபூர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
மும்பை விமான நிலையம்
யெஸ் வங்கியின் தலைவர் ரானா கபூர்-இன் மகள் ரோஷினி கபூர் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் வாயிலாக லண்டனுக்குச் செய்ய முயற்சி செய்துள்ளார். லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் வரும் போதும் சோதனையில் விமான நிலைய காவல் அதிகாரிகளால் ரோஷினி கபூர் லண்டன் செல்வதைத் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது கிடைத்துள்ள தவல்களின் படி யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் மற்றும் அவரது குடும்பம் (மனைவி மற்றும் 3 மகள்கள்) சேர்ந்து சுமார் 20 போலி நிறுவனங்களை உருவாக்கி மிகப்பெரிய அளவிலான மோசடிகளைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.