இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் குறைந்தது 10 பேரில் 4 பேராவது 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த விகிதம் பல ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தேசிய பங்குச் சந்தை வெளியிட்ட ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, இந்த முதலீட்டாளர்களில் தோராயமாக 70 சதவீதம் பேர் 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் முதலீட்டாளர்களின் விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. அதே நேரத்தில் பழைய முதலீட்டாளர்களின் விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் மே 31, 2024 வரை 30 வயதிற்கு உட்பட்ட முதலீட்டாளர்களின் வளர்ச்சி 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக இந்திய முதலீட்டாளர்கள் சராசரியாக 32 வயதிலிருந்து 36 வயதுடையவர்கள் அதிகம் இருந்தனர். இதற்கு நேர்மாறாக, மார்ச் 2018-ஆம் ஆண்டின் முடிவில், பங்கு சந்தையின் புள்ளி விவரங்களின் படி 38 வயது முதல் 41 வயதுடைய முதலீட்டாளர்கள் அதிகரித்தனர்.
இருப்பினும், பெரும்பாலான இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதற்குப் பின்பு ஒவ்வொரு ஆண்டும் இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 60 வயதிற்கு மேற்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2018-ஆம் ஆண்டில் 12.7 % ஆக இருந்தது.
அதன் பின், 2024 மே மாதத்தில் 7.3% ஆக குறைந்துள்ளது. அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் 40 வயதிற்குட்பட்டவர்கள் 53.9% மாக உள்ளனர். மே மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இனி வரும் நாட்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையின் இந்த அறிக்கை, இந்திய பங்குச் சந்தையில் இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. இது பங்குச் சந்தையின் நீண்ட கால வளர்ச்சிக்கு நம்பிக்கையளிக்கும் அறிகுறியாகும். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் நிதி இலக்குகள், ஆபத்து போன்றவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம்.
இளம் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் நுழைவதன் நன்மைகள்:
நீண்ட கால வளர்ச்சி: இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவதனால், வட்டி மற்றும் கூட்டு வட்டியின் நன்மைகளைப் பெற முடியும்.
நிதி கல்வி: பங்குச் சந்தையில் நுழைவதன் மூலம், இளம் முதலீட்டாளர்கள் நிதி பற்றிய கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது எதிர்காலத்தில் சிறந்த நிதி முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு உதவும்.


Click it and Unblock the Notifications