கிரெடிட் கார்டு, டெபிடிட் கார்டு' விபரங்கள் என, 4.6 லட்சம் இந்தியர்களின் விபரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் ஐ.பி என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களைப் புரியும் ஜோகர் என்ற இணையதளத்தில்,சமீபத்தில், 4.6 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது
கார்டு விவரங்கள் விற்பனை
இந்த 4.6 லட்சம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விபரங்களில் 98 சதவிகிதம், இந்தியாவைச் சேர்ந்த பிரபல வங்கிகள் வழங்கியவை என்று கூறப்படுகிறது. அதாவது மொத்தம் 4.5 லட்சம் கார்டுகள், இந்தியாவில் வழங்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. ஒரு கார்டு விபரம் 643 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மொத்த மதிப்பு இது தான்
இந்த கார்டுகளின் மொத்த மதிப்பு 4.2 மில்லியன் டாலர் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த 4.5 லட்சம் பேரின் விபரங்கள் மூலம், அவர்களுடைய கார்டுகளில் உள்ள பணத்தை திருடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சிங்கப்பூர் நிறுவனம் எச்சரித்துள்ளது.
என்ன விவரங்கள் விற்பனை?
இந்தியர்களின் கார்டுகள் விபரம் திருடப்பட்டுள்ளது குறித்து, கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், இந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எச்சரித்துள்ளது. விற்கப்பட்ட தரவுகளில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளின் எண், அதன் காலாவதி தேதி, சிவிவி, சிவிசி எண்கள், கார்டு உரிமையாளர்களின் பெயர்கள், ஈமெயில், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தகவல்கள் திருட்டு
பெரும்பாலான கார்டுகள் விவரங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் பாயின்ட் ஆப் சேல் கருவியில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவிகள் மூலம் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் ஸ்டாஷ் இணையதளத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை பெறும் கிரிமினல்கள் போலி அட்டைகளை தயாரித்து பணத்தை திருடுகின்றனர்.