உலகம் முழுவதும் தற்போது சின்னச்சின்ன வீடியோக்களை கொண்ட செயலிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.
குறிப்பாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் பல நாடுகளில் இயங்கிவரும் டிக்டாக் செயலிக்கு இருக்கும் யூசர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை தரும்.
அந்தவகையில் வீடியோ செயலி என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வரும் யூடியூப், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் ஷார்ட்ஸ் என்ற செயலியை தொடங்கியது.
யூடியூப் ஷார்ட்ஸ்
யூடியூப் ஷார்ட்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் குறுகிய காலத்திலேயே இந்த செயலி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் யூசர்கள் சின்னச்சின்ன வீடியோக்களை இதில் மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
30 பில்லியன்
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாள் ஒன்றுக்கு 30 பில்லியன் பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் 100 மில்லியன் டாலர் யூடியூப் ஷார்ட்ஸ் நிதியை அறிமுகப்படுத்தியது என்பதும் இது படைப்பாளர்களுக்கு மாதம் 10,000 டாலர் வரை பணம் செலுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிதி
வீடியோவின் தன்மை மற்றும் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப யூடியூப் ஷார்ட்ஸ்-ல் வீடியோ பதிவு செய்தவர்களுக்கு நிதி வழங்கியதால் இந்த செயலியில் வீடியோவை பதிவு செய்வதில் ஷார்ட்ஸ் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
லாபம்
இதுகுறித்து ஆல்பாபெட் CFO ரூத் போரட் அவர்கள் கூறியபோது, யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் மேலும் லாபம் ஈட்டுவதற்கான வழிகளை சோதனை செய்து வருவதாகவும் குறிப்பாக விளம்பரதாரர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு வருவதாகவும் கூறினார்.
விளம்பர வருவாய்
யூடியூப் ஷார்ட்ஸ் செயலி மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை பெற்று வருவதால் விளம்பர வருவாயையும் மிகப்பெரிய அளவில் ஈட்டுவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. டிக் டாக் செயலிக்கு இணையாக தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் செயலியையும் பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டதால் நாளுக்குநாள் அதன் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது.