இந்திய தொலைக்காட்சி வர்த்தக சந்தையில் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கும் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவரான புனித்-ஐ இந்நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரான இன்வெஸ்கோ நீக்க திட்டமிட்டு வந்த நிலையில், ஜீ என்டர்டெயின்மென்ட் நிர்வாகம் மிகப்பெரிய திட்டத்தை அறிவித்து மொத்த சந்தையையும் புரட்டிப்போட்டு உள்ளது.
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை மொத்தமாக ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான சோனி கார்ப்-இன் இந்தியக் கிளை நிறுவனமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா உடன் இணைக்க இரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த இணைப்பு மூலம் புனித் தலைமையிலான நிர்வாகம் இன்வெஸ்கோ நிறுவனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
சோனி இந்தியா - ஜீ என்டர்டெயின்மென்ட்
சோனி இந்தியா - ஜீ என்டர்டெயின்மென்ட் இணைப்பு இந்தியத் தொலைக்காட்சி பொழுதுபோக்குச் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகமாகக் கருதப்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. இதன் மூலம் சக போட்டி நிறுவனங்கள் எளிதாக முந்தியுள்ளது மட்டும் அல்லாமல் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளது.
இந்தியாவின் நம்பர் 1
இரு நிறுவனங்கள் இணைப்பு மூலம் இக்கூட்டணி நிறுவனத்தில் 75 டிவி சேனல்கள், 2 வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் (ZEE5 and Sony LIV), இரண்டு திரைப்பட ஸ்டூடியோ (Zee Studios and Sony Pictures Films India), மற்றும் ஒரு டிஜிட்டல் கண்டென்ட் ஸ்டூடியோ (Studio NXT) ஆகியவற்றுடன் ஸ்டார் & டிஸ்னி இந்தியா-வை விடவும் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜீ - சோனி கூட்டணி.
புனித் கோங்கா - நிர்வாகக் குழு ஒப்புதல்
சோனி இந்தியா - ஜீ என்டர்டெயின்மென்ட் இணைப்பு குறித்து இரு நிறுவனங்களின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தக் கூட்டணி நிறுவனத்தின் தலைவராகப் புனித் கோங்கா தொடர்ந்து நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சோனி பிக்சர்ஸ் தலைவரான என்பி சிங்-ன் நிலை என்ன என்பது தெரியவில்லை.
ஐபிஎல்-க்கு ரெடி
மேலும் கூட்டணி நிறுவனத்தின் மூலம் 16,000 கோடி ரூபாய் வருடாந்திர வருமானம், 4,000 ஊழியர்கள் என மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்டமைப்பு மூலம் சோனி ஐபிஎல் 5 வருட ஓளிப்பரப்பு வர்த்தகத்தில் ஆதிக்கத்துடன் களத்தில் இறங்கலாம். இதனால் முகேஷ் அம்பானியின் வாய்காம் 18 மற்றும் அமேசான் நிறுவனங்களின் கனவு நிறைவேறாமல் போகலாம்.
பங்கீடு அளவுகள்
தற்போது செய்யப்பட்டு உள்ள ஒப்பந்தப்படி இக்கூட்டணி நிறுவனத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட் 61.25 சதவீத பங்குகளையும், சோனி 38.75 சதவீத பங்குகளைப் பெறும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால் சோனி வர்த்தக வளர்ச்சிக்காக இக்கூட்டணி நிறுவனத்தில் சுமார் 1.575 பில்லியன் டாலர் அதாவது 11,615 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜீ என்டர்டெயின்மென்ட் எவ்விதமான புதிய முதலீட்டையும் செய்யவில்லை.
ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குச்சந்தை
இதனால் இந்த இணைக்கப்பட்ட சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா 52.93 சதவீத பங்குகளையும், ஜீ என்டர்டெயின்மென்ட் 47.07 சதவீத பங்குகளையும் பெறுகிறது. மேலும் இணைப்பிற்குப் பின்பும் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குச்சந்தையில் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்ட காரணத்தால் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சோனி குரூப் ஆதிக்கம்
மேலும் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் அதிகப்படியான தலைவர்கள் சோனி குரூப் சார்ந்தவர்கள் இருப்பார்கள் என்று இக்கூட்டணி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இணைப்பு மற்றும் அதன் பின் வரும் நிர்வாக மாற்றங்கள், அரசு ஒப்புதல்கள் அனைத்தையும் ஜீ என்டர்டெயின்மென்ட் செய்ய உள்ளது.
தடாலடி உயர்வு
இந்த அறிவிப்பின் மூலம் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகளின் விலை இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 18.76 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதீத லாபத்தைக் கொடுத்துள்ளது.
52 வார உயர்வு
இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் சுமார் 78.68 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குகள் அதிகப்படியாக 319.50 ரூபாய் வரையில் உயர்ந்து 52 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது.