நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும் ரெசசனை எதிர்கொள்ளலாமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தியாவில் முதலீடுகளை தொடரலாமா? அல்லது குறைத்துக் கொள்ளலாமா? என்ற குழப்பமான நிலை இருந்து வருகின்றது. எனினும் மற்ற சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்தியா பெரியளவில் பாதிக்கப்படவில்லை என்ற வெளித் தோற்றமே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது, நடப்பு நிதியாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளார்.
ரெசசனுக்கு வாய்ப்பில்லை
மேலும் இந்தியாவில் ரெசசனுக்கு வாய்ப்பே இல்லை. இந்தியா இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என நான் நம்புகிறேன். நாங்கள் அதற்காக வேலை செய்வோம்.. ஆக நீங்கள் மந்த நிலையின் விளிம்பில் இல்லை. இது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது என முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக கூறியுள்ளார்.
விரைவில் மீட்சி
இந்தியாவில் வளர்ச்சி விகிதம் விரைவில் மீண்டு வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து எரிபொருள் நுகர்வு அதிகரித்து வருகின்றது. ஆர்பிஐ பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜிடிபி வளர்ச்சியும் முதல் காலாண்டில் 13.5% ஆக வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. இது முன்னதாக 20.1% ஆக இருந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் சிறப்பான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளோம்.
மற்ற நாடுகளின் மந்த நிலை
சிலர் குறைந்த அடித்தளத்தில் எப்படி இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது என வாதிடலாம். ஆனால் இந்தியா உண்மையிலேயே வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஒரு பொருளாதாரமாகும்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளை குறிப்பிட்டவர், இந்தியாவோடு வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அவை மந்த நிலையில் உள்ளதை பார்க்க முடிகிறது என்றும் கூறியுள்ளார்.
இலவசம்
இலவசம் பற்றிய கருத்தினை கூறியவர்... நீங்கள் எதையாவது இலவசமாக கொடுக்கிறீர்கள் எனில், அதற்கு யாரோ ஒருவர் பணம் செலுத்துகிறார் என அர்த்தம். இலவசங்களை வழங்குவதற்கு முன்பு அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுங்கள். நிதி நிலைமையை ஆராய்ச்சி செய்யுங்கள்.
2வது பொருளாதாரம்
கடந்த சனிக்கிழமையன்று 2047ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என பி வி ஆர் சுப்ரமணியம் கூறியிருந்தார். இன்னும் சில ஆண்டுகளில் முதல் 4 இடங்களில் ஒன்றாக இருக்கும். பிரதமர் மோடியின் தொலை நோக்கு திட்டத்தின் மத்தியில் 2047ல் இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
முதலீட்டாளர்கள் ஹேப்பி
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தானது முதலீட்டாளர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு உத்வேகத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்னிய முதலீடுகளிலும் பெரியளவில் வெளியேற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.