இந்தியாவின் முன்னணி ஐடி மற்றும் SAAS சேவை நிறுவனமான சோஹோ-வின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், தனது ஊழியர்கள் அனைவருக்கும் Work From Home ஆப்ஷன் கொடுத்த நிலையில் தானும், தனது அலுவலகத்தைத் தான் வளர்ந்த கிராமத்திற்கே மொத்தமாக மாற்றியுள்ளார்.
மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக வாழ்ந்து வரும் ஸ்ரீதர் வேம்பு அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்வதுண்டு. அப்படி நேற்று ஒரு ட்வீட் செய்தது வைரலாகியுள்ளது.
Zoho ஸ்ரீதர் வேம்பு
Zoho சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தற்போது தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் தனது சொந்த ஊரில் வசித்து நிறுவன பணிகளை நிர்வாகம் செய்து வரும் நிலையில், நேற்று தனது ஊரில் அரசின் குழாய் வழியில் தண்ணீர் சேவை அளிக்கப்பட்டு உள்ளதையும், அரசின் கட்டமைப்பையும் விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு ட்வீட்
இந்நிலையில் Zoho சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தனது ட்வீட்டில் அரசின் குழாய் வாயிலாகக் குடிநீர் விநியோக திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் என்னுடைய சொந்த ஊரில் வந்துள்ளது. தற்போது எங்கள் கிராமத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு வந்துள்ளது. நம்முடைய ஜனநாயக அமைப்பு ஸ்லோ என்றாலும் பணிகளைக் கட்டாயம் முடித்துவிடும் என்று ட்வீட் செய்துள்ளார்.
வைரல் ட்வீட்
ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த ட்வீட்-க்கு பலரும் பல விதமான ட்வீட் செய்திருந்தாலும், இந்த ட்வீட்-ஐ 1,100 பேருக்கு மேல் ரீட்வீட் செய்து இருந்தனர். இதேபோல் 6,800 பேருக்கு மேல் விரும்பியுள்ளனர். ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த ட்வீட்டுக்கு மக்கள் கொடுத்த பதிலை பாருங்க..
ஜனநாயகம் ஸ்லோ
ஸ்லோ இல்ல, ரொம்பவே ஸ்லோ.. பல தலைமுறைகளாக இந்த அடிப்படை சேவைகள் கூட இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவை அனைத்தும் சரியான திட்டமிடல் மூலம் கட்டாயம் செய்திருக்க முடியும் என நான் நம்புகிறேன் எனச் சந்திர சேகர் ஜா தெரிவித்துள்ளார். சரியாக பணியாற்றாமல் இருப்பதற்கு ஜனநாயகத்தைக் குறை சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சாலை, ரயில் சிறப்பாக உள்ளது
இதற்கு ஸ்ரீதர் வேம்பு ஜனநாயகத்தில் Self Government மிகவும் முக்கியமான ஒன்று, இதை மேம்படுத்தக் காலம் தேவைப்படும். நம்முடைய நெடுஞ்சாலை, சாலை சிறப்பாக உள்ளது, ரயில்கள் மற்றும் ரயில்வே நிலையங்கள் சிறப்பாக உள்ளது. இன்னும் பல விஷயங்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது எனப் பதில் அளித்துள்ளார்.
குழாய் வழியில் குடிநீர்
இன்னும் சில குழாய் வழியில் குடிநீர் கொடுப்பது நீண்ட காலம் நீடிக்காது. நிலத்தடி நீர் அளவை மேம்படுத்த வேண்டும் எனச் சிலரும், இன்னும் சிலர் ஸ்ரீதர் வேம்பு நீங்கள் இந்தப் பதிவைக் கிண்டலாகப் பதிவிட்டு உள்ளீர்களா எனக் கேட்டு உள்ளனர்.
5 கோடி வீடுகள்
கார்த்திக் என்பவர் கடந்த 2 வருடத்தில் இந்தியக் கிராமத்தில் இருக்கும் 5 கோடி வீடுகளுக்குத் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு இதற்கு முன்பு தண்ணீர் இணைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.