இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக விளங்கும் ஜோஹோ நிறுவனம், "ஜோஹோ கிளாசஸ் 2.0" என்ற புதிய கல்வித் தளத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என்று நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டமாக இந்த தளம் இந்தியாவில் அறிமுகமாகிறது. விரைவில் உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்த தளத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளை தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் 500 ரூபாய் என்ற சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவே 100 மாணவர்கள் வரை வைத்து தனியாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இந்த தளத்தை இலவசமாக பயன்படுத்தலாம்.
இதற்கு முன்னர் இதே போன்ற பல தளங்கள் வெளியாகி இருக்கிறது. அவை அனைத்திலும் வெறும் கன்டென்ட் மட்டும் இருக்கும். அதாவது பாடத்திட்டம் குறித்த விவரங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்தத் தளத்தில் ஒரு கல்வி நிறுவனம் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் படிப்பதற்கும், அவ்வப்போது நடத்தப்படும் பாடங்களுக்கு தேர்வுகள் வைப்பதற்கும் இந்த தளம் உதவியாக இருக்கும். இதைப் பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம்.
இன்றைய ஜென் Z தலைமுறையினரிடம் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்திக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு போர் அடித்து விடும். இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் கருத்தில் கொண்டு தான் ஜோஹோ கிளாசஸ் 2.0 உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் தேவ் ஆனந்த் ராமசாமி.
ஜோஹோ கிளாசஸ் 2.0 தளத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், ஆசிரியர்கள் நீண்ட நேரம் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. வெறும் 30 நிமிடங்களில் பாடங்களை உருவாக்குவது, அசைன்மென்ட் மற்றும் குவிஸ் போன்றவற்றை தயாரிப்பது என அனைத்து வேலைகளையும் இந்த AI தளமே உருவாக்கிவிடும். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுடன் அதிக நேரம் கலந்துரையாடலாம்.
பிளிப்ட் கிளாஸ்ரூம் முறையை இந்தியாவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாணவர் முதல் முறையாக குறிப்பிட்ட பாடத்தை, ஆசிரியர் நடத்தும் போது தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லாமல்.. அந்த பாடம் நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அந்தந்த மாணவர்களுக்கு AI தயாரித்த பாடம் அனுப்பப்படும்.
இதனால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு முன்பே மாணவர்கள் அதை ஓரளவுக்கு படித்து விட்டு வருவார்கள். அதன் பின் மாணவர்கள் QR கோடை ஸ்கேன் செய்தால் அதில் நடத்தப்பட்ட பாடம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதனால் அவர்களுக்கு எந்த அளவுக்கு பாடம் புரிந்து இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள முடியும்
ஜோஹோ கிளாசஸ் 2.0 சுமார் 22 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இந்தியாவில் பல மொழிகளில் பேசும் மக்கள் உள்ளனர். எனவே பலதரப்பட்ட தாய் மொழியை கொண்ட மாணவர்களும் எளிதில் கற்க வேண்டும் என்பதற்காகவே 22 மொழிகளில் கொண்டுவரப்பட்டுள்ளது. மராத்தி, குஜராத்தி, தமிழ் போன்ற ஏதேனும் ஒரு மொழியை தேர்ந்தெடுத்த பிறகு முழு தளமும் அந்த மொழிக்கே மாறிவிடும்.
பாடத்திட்டத்திற்கு அப்பால் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கல்வி நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சொந்தமாக அப்ளிகேஷன்களை உருவாக்கிக் கொள்ளவும் இந்த தளம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதில் லோ கோட் ஆப் பில்டர் இருக்கிறது. அதாவது கோடிங் தெரியாதவர்களும் எளிதில் அப்ளிகேஷனை உருவாக்கலாம். அதை வைத்து கல்வி நிறுவனங்கள் தாங்களே தங்கள் தேவைக்கு ஏற்ப அப்ளிகேஷன்களை செய்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை எஸ்ஆர்எம் இன்ஸ்டியூட், சிஷ்யா ஸ்கூல், செட்டிநாடு ஹெல்த் சிட்டி, வித்யா மந்திர் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஜிஎஸ்சி இன்ஸ்டியூட் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications
