தற்போது உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு சென்று விட்டு சொந்தமாக வீடு வாங்குவது, நிதி ரீதியாக செட்டிலாவது என கடமைகளை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.
ஆண்கள் , பெண்கள் என இருவருமே வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் அல்லது சொந்தமாக ஒரு சுயதொழில் தொடங்கி அதில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தள்ளிபோடுகின்றனர். இந்த சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் தங்களுடைய 20களிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார் .

அப்பல்லோ ஹாஸ்பிடல் நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரனின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் . அதில் அண்மையில் நான் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன் , அங்கே இருந்த பல மாணவிகளுடன் உரையாடியபோது திருமணத்திற்கு முன்னர் நிதி ரீதியாக தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், நிதி ரீதியான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது என பதிவு செய்துள்ளார்.
உபாசனாவின் இந்த பதிவை குறிப்பிட்டு இருக்கும் ஸ்ரீதர் வேம்பு, நான் சந்திக்கும் இளம் தொழில் முனைவோர்களிடம் எல்லாம் கூறுவது இதுதான் 20களிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் தயவு செய்து அதை தள்ளி போட்டுக்கொண்டே இருக்காதீர்கள் என நான் கூறுவேன் என்னுடைய இந்த அறிவுரை உங்களுக்கு பழைய அறிவுரையாக தோன்றலாம் ஆனால் இதை நான் திரும்பத் திரும்ப நிச்சயம் கூறுவேன் என கூறியிருக்கிறார் .

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தனிப்பட்ட ஒரு விருப்பம் மட்டுமல்ல இந்த சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை எனக் கூறியிருக்கிறார் . அவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் சரியான திருமண வயது எது எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பெரிய விவாதத்தையே எழுப்பி இருக்கிறது.
ஒரு சிலர் இளைஞர்கள் தற்போது திருமணத்தை தள்ளி போடுவதற்கு காரணம் கலாச்சார மாற்றம் அல்ல வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்து இருப்பது தான் என்கின்றனர். நிலையில்லாத வேலைகள், அதிக வாழ்க்கை செலவினம், வருமானத்தில் 40 சதவீதம் வாடகைக்கு சென்று விடுவது உள்ளிட்டவை தான் காரணம் என ஒரு பயனர் கூறியிருக்கிறார். இது பொருளாதாரப் பிரச்சினை என்றும் இது ஒரு அமைப்பு ரீதியிலான பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் இந்த செலவினங்களை ஏற்கும் பொருளாதார சூழல்களில் இருப்பவர்கள் கூட திருமணத்தையும் குழந்தை பெற்று கொள்வதையும் தள்ளி போடுகிறார்களே அதை தான் நான் வேண்டாம் என்கிறேன் என பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications