இந்தியாவில் பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு உள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மோசமான சரிவை எட்டியுள்ளது. இந்த நிலையிலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் தயாராக இருப்பது மட்டும் அல்லாமல் சரியான சந்தை சூழ்நிலைக்குக் காத்திருக்கிறது.
இந்த நிலையில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி நிறுவனமான ZOHO எப்போது பங்குச்சந்தைக்கு வரும் எனக் கேள்வி கேட்டபோது அதன் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு என்ன கூறினார் தெரியுமா..?!
பொருளாதாரம்
கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பல்வேறு காரணங்கள் மத்தியில் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலை அதாவது ரெசிஷனுக்குச் செல்லும் நிலையில் பிற துறைகள் போலவே SaaS துறையின் வர்த்தகமும் பாதிக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறார் ZOHO நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு.
SaaS துறை
SaaS துறையின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை முழுமையாகக் கணிக்கப்படாவிட்டாலும் மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் எச்சரிக்கைகள் வந்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு
யாரும் இதுபோன்ற நிலைக்கு முன்கூட்டியே தயாராக முடியாது ஆனால் எங்கள் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையைப் பார்க்கும் போதும் பயங்கரமான நிலநடுக்கத்தில் சிறிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்வோம் என்று தனது போட்டியில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ஐபிஓ எப்போது
இந்நிலையில் எப்போது ஐபிஓ வெளியிடப் போகிறீர்கள் எனக் கேட்ட போது, ஸ்ரீதர் வேம்பு ஐபிஓ வெளியிடும் திட்டம் எங்களுக்கு இல்லை. எங்கள் நிறுவனத்தில் எங்களுக்கு இருக்கும் சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க உறுதியாக இருப்பதால் ஐபிஓ வெளியிட எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
காலாண்டு முடிவுகள்
பங்குச்சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் அதிகப்படியான ப்ரெஷர்-ஐ எதிர்கொண்டு வருகிறது. இது நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும், இது எங்களுக்கு வேண்டாம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
நான் சிஇஓ
இதோடு இப்போதைக்கு ZOHO நிறுவனத்தை ஐபிஓ வெளியிட திட்டம் இல்லை, இதேபோல் நான் சிஇஓ-வாக இருக்கும் வரையில் ஐபிஓ வெளியிட மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஸ்ரீதர் வேம்பு தலைமையில் ZOHO தற்போது தமிழ்நாட்டில் 2ஆம் தர நகரங்களில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் தீவிரமாக உள்ளது.