இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ-வின் 10 நிமிட சேவை அறிமுகம் மூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் இன்று இந்த 10 நிமிட டெலிவரியின் நிலை என்ன தெரியுமா..?
சோமேட்டோ
ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் உணவக முன்பதிவு சேவை அளிக்கும் நிறுவனமான சோமேட்டோ தனது வர்த்தகத்தைப் பல பிரிவுகளில், பல பகுதிகளில் விரிவாக்கம் செய்து வந்தாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
10 நிமிட டெலிவரி
இந்த நிலையை மாற்ற வேண்டும், சக போட்டி நிறுவனங்களுக்கு அதிகப்படியான போட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காக 10 நிமிட டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்து சோமேட்டோ. இந்தியா முழுவதும் இத்திட்டத்திற்குப் பல எதிர்ப்புகளை எதிர்கொண்ட வேளையில், சென்னை காவல் துறை சோமேட்டோவிடம் நேரடியாக இத்திட்டத்தின் செயல்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்துக் கேள்வி எழுப்பியது.
குர்கான்
இந்தச் சூழ்நிலையில் சோமேட்டோ நிறுவனம் பல எதிர்ப்புகள் மத்தியிலும் தனது 10 நிமிட டெலிவரி சேவை திட்டத்தைக் குர்கானில் சோதனை திட்டமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இங்குத் தான் பெரிய ட்விஸ்ட் நடந்தது.
தாமதம்
இந்த 10 நிமிட டெலிவரி திட்டத்தின் சோதனையின் போது அனைத்து ஆர்டர்களும் 10 நிமிட நேர இலக்கை அடைய முடியாமல் போனதால், இத்திட்டத்தை மறுமதிப்பீடு மற்றும் மறு ஆய்வு செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியப் பிரச்சனை
ஆன்லைன் சேவை நிறுவனத்தில் தற்போது டெலிவரி ஊழியர்கள் பற்றாக்குறை மிகவும் அதிகமாக உள்ளது. இதேபோலே தென் மாநிலங்களைக் காட்டிலும் வடக்கு மாவட்டத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கிறது. இது டெலிவரி ஊழியர்கள் பணியாற்றுவதற்குக் கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
15-20 நிமிடங்கள் தாமதம்
இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் தான் சோமேட்டோ நிறுவனத்தின் இன்ஸ்டன்ட் சேவை வழங்கும் 10 நிமிட டெலிவரி சேவை, 15-20 நிமிடங்கள் தாமதத்தை ஏற்படுகிறது. மேலும் சோமேட்டோ இன்ஸ்டன்ட் சேவைக்கான தனி டெலிவரி குழு மற்றும் நிர்வாகக் குழு இல்லாமல் இயங்குகிறது. இதனாலும் 10 நிமிட டெலிவரி சேவையைத் திறம்பட முடிக்கவில்லை.
பெங்களூர்
ஆனால் சோமேட்டோ தரப்பில் குர்கானில் பிற பகுதிகளுக்கு 10 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் முன் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்ய உள்ளதாக இந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேபோலே பெங்களூரில் அறிமுகம் செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
சிசிஐ அமைப்பு
Zomato மற்றும் அதன் சக போட்டி நிறுவனங்களின் இந்த விரைவான டெலிவரி திட்டம் குறித்து இந்திய போட்டி ஆணையம் (CCI) விசாரணை துவங்கியுள்ள நிலையில், இத்திட்டத்தின் விரிவாக்கம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.