இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனமான சோமேட்டோ Blinkit நிறுவனத்தின் இணைப்பிற்குப் பின்பு பணிநீக்க அறிவிப்பை எதிர்பார்த்திருந்த நிலையில் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டும் தொடர்ந்து பங்கு மதிப்பு சரிவுக்கு மத்தியில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் மெட்டா, டிவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் ஆகியவையும் இந்தியாவில் பைஜூஸ் உட்படப் பல எட்டெக் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது சோமேட்டோவும் மாட்டிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
தீபேந்தர் கோயல்
தீபேந்தர் கோயல் தலைமையிலான சோமேட்டோ நிறுவனத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் இணை நிறுவனர் உட்பட 3 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது டெக்னாலஜி, ப்ராடெக்ட், மார்கெட்டிங் என அனைத்து முக்கியக் கார்பரேட் நிர்வாகப் பிரிவில் இருந்தும் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
3% ஊழியர்கள் பணிநீக்கம்
சோமேட்டோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் எங்களது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 3 சதவீத பேரை பணிநீக்க செய்ய முடிவு செய்துள்ளோம், இதற்கு மேல் யாரையும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என விளக்கியுள்ளார்.
120 ஊழியர்கள் பணிநீக்கம்
சோமேட்டோ நிறுவனத்தில் தற்போது 3800 ஊழியர்கள் உள்ளனர், இதில் 100- 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது. சோமேட்டோ நிறுவனம் கொரோனா காலத்தில் அதாவது மே மாதம் 2020ல் சுமார் 13 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதில் 520 பேர் தங்களது பணியை இழந்தனர்.
மோஹித் குப்தா
சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் மோஹித் குப்தா 4.5 வருடம் பணியாற்றிய பின்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். மோஹித் குப்தா 2018 ஆம் ஆண்டில் சோமேட்டோ உணவு விநியோக பிரிவின் தலைவராகச் சேர்ந்தார். இதன் பின்பு 2021ல் ஐபிஓ-வுக்கு முன்பு இணை நிறுவனர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். சோமேட்டோவில் சேருவதற்கு முன்பு, மோஹித் குப்தா MakeMyTrip நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார்.
ராகுல் கஞ்சூ
சோமேட்டோவின் புதிய முன்முயற்சிகள் பிரிவின் தலைவரும் முன்னாள் உணவு விநியோகத் தலைவருமான ராகுல் கஞ்சூ இந்த வார துவக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சித்தார்த் ஜாவர்
இதற்கு முன்பு சோமேட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் சேவை பிரிவின் தலைவரான சித்தார்த் ஜாவர் ராஜினாமா செய்து நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக அறிவித்தார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணிநீக்கம் இருந்தாலும் அதில் பெரும்பாலான நிறுவனங்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாமலும், புதிய முதலீடுகளைப் பெற முடியாத காரணத்தால் மட்டுமே பணிநீக்கம் செய்தது.
நிதி ஆதாரங்கள்
ஆனால் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், பொருளாதார மந்த நிலை காரணமாகப் போதிய நிதி ஆதாரங்கள் இருந்தும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து. தற்போது இதேபோன்ற காரணத்திற்காகச் சோமேட்டோ நிறுவனம் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
1 பில்லியன் டாலர் மார்க்
சோமேட்டோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் அட்ஜெஸ்ட் வருவாயாக 2,107 கோடி ரூபாய் அதாவது 1.05 பில்லியன் டாலர் என்ற 1 பில்லியன் டாலர் மார்க் அளவீட்டை முதல் முறையாக எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. இது கடந்த வருட அளவீட்டை ஒப்பிடுகையில் 48 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.