இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ-வின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான தீபிந்தர் கோயல் தனது ESOP மூலம் கிடைத்த 700 கோடி ரூபாய் தொகையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இவரின் நன்கொடை ஸ்டார்ட்அப் உலகில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் நிலையில் தீபிந்தர் கோயல் ஏன் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தார்.. இந்த 700 கோடி ரூபாயை வைத்து சோமேட்டோ நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பதில் தான் சுவாரஸ்யமான தகவல்கள் ஒழிந்துகொண்டு இருக்கிறது.
சோமேட்டோ
தீபிந்தர் கோயல் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிறுவனத்தின் கடந்த ஒரு வருட வளர்ச்சி அடிப்படையில் ESOP மூலம் நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்களின் ஒப்புதல் உடன் தனக்கு வந்த 700 கோடி ரூபாய் அளவிலான பங்குகளைச் சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷன் நிறுவனத்திற்குச் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
ESOP பங்குகள்
கடந்த மாதத்தின் சராசரி விலை அளவுகள் படி தனது கிடைத்த ESOP பங்குகளின் மதிப்பு 700 கோடி ரூபாய். இந்தத் தொகையைத் தற்போது சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷன் தீபிந்தர் கோயல் செலுத்த உள்ள நிலையில், நிர்வாகம் மிகவும் முக்கியமான திட்டத்திற்கு இத்தொகையைப் பயன்படுத்த உள்ளது.
கல்வி உதவி தொகை
சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷனில் இருக்கும் பணத்தைக் கொண்டு சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி பார்ட்னராக 5 வருடம் தொடர்ந்து பணியாற்றுபவர்களின் குழந்தைகளின் ( அதிகப்படியாக 2 குழந்தைகள்) வருடம் 50000 ரூபாய் அளவிலான கல்விக்கான செலவுகளைச் சோமேட்டோ ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோமேட்டோ டெலிவரி பார்ட்னர்
இதேபோல் சோமேட்டோ டெலிவரி பார்ட்னராக 10 வருடம் பணியாற்றினால் இந்தக் கல்வி உதவி தொகை 100000 ரூபாய் வரையில் அதிகரிக்கும் எனவும், பெண் டெலிவரி பார்ட்னர்களுக்கு இதன் கால அளவு குறைவு, இதேபோல் டெவரி பார்னர்களின் பெண் குழந்தைகள் 12ஆம் வகுப்பு மற்றும் பட்ட படிப்பை முடிக்கும் பட்சத்தில் சிறப்புப் பரிசு தொகை அளிக்கப்படும் எனவும் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி உதவித்தொகை
இதனுடன், சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷன் வாயிலாக டெலிவரி பார்னர்களின் அதிகத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு உயர் கல்வி உதவித்தொகையை வழங்கும் என்று கோயல் கூறினார்.
விபத்து உதவித்தொகை
இந்த அறக்கட்டளையானது, பணியின் போது விபத்துகளைச் சந்திக்கும் அனைத்து டெலிவரி பார்ட்னர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் சேவை காலத்தைப் பொருட்படுத்தாமல், வாழ்வாதார ஆதரவை வழங்கும், கோயல் கூறினார்.
ஊழியர்கள் வெளியேற்றம்
அனைத்து உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் டெலிவரி சேவை நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் அதிகளவில் வெளியேறும் நிலையில் இதைக் கட்டுப்படுத்த இந்த முக்கியமான திட்டத்தைச் சோமேட்டோ பியூச்சர் பவுண்டேஷன் வாயிலாகத் தீபிந்தர் கோயல் செயல்படுத்தியுள்ளார்.