ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் முன்னணியில் இருக்கும் சோமோட்டோ நிறுவனம், ஆண்ட் குழுமத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் பொது பங்கு வெளியீட்டின் மூலம் 8,250 கோடி ரூபாய் வரை நிதி திட்டமிட்டுள்ளதாக தாக்கல் செய்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் உணவு டெலிவரியில் கணிசமான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. கடந்த 2020ம் நிதியாண்டில் அதன் வருவாய் முந்தைய நிதியாண்டினை காட்டிலும் இருமடங்கு அதிகரித்து, 2,960 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சோமேட்டோ பற்றி?
கடந்த 2008ல் டெல்லியில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் தான் சோமேட்டோ நிறுவனம் 250 மில்லியன் டாலர் நிதியினை திரட்டியது. இந்த நிலையில் இந்த ஸ்டார்டப் நிறுவனத்தின் மதிப்பு 5.4 பில்லியன் டாலராகும். சோமேட்டோ நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் பங்கு வெளியீட்டினை திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது தான் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.
பெயர் மாற்றம்
இந்த பங்கு வெளியீடானது பெரிதும் எதிர்பார்ப்பட்டு வரும் நிலையில், அதற்காக தயாராகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் தான் சோமேட்டோ லிமிடெட் என்றும் தனது பெயரை மாற்றியது. தற்போது சோமேட்டோ உணவகங்களுடன் இணைந்து வீட்டு பாணி உணவை உருவாக்கியுள்ளது. இது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் அதன் பயனர்களும் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
எவ்வளவு நிதி?
இதற்கிடையில் சோமேட்டோ நிறுவனம் 8,250 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை விற்பனை மூலம் திட்டமிட்டுள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் புதிய பங்கு வெளியீடு மூலம் 7,500 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். அதே நேரம் அதன் முந்தைய முதலீட்டாளர் Info Edge மூலம் 750 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பு
எஸ்பிஐ கார்டு பொது பங்கு வெளியீட்டுக்கு பிறகு, இது மிகப்பெரிய பங்கு வெளியீடாகும். இன்று சுகாதாரம், தனி மனித இடைவெளி என பல கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் மக்கள், இது போன்ற ஆன்லைன் நிறுவனங்களை நாடுவதால், இதன் வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இதன் பங்கு வெளியீடும் பெரிய அளவிலான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.