ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜோமேட்டோ இதுவரை 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உணவு டெலிவரி செய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இண்டர்சிட்டி நகரங்களுக்கு இடையே உள்ள வாடிக்கையாளர்களூக்கும் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் சென்னையில் இருந்து பெங்களூரில் உள்ள ஓட்டலில் ஆர்டர் செய்து வாடிக்கையாளர்கள் அந்த உணவை சாப்பிடலாம்.
ஜோமேட்டோ
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜோமேட்டோ இன்டர்சிட்டி உணவு விநியோக முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்று கூறப்படும் இந்த சேவையில் ஜோமேட்டோ வாடிக்கையாளர்கள் இனி இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தும் எந்த உணவகத்தில் இருந்தும் உணவை பெற்று கொள்ளலாம்.
தனித்துவமான உணவு
கொல்கத்தாவில் இருந்து ரோஷோகொல்லா, ஹைதராபாத்தில் இருந்து பிரியாணி ஆகிய உணவுகளை இனி சென்னையில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ய முடியும். ஜோமேட்டோவின் இந்த திட்டம் இந்தியாவின் எந்த நகரத்திலிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்துவமான உணவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இண்டர்சிட்டி சேவை
ஜோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டெபிந்தர் கோயல் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'இன்டர்சிட்டி சேவையை பயன்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள பல்வேறு உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று கூறினார்.
குருகுராம், தெற்கு டெல்லி
முதல்கட்டமாக இந்த சேவை குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக தொடங்கப்படும் என்றும், விரைவில் சென்னை, பெங்களூரு உள்பட மற்ற நகரங்களுக்கு இதை விரிவாக்க திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
7 முதல் 10 கிமீ
தற்போது, ஜோமேட்டோ அதன் 7 முதல் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் செய்யும் ஆர்டரை பெற்று உணவை டெலிவரி செய்து வருகிறது. ஆனால் இனி மாநிலம் விட்டு மாநிலத்திலும் உணவை ஆர்டர் செய்யலாம்.
எவ்வாறு செயல்படுகிறது?
'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்ற திட்டத்தின்படி ஜோமேட்டோவுக்கு வரும் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படும். உணவகத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு, சேதமடையாத கொள்கலன்களில் வைக்கப்பட்டு குளிர்பதன தொழில்நுட்பத்தை சேர்த்து பாதுகாப்புடன் டெலிவரி செய்யப்படும்.