ஆன்லைன் உணவு டெலிவரி வணிகத்தில் முன்னணியில் இருக்கும் சோமேட்டோ நிறுவனம், சமீப காலமாக நிறுவனத்தினை மேம்படுத்த நிதிகளை திரட்டி வருகின்றது.
அந்த வகையில் தற்போது நியூயார்க்கினை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் நிறுவனத்துடன் சோமேட்டோ கைகோர்த்துள்ளது.
இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் சோமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டில் பங்கு வெளியீடு
இதற்கிடையில் இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு நடுத்தர கால அளவில் பொது பங்கு வெளியீட்டினை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இடியில் வெளியான செய்தியொன்றில், சோமேட்டோ நிறைய நிதிகளை திரட்டியுள்ளதாகவும், வங்கியில் 250 மில்லியன் டாலர் நிதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உள்ளதாகவும் சோமேட்டோ தெரிவித்துள்ளது.
யார் யார் முதலீடு?
டைகர் குளோபல், டெமாசெக், பெய்லி கிஃபோர்ட் மற்றும் ஆண்ட் பைனான்ஷியல் என சில நிறுவனங்கள் ஏற்கனவே சோமேட்டோவில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இன்னும் பல பெரிய நிறுவனங்கள் இந்த நிதி திரட்டலில் முதலீடு செய்யப்போவதாகவும் சோமேட்டோ தெரிவித்துள்ளது. ஆக அவற்றுடன் சேர்த்து வரும் காலத்தில் எங்கள் வங்கி கணக்கில் 600 மில்லியன் டாலர் இருக்கலாம் என நாங்கள் மதிப்பிடுகிறோம் என்றும் கோயல் கூறியுள்ளார்.
தயாராகி வருகின்றோம்
இந்த நிதியினை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நாங்கள் இதுவரை திட்டமிடவில்லை. வருங்காலத்திற்கான போட்டிகளை சமாளிக்க எங்களுக்கு இது மிகவும் பயன்படும் என்றும் கூறியுள்ளார். இதே பொது பங்கு வெளியீடு பற்றி கூறியவர், அடுத்த ஆண்டு பாதியில் ஐபிஓ-வுக்கு செல்லலாம். எங்களின் நிதி குழு மற்றும் சட்ட குழுக்கள் கடுமையாக இதற்காக தயாராகி வருகின்றனர்.
நல்ல பலனைக் கொடுக்கும்
கொரோனா காலத்தில் முற்றிலும் முடங்கியிருந்த வர்த்தகம், தற்போது பல தளர்வுகளின் காரணமாக 80% மீண்டுள்ளதாகவும் கோயல் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் எங்களது பொது பங்கு வெளியீடு அடுத்த ஆண்டு பாதியில் எப்போது வேண்டுமானாலும் விரைவில் வரும். இது ஊழியர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல பலனைக் கொடுக்கும்.
ஆண்ட் பைனான்ஷியல் முதலீடு
இதற்கிடையில் சோமேட்டோவில் சீனாவின் ஆண்ட் பைனான்ஷியல் நிறுவனம் 25% பங்குகளைக் கொண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் 50 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. ஏனெனில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எஃப்டிஐ முதலீட்டு கொள்கையால் சோமேட்டோவால் குறைந்த முதலீடுகளை மட்டுமே அணுக முடிந்தது என்றும் கோயல் தெரிவித்துள்ளார்.