இந்தியாவில் பெருநகரங்களில் வசிக்கும் நபர்களின் போனில் கட்டாயம் Zomato, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செயலிகள் இருக்கும். நமக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தாலே நம் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறார்கள். இதனால் வார இறுதிநாட்களில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. இப்படி உணவு ஆர்டர் செய்பவர்களில் மத்தியில் Zomato பிரபலமாக உள்ளது.
Zomato நிறுவனம் தனது வருவாயை அதிகரிக்கும் வகையில் கேஷ் ஆன் டெலிவரி (Cash on Delivery - COD) எனப்படும் ரொக்க பணம் செலுத்தும் ஆர்டர்களுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. உணவு டெலிவரி தளங்கள் தற்போது ரெஸ்டாரண்ட்களிடம் வாங்கும் கமிஷன் தொகையை தாண்டி, வாடிக்கையாளர்களிடம் இருந்தும் பல்வேறு கட்டணங்கள் மூலமாக வருவாயை ஈட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, டிஜிட்டல் முறைகளை தாண்டி நேரடியாக பணத்தைக் கொடுத்து உணவு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரொக்க பணத்தை கையாளுவது, அதை சேகரித்து கணக்கு பார்ப்பது போன்றவற்றுக்கு நிறுவனத்திற்கு கூடுதல் செயல்பாட்டு செலவுகள் ஆகின்றன, டிஜிட்டல் பரிமாற்றங்கள் இந்த சிக்கல்களை தவிர்த்து நடைமுறையை எளிதாக்குகின்றன என இந்நிறுவனம் கூறுகிறது.
ஒரு ஆர்டருக்கு 5 ரூபாய் என்பது சிறிய தொகையாக தோன்றினாலும், லட்சக்கணக்கான ஆர்டர்கள் மூலம் Zomato நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக அமையும். ஏற்கனவே ஸோமாட்டோ செயலியில் பிளாட்பார்ம் கட்டணம் , டெலிவரி கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இந்த புதிய 5 ரூபாய் கட்டணமும் சேர்ந்துள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் பலர் ஆன்லைன் பேமெண்ட் முறைகளுக்கு மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸோமேட்டோ ஒரு நாளைக்கு 2.3 முதல் 2.5 மில்லியன் வரையிலான உணவு ஆர்டர்களை பெறுகிறது. அப்படி பார்த்தால் ஒரு டெலிவரி 5 ரூபாய் கட்டணம் என்றால் ஒரு நாளைக்கு 1.15 முதல் 1.25 கோடி ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும், ஓராண்டுக்கு இதன் மூலம் சுமார் 450 கோடி ரூபாய் வருமானம் கூடுதலாக கிடைக்கும்.
இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தை கடுமையான போட்டி நிறைந்த ஒன்றாக மாறிவிட்டது. நிறுவனங்கள் வெறும் ஆர்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், தங்களின் லாபத்தை ஈட்டுவதிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. பிளிப்கார்ட் கூட விரைவில் உணவு டெலிவரி சேவையில் இறங்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஸ்விக்கி மிக தீவிரமாக இந்த சந்தையில் செயல்பட்டு வருகிறது.
ஸோமேட்டோ நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தொடங்கி இருப்பதால் ஸ்விக்கியும் அதையே ஃபாலோ செய்யுமா என்ற கேள்வி எழுகிறது. அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு இது சிக்கல் தான்.


Click it and Unblock the Notifications


