இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது, குறிப்பாக நாட்டின் வர்த்தகத் தலைநகரம் மும்பை இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகமான தொற்று எண்ணிக்கை நிலவுகிறது.
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு ஏப்ரல் மாதம் முழுவதும் இரவு 8 மணியில் இருந்து ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆன்லைனில் உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களை 24 மணிநேரமும் டெலிவரி செய்ய அனுமதி பெற்றுள்ளது. இது ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவின் நீண்ட நாள் கனவு என்றால் மிகையில்லை.
ஆன்லைன் டெலிவரி சேவை
இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் 2020 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து என்றால் மிகையில்லை.
கொரோனா லாக்டவுன்
குறிப்பாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல பயப்பட்ட காலத்தில் ஆன்லைன் சேவைகள் மட்டுமே பல கோடி நகர மக்களைக் காப்பாற்றியது. இந்தக் காலகட்டத்தில் மருந்து பொருட்கள் முதல் மதுபானம் வரையில் ஆன்லைன் டெலிவரி செய்யப்பட்டது.
ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ முயற்சி
2020 லாக்டவுன் காலத்தில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ இந்தியா முழுவதும் உணவு, மளிகை பொருட்கள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை 24 மணிநேரமும் டெலிவரி செய்ய அனுமதி பெற மத்திய அரசிடமும், பல மாநில அரசிடமும் முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
மதுபானம் ஹோம் டெலிவரி
இதேவேளையில் மதுபானம் ஹோம் டெலிவரிக்கு சில மாநிலங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பல மாநிலங்கள் இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. மதுபான ஆன்லைன் டெலிவரியில் பல புதிய அனுபவத்தைப் பெற்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் முக்கிய எதிர்காலத் திட்டமாகவும் இதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரமும் ஹோம் டெலிவரி
இந்தச் சூழ்நிலையில் தற்போது மும்பை மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், அதேவேளையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் 24 மணிநேரமும் ஹோம் டெலிவரி செய்ய மும்பை கார்பரேஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை நகராட்சி ஆணையர்
இதற்கான ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள மும்பை நகராட்சி ஆணையர் ஐ.எஸ்.சஹால் இவ்விரு தளத்தில் ஆர்டர் செய்யப்படும் உணவு மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்களை இரவு நேரத்தில் மட்டும் அல்லாமல் வார இறுதி நாட்களிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் உணவகங்களில் டேக்அவே ஆர்டர் முறையும் தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
24x7 மணிநேர சேவை
இந்தியாவில் 24x7 மணிநேர சேவையைக் கொண்டு வர பல நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் நிலையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் கூடுதல் பிரச்சனை எழும் என்ற கண்ணோட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இதற்கு அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது.
7Eleven தோல்வி
குறிப்பாக இந்தியாவில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் 24x7 சேவை அளிக்க ஆர்வம் காட்டி அரசு அனுமதி வழங்காத காரணத்தால் தோல்வி அடைந்துள்ளது. இதில் குறிப்பாகச் சீனா, சிங்கப்பூர் மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் 7Eleven நிறுவனமும் அடக்கம்.