கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு என்பது தங்களுடைய வாழ்நாள் கனவு. ஆனால் இந்த வாழ்நாள் கனவுக்காக தன்னுடைய வாழ்நாள் சம்பளத்தையும் அவர்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. சென்னையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல்தான் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் கூட கிடைக்கின்றன. எனவே ஏராளமானவர்கள் வங்கிகளில் தான் வீட்டு கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர்.
வங்கியில் வீட்டு கடன் வாங்கி விட்டால் அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக நாம் ஓடியாக வேண்டும். இதனால் தான் தற்போதுள்ள இளம் தம்பதிகளுக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக வீடு வாங்குவது சிறந்ததா? அல்லது வாடகை வீட்டிலிருந்து கொண்டு அந்த பணத்தை முதலீடு செய்து செல்வத்தை பெறுவது சிறந்ததா?. அந்த குழப்பத்திற்கு இந்த கட்டுரையில் நாம் தீர்வு கண்டுவிடலாம்.

உதாரணத்திற்கு சென்னையில் ஒரு நபர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கு 20% டவுன் பேமெண்டாக செலுத்த வேண்டும் அதாவது 20 லட்சம் ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டும். மீதி 80 லட்சம் வங்கி கடனாக வாங்குறீர்கள் என வைத்து கொள்வோம். இதற்கு 8% வட்டி செலுத்த வேண்டும் 20 ஆண்டுகள் கடனை திரும்ப செலுத்தும் காலம் என்றால் மாதம் தோறும் நீங்கள் திரும்ப செலுத்தும் இஎம்ஐ தொகை 66,930 ரூபாய்.
20 ஆண்டுகள் முடியும்போது நீங்கள் வாங்கிய கடன் 80 லட்சம் ரூபாய் ஆனால் திரும்ப செலுத்திய தொகை 1. 61 கோடி ரூபாயாக இருக்கும். இது தவிர வீட்டை பராமரிப்பதற்கான செலவு , சொத்து வரி என பல செலவுகள் உண்டு. 20 ஆண்டுகளில் இந்த வீட்டின் மதிப்பு சராசரியாக 2.5 கோடி ரூபாயாக தான் இருக்கும்.
அதுவே 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டில் நீங்கள் வாடகையில் வசிக்கிறீர்கள், ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாய் வாடகை என்றால் ஓராண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வாடகையாக செல்லும். ஆண்டுதோறும் வாடகை தொகை 5% உயர்கிறது என்றால் அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் செலுத்திய வாடகை தொகை 1.5 கோடி ரூபாய்.
நீங்கள் செலுத்திய வங்கி கடனை விட கிட்டதட்ட இது 60 லட்சம் குறைவு. இதே நபர் சரியாக திட்டமிட்டால் 1 கோடி ரூபாய் சொத்து கைவிட்டு போனாலும் 5 கோடி ரூபாய் செல்வத்தை சேர்க்க முடியும். அதாவது மாதந்தோறும் ஈஎம்ஐ தொகை 66,930 ரூபாய் இதில் 25 ஆயிரம் ரூபாய் வாடகை போக மீதமுள்ள பணம் 41 ,930 ரூபாய் இதனை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தருகிறது என்றால் 20 ஆண்டுகள் முடிவில் உங்களுடைய எஸ்ஐபி உங்களுக்கு 5.97 கோடி ரூபாயாக வளர்ந்து நிற்கும். அதாவது சொந்தமாக வீடு வாங்கியவரை விட உங்களிடம் இரண்டு மடங்கு பணம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இந்த முடிவினை தனிநபர்கள் தங்களின் நிதி நிலைமையை பொறுத்து தான் எடுக்க வேண்டும். எனக்கு ஆண்டுதோறும் சம்பள உயர்வு உண்டு அதனை வைத்து நான் லோனை முன் கூட்டியே செலுத்திவிடுவேன் என கூறுபவர்கள், வீட்டை உணர்வு ரீதியாக பார்ப்பவர்கள் இந்த முடிவில் இருந்து மாறுபடலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

