500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியை மத்திய அரசு எடுத்ததைத் தொடர்ந்து வங்கிகளில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் புதன்கிழமை முதல் நிரந்தர வைப்பு நிதி கணக்குகளின் வட்டியை 0.15 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது எஸ்பிஐ வங்கி.
ஒரு வருடம் முதல் 455 நாட்கள் வரை
நிரந்தர வைப்பு நிதி கணக்குகளின் வட்டி குறைப்பு ஒரு வருடம் முதல் 455 நாட்கள் வரையிலான முதிர்ச்சி கால முதலீடுகளுக்கு 7.05 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தில் இருந்து 0.15 குறைத்து 6.90 சதவீதமாக வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
456 நாட்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை
இதேப் போன்று 456 நாட்கள் முதல் இரண்டு வருடங்களுக்குக் குறைவான நிரந்தர வைப்பு நிதி கணக்குகளுக்கும் 7.10 சதவீதத்தில் இருந்து 6.95 சதவீதமாக வட்டியைக் குறைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான கால முதலீடுகளுக்கு இருந்து 7 சதவீத வட்டியை 6.85 சதவீதமாகக் குறைத்துள்ளனர்.
புதிய வட்டி விகித மாற்றம்
இந்த புதிய வட்டி விகித மாற்றம் புதிதாக நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் முதலீடு செய்பவர்கள் மற்றும் பழைய கணக்கைப் புதுப்பிக்க விரும்புபவர்களுக்கு மட்டும் என்று கூறப்படுகிறது.
எனினும், என்ஆர்ஓ முதலீடுகளுக்கு கூடுதலாக வழங்கி வந்த 1 சதவீத வட்டி விகிதத்தையும் எஸ்பிஐ குறைத்துள்ளது.
7 நாட்களில் 1,14,139 கோடி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்த இந்த 7 நாட்களில் 1,14,139 கோடி ரூபாய் எஸ்பிஐ வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.