மழைக்காலம் துவங்கியதில் இருந்து தமிழகத்தில் டெங்குவால் ஏற்படும் இறப்புகள் அதிகம் நடந்துகொண்டு இருப்பதை நாம் தினமும் செய்திகள் மூலமாகக் கேள்விப்பட்டு வருகின்றோம்.
எனவே இப்படி ஒருவேலை உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தினருக்கோ டெங்கு பாதித்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் உங்கள் மனதில் இருக்கும்.
டெங்கு காப்பீடு
இதோ உங்களுக்காகவே சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக 15,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரையிலான காப்பீடுகளைக் கொண்ட பாலிசிகளை அளிக்கின்றன. பிரீமியம் தொகையும் 100 ரூபாய்க்கும் குறைவாகவும் டெங்கு இன்சூரல்ஸ் பாலிசி திட்டங்கள் உள்ளன.
எனவே இங்கு டெங்கு இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்?
டெங்கு இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களை டெங்கு பாதிக்கவில்லை என்றும் மட்டும் உறுதி அளித்தால் போதும். டெங்கு பாதிப்பு இல்லாதவர்கள் யார் வேண்டும் என்றால் விண்ணப்பிக்கலாம். டெங்கு பாதிப்பு ஏற்படும் போது இந்தப் பாலிசி உங்களுக்கு உதவும்.
எப்போது உங்களுக்கு டெங்கு பாலிசி பணம் கிடைக்கும்?
டெங்கு காப்பீடு அளிக்கும் நிறுவனமான DHFL பிரேமரிகா நோயாளியின் டெங்கு காய்ச்சல், டெங்கு விஷக் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறிகளைப் பொருத்து மொத்த காப்பீடு பணத்தினையும் காப்பீட்டாளருக்கு அளிக்கும்.
முக்கிய விதிமுறை
டெங்கு பாலிசி எடுத்த பிறகு பாதிப்பு ஏற்படும் போது 24-48 மணி நேரம் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காக மருத்துவர் இடம் இருந்து டெங்கு பாதித்ததற்கான சான்றிதழ் பெற்று காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை எல்லாம் உறுதி செய்த பிறகு தான் காப்பீடு பணம் பயனாளருக்குக் கிடைக்கும்.
நோயாளி
டெங்கு காப்பீடு வழங்கும் சில நிறுவனங்கள் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளில் என இருவருக்கும் மருத்துவச் செலவுகளை அளிக்கின்றன.
டெங்கு நோயாளிகள் வீட்டில் இருந்து சிகிச்சை பெறுவது மற்றும் வீட்டில் உள்ள மருந்துகளை எடுத்துக்கொள்ள எல்லாம் காப்பீட்டில் அனுமதி இல்லை. மேலும் டெங்கு பாதிப்பிற்கு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுத் தான் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை என்கிறார் அப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அந்தோனி ஜேக்கப்.
அப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ்
காப்பீட்டு எடுத்துள்ளவர்கள் 24 மணி நேரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது 15 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவு வரை இந்தப் பாலிசிகள் ஏற்கும், வெளியில் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் போது அப்போலோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் 10,000 ரூபாய் வரையிலான காப்பீடு தொகையினை அளிக்கின்றது.
பேடிஎம்
வாலெட் நிறுவனமான பேடிஎம் DHFL பிரேமரிகா காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து 99 ரூபாய்க்கு 15,000 ரூபாய் வரையிலான டெங்கு காப்பீடு பாலிசியினை அளிக்கின்றது. இந்தப் பாலிசி எடுத்துவர்கள் ஒரு ஆண்டுக்குள் ஒரு முறை டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் காப்பீட்டை பெற முடியும்.
பேடிஎம் மூலம் டெங்கு இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது எப்படி?
பேடிஎம் செயலி மற்றும் இணையதளம் மூலமாக டெங்கு பாலிசியை 99 ரூபாய் கட்டணத்தினைச் செலுத்திப் பெற முடியும்.
அப்போலோ முனிச் டெங்கு பாலிசி பிரீமியம் எவ்வளவு?
அப்போலோ முனிச் மூலம் 511 ரூபாய் கொடுத்து ஒரு ஆண்டுக்கு பாலிசி எடுத்தால் 50,000 ரூபாய் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறும் போதும், மருத்துவமனையில் அவ்வப்போது டெங்கு சிகிச்சை பெற்று வீட்டில் இருப்பவர்களுக்கு 10,000 ரூபாய் வரையிலும் காப்பீடு அளிக்கப்படுகின்றது.
டிஎச்எப்எல்
டிஎச்எப்எல் நிறுவனத்தில் நேரடியாக டெங்கு காப்பீட்டை பெற 661 ரூபாய் கொடுத்து பாலிசி எடுத்தல் 5 வருடத்தில் ஒரு முறை பயன்படுத்த முடியும். குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பாலிசி திட்டங்கள் உள்ளன.
விலக்கு
டெங்கு பாதிப்பில் உள்ளவர்களால் இந்தப் பாலிசியை எடுக்க முடியாது. மேலும் டெங்கு பாலிசியைப் பிற காய்ச்சலுக்காகப் பயன்படுத்த முடியாது. மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக மட்டும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது காப்பீடு கிடைக்காது.


Click it and Unblock the Notifications