பிக்சட் டெபாசிட் எனப்படும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் தங்கள் பணத்தினைப் பிகசட் டெபாசிட்டுக்கு பதிலாக எதில் முதலீடு செய்வது என்று தேடி வருகிறீர்களா?
இதோ உங்களுக்காகவே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் பிகசட் டெபாசிட்டிற்கு மாற்றாக அதிக லாபத்தினை அளிக்கும், ரிஸ்க் இல்லாத முதலீட்டுத் திட்டங்களைத் தொகுத்து வழங்குகிறது, இதனைப் படித்து முதலீடு செய்து உங்கள் லாபத்தினைப் பெருக்குங்கள்.
விருப்ப வருங்கால வைப்பு நிதி
ஈபிஎ போன்றே 8.65%* வட்டி விகித லாபத்தினைப் பெறலாம். எவ்வளவு நாட்கள் நீங்கள் ஈபிஎப்-ல் தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புகின்றீர்களோ அது வரை தொடரலாம். வயது வரம் ஏதும் இல்லை. உங்கள் சம்பளத்தினைப் பொருத்து முதலீட்டுத் தொகை மாறும். வருமான வரி சட்டப் பிரிவு சி கீழ் வட்டிக்கும் சேர்த்து வரி விலக்கு உண்டு. நீண்ட காலத்திற்கு ஏற்ற ஒரு முதலீட்டுத் திட்டமாக ஈபிஎப் உள்ளது.
பொதுத் துறை நிறுவன பத்திர முதலீடுகள்
இங்குக் குறிப்பிட்டுள்ள விவரங்கள் எஸ்பிஐ பாண்டு N5 கீழ் வழங்கப்பட்டுள்ளது. 8.55 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். 8 வருடம் என 2026 மார்ச் வரை முதலீடு செய்யலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்றும் ஏதும் இல்லை. இதன் மூலம் வரும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 8.3 சதவீத லாபத்தினை அளிக்கிறது. 5 வருடம் வரை முதலீடு செய்யலாம், வேண்டும் என்றால் 3 வருடம் நீட்டிக்கலாம். 60 வயது நிரம்பி இருக்க வேண்டும். 55 வயதிற்குள் ஓய்வு பெற்று இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். 80சி கீழ் வரி விலக்கு உண்டு. ஆனால் வட்டி வருவாய்க்கு வரி செலுத்த வெண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
பெண் குழந்தைகளுக்கான நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற ரிஸ்க் இல்லாத திட்டமாகச் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் உள்ளது. 10 வயது அல்லது அதற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்காக மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். வருமான வரிச் சட்டம் 80சி கீழ் நண்மைகள் உண்டு. வட்டி வருவாய்க்கும் வரி விலக்கு உண்டு.
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. 60 வயது நிரம்பியவர்கள் 10 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்ய முடியும். 8 சதவீத லாபத்தினைப் பென்ஷனாக அளிக்கிறது. 80 சி நன்மைகள் கிடையாது. பென்ஷனாகப் பெறப்படும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். அதிகபட்சம் 7.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து 5,000 ரூபாய் மாத பென்ஷனாகப் பெற முடியும்.
சேமிப்புப் பத்திரங்கள் 2018 (ஆர்பிஐ பத்திரங்கள்)
வயது வரம்பு ஏதும் இல்லாமல், அதிகபட்ச தொகை என்று ஏதும் இல்லாமல் 7 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்து 7.75 சதவீத லாபத்தினைப் பெற முடியும். 80சி நன்மைகள் ஏதும் இல்லை. வட்டி வருவாயிற்கு வரி செலுத்த வேண்டும். தொடர் வருமான வேண்டும் என்று விரும்புபவர்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புகள் உள்ளவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.6% வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. அதிகபட்சம் 15 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெற முடியும். வட்டி வருவாய்க்கும் வரி கிடையாது. நீண்ட கால ரிஸ்க் இல்லா முதலீட்டை விரும்புபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.