தேசிய பங்குச் சந்தையில் (NSE) வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் (BSE) விற்க முடியுமா? என்னும் கேள்விக்குச் சுருக்கமான பதில் வேண்டும் என்றால் "முடியும்" என்னும் பதில் கிடைக்கும். பங்குகளை வாங்குதல், விற்றல் ஆகியவற்றையும் தாண்டி, பங்குச் சந்தை தொடர்பான பல அடிப்படையான விசயங்கள் இப்பதிலில் அடங்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கு வாங்கியதை ஏன் இங்கு விற்க வேண்டும் ?
தேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் விற்பதற்கு ஒருவர் ஏன் விரும்ப வேண்டும்? நீங்கள் உங்கள் பங்குகளை விற்கும் நேரத்தில் அதற்கான விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டால் நீங்கள் இழப்பைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அனைவரும் பங்குச் சந்தையின் மூலம் இலாபம் ஈட்டுவதற்குத்தான் விரும்புவர், நஷ்டத்தைச் சந்திக்க யாரும் விரும்புவதில்லை. இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்றால்தான் ரிஸ்க் எடுக்கத் தயாராக வேண்டும். சரி, உங்களை இப்போது, முதலீட்டுக்குப் பாதிப்பு வராத பாதுகாப்பான நிதி உலகத்திற்கு (Hedge Funds) வரவேற்கிறோம்.
சந்தை விலை மாறுபாடும் சாதக அம்சமும்
உதாரணமாக, ‘A' என்கின்ற பங்குகளுக்கு தேசிய பங்குச் சந்தையில் வரவேற்பும் தேவையும் அதிகமாக உள்ளது. அதேசமயத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் அந்தப் பங்குகள் கட்டாயம் விற்பனை செய்யப்படவேண்டிய சூழலில் உள்ளன. அந்தச் சமயத்தில், ‘A' என்னும் பங்குகளின் விலை தேசிய பங்குச் சந்தையில் அதிகமாகவும், மும்பைப் பங்குச் சந்தையில் அதனுடைய விலை குறைவாகவும் இருக்கும். ‘A' என்னும் பங்குகளின் விலை தேசிய பங்குச் சந்தையில் உயர்வை நோக்கிச் செல்வதற்கும், அதே பங்குகளின் விலை மும்பைப் பங்குச் சந்தையில் வீழ்ச்சியை நோக்கிச் செல்வதற்குமான வாய்ப்புகள் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் விலை அடிப்படையில் வேறுபாடு தோன்றுகிறது. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு ‘A' என்னும் பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் வாங்கி அதனைத் தேசிய பங்குச் சந்தையில் விற்பதற்குப் பலர் விரும்புவர். நாம் வாங்குகின்ற பங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நமக்குக் கணிசமான இலாபம் கிடைக்கும்.
விலை ஏற்ற இறக்க ஒத்திசைவு
பங்குச் சந்தையின் போக்கினை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் இதற்கான வாய்ப்புகளை முன்கூட்டியே உணரமுடியும். தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகிய இரண்டிலும் கால் பதித்துள்ளவர்கள், பங்குகளின் இத்தகைய விலை வேறுபாட்டை ஒருங்கிணைப்பதற்கு நிச்சயமாக நடைமுறை செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள். ஆம் இரு சந்தைகளிலும் ஏற்படும் விலை வேறுபாட்டை ஒருங்கிணைப்பதற்காகச் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நடைமுறைகள், குறைந்த நேரத்தில், பங்குகளின் விலை ஒருங்கிணைப்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பங்குகளை வாங்கிப் பிறகு அதனை விற்கத் தேவைப்படும் நேரத்திற்கும் குறைவான நேரத்தையே இந்த நடைமுறைகள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், இதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். மனிதர்களைப் பொறுத்த வரை இந்நேரம் மிகக் குறைவானதாகும். ஆனால், கணினி வழியான பரிமாற்றத்தைப் பெறுத்தவரை விலை ஒருங்கிணைப்பு நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவானதாகக் கருத முடியாது. சரி இனி, ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட மென்பொருள் சார்ந்து இயங்கும் கணினி வழியான (Algo - trade) பங்கு வர்த்தகத்தில் என்ன நிகழ்கிறது
எனப் பார்ப்போம்.
அமெரிக்காவில அப்பவே நடந்திருச்சு..
வணிகம் மற்றும் நிதியியல் சார்ந்த புது முயற்சிகளை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரும் நாடு அமெரிக்கா. புதுமையான கருத்துக்களைச் செயல்படுத்துவதற்குச் சட்ட நடைமுறைகள் தடையாக இருந்தால் அவற்றைக் கூட உடனடியாக மாற்றியமைக்க இந்நாடு முன்வருகிறது. ஆம், அமெரிக்காவைப் பொறுத்த வரை இது பழைய விசயம். எவ்வளவோ செய்தவர்கள் இதைப் பற்றிச் சிந்திக்காமலும் செயல்படாமலுமா இருப்பார்கள்?
இருக்கு…. சம்பந்தம் இருக்கு….
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அமைந்த கேள்விக்கும், பதிலுக்கும், இந்த நிறுவனத்தைப் பற்றிய கதைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?. ஒரே பொருளுக்குப் பல சந்தைகளில் நிலவும் விலை வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு, அந்த விலை வேறுபாட்டின் மூலம் இலாபம் ஈட்டி அதனை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து தருவதுதான் LTCM நிறுவனத்தின் முக்கியமான பரிவர்த்தனைகளுள் ஒன்றாக இருந்தது. பங்குகள், அந்நியச் செலவாணி நிதியங்கள், பத்திரங்கள் என அனைத்தும் இதில்அடங்கும்.
LTCM நிறுவனத்தின் மீளமுடியாத தோல்விக்குக் காரணங்கள்
இந்நிறுவனத்தின் தோல்விக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, கணிப்பொறியில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட மென்பொருள் வழியாகவே
(Algo Trade) இந்நிறுவனம் வணிகத்தை நடத்தியது. மனித உணர்வுகளுக்கும், மனித மதிப்பீட்டுத் திறனுக்கும் இங்கு வேலையில்லை. முற்றிலும் இயந்திரம் சார்ந்தே வணிகம் இருந்ததது.
இரண்டாவது காரணம், ஒரே பொருளுக்கு வெவ்வேறு சந்தைகளில் இருக்கும் விலை மாறுபாட்டைச் சாதகமாக்கிக் கொள்ளும், இருநிலைக்கு உட்பட்ட வணிகத்தில் (Arbitrage Trade) இந்நிறுவனம் ஈடுபட்டது. இப்போது புரிந்ததா கேள்விக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று?
மறுபடியும் முதல்லேயிருந்தா …?
மறுபடியும் நம்முடைய கேள்விக்கு வருவோம். என்னது மறுபடியும் முதல்லேயிருந்தா... கோவிச்சுக்காதீங்க பாஸ்.. சில விசயங்களைத் தெளிவாகப் புரிய வைக்கத் திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப... பேச வேண்டியதிருக்கு. தேசிய பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பைப் பங்குச் சந்தையில் விற்க முடியுமா?.. முடியும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இதனைச் செய்து கொண்டிருக்கின்றனர். இதனை இருநிலைக்கு இடைபட்ட இலாப வாய்ப்பு (arbitrage opportunities) எனப் பொதுவாக அழைக்கின்றனர். ஆனால், சந்தையில் பங்குகளை ஓரேநாளில் வாங்கி அதே நாளில் விற்கும் பங்கு வணிகர்கள் (Intraday traders) இதில் ஈடுபட முடியாது.