பங்கு சந்தையில் அனைத்து வர்த்தகர்களும் வெற்றிகரமாகத் தான் இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. சிறந்த வர்த்தகர்கள் கணக்கிலும் மோசமான வர்த்தகப் பதிவுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. பங்கு சந்தையை நிலவரத்தினைப் பொருத்து உங்களது அனைத்துப் பங்குகளும் லாபத்தைக் குவித்துவிடும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது.
ஒரு பங்கில் இருந்து லாபம் கிடைக்க உச்சபட்ச அளவு என்பது கிடையாது. அதேச சமயம் ஒரு பங்கு முதலீட்டில் இருந்து ஏற்படும் நஷ்டத்துக்கு அளவு உள்ளது. பங்கு முதலீட்டில் நஷ்டம் என்பது வெறும் நிதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. உணர்வுப் பூர்வமாகவும், மன தளவிலான பாதிப்பையும் அது ஏற்படுத்தும். நஷ்டத்தை ஏற்கும் குணாதிசியம் மனிதர்களுக்கு இல்லை. வர்த்தகத்தில் இறங்கு முகத்தைத் தவிர்க்க சில பரிந்துரைகள் இங்கே வழங்கப்படுகிறது.
நிதி இழப்பை தவிர்க்க ‘ஸ்டாப்ஸ்’ பயன்படுத்த வேண்டும்
ஸ்டாப்ஸ் என்பது குறிப்பிட்ட பங்கு விலையின் முந்தைய அளவீடுகளைக் கணக்கிட்டு முன் கூட்டியே நிர்ணயம் செய்யப்படுவதாகும். இதை முதலீட்டாளர் தேர்வு செய்தால் ஒரு குறிப்பிட்ட நஷ்டம் ஏற்படும் சமயத்தில் பங்கை விற்றுவிடலாம். ஸ்டாப் லாஸ் எல்லையைப் பங்கின் விலை தொடும் போது அது தானாக அந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டுவிடும்.
ஸ்டாப் லாஸ்
நஷ்டத்தை முன்கூட்டியே கணக்கிட்டு முடிவு செய்தால் ஸ்டாப் லாஸ் நல்ல முறையில் பலனளிக்கும். அதேபோல் நஷ்டம் ஏற்படும் தொகையும் ஒரு குறிப்பிட்ட அளவோடு நின்றுவிடும். நஷ்டமும் முதலீட்டாளர் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தனிப்பட்ட முறையில் ஸ்டாப் லாஸ் தந்திரத்தை வைத்திருக்க வேண்டும். இதை முறையாகப் பயன்படுத்தினால் பங்கு சந்தையில் முதலீட்டில் ஏற்படும் நஷ்டம் அளவோடு இருக்கும்.
விற்ற பங்குகளை வாங்கலாமா?
குறிப்பிட்ட ஒரு பங்கை விற்பனை செய்துவிட்டு வெளியேறிய பின்னரும், அந்தப் பங்கு நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து மீண்டும் அதை வாங்குவதற்கான குறியீட்டை நோக்கி காத்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பனை செய்துவிட்டு வெளியே வந்துவிட்டாலும், அது மீண்டும் எழுவதற்கான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது மீண்டும் அந்தப் பங்கில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஸ்டாப் லாஸ் பயன்படுத்துவதால் விலை தடுமாற்றத்தின் போது கூட நீங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராதவிதமாக அதன் விலை மீண்டும் உயர்வதை நீங்கள் பார்க்கலாம். எனினும் பெரும்பாலான சமயங்களில் ஸ்டாப் லாஸ் மூலம் நஷ்டம் தடுக்கப்பட்டதைத் தான் அதிகம் பார்க்க முடியும். அட்டவணையை ஆராய்ந்து, அதன் ஏற்ற இறக்கத்தைக் கவனித்து மீண்டும் உள்ளே நுழைய வேண்டும். உங்களது ஆய்வோடு ஒத்திருந்தால் மட்டுமே மீண்டும் நுழைய வேண்டும். அதைவிடுத்து நம்பிக்கை, பழிவாங்குதல் போன்ற நோக்கத்தோடு செல்லக் கூடாது. சரியான காரணம் இல்லாமல் வெளியேறிய பங்கிற்குள் மீண்டும் செல்வதைத் தவிர்த்து வேறு வாய்ப்புகளைத் தேடுவதே சிறந்ததாகும்.
பங்குகளோடு உணர்வு பூர்வ இணைப்பு வேண்டாம்
தவறான பங்குகளைத் தேர்வு செய்ததை ஒப்புக் கொள்ள வேண்டும். உங்களது பங்குகளைச் சுற்றி நடக்கும் வளர்ச்சி உள்ளிட்ட இதர அம்சங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தவறான பாதையில் உங்களது பங்கு செல்வதைப் பார்த்தால் சமயங்களில் நஷ்டத்தோடு விற்பனை செய்ய வேண்டி வரும். அப்போது உங்களது தேர்வு தவறானது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். உங்களது பங்குகளின் மீது காதல் கொள்ள வேண்டாம். அடிப்படை அம்சங்கள் இல்லை என்றால் அவற்றை விற்பனை செய்யத் தயங்க வேண்டாம். இதன் மூலம் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த முடியும். நஷ்டத்தை ஆரம்ப நிலையில் ஏற்பதன் மூலம் நஷ்டத்தின் அளவை குறைக்க முடியும்.
தவறுகளை ஆராய வேண்டும்
பொறுப்புகளை ஏற்று உங்களது தவறுகளை ஆராய வேண்டும். எந்த இடத்தில் உங்களது முதலீடு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இது, மீண்டும் அந்தத் தவறு நடக்காமல் குறைக்க உதவியாக இருக்கும். பங்கு வர்த்தக நஷ்டத்தைச் சிறந்த முறையில் கையாண்டால் சிறந்த வெற்றிகரமான முதலீட்டாளராகத் திகழலாம். தோல்வியை, கற்பதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருத வேண்டும். இதை அடுத்த நகர்வின் போது மேம்படுத்த வேண்டும். சந்தையில் பலதரப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதைக் கண்டுபிடித்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.