முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் (Systematic investment plans) சமீபகாலமாக முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டு ஆலோசகர்களுக்கும் நன்மையையே அளித்துள்ளன. நீண்ட கால முதலீட்டு லட்சியங்களை அடைய அதிக ஆபத்துள்ள பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடுகளையே வல்லுநர்கள் பொதுவாகப் பரிந்துரைக்கின்றனர்.
நீண்ட காலத்திற்கு முறைப்படுத்தப்பட்ட முதலீடுகளைச் செய்வதன் மூலம் சொத்து சேர்க்கும் வழியின் ஒரு பகுதிதான் இந்த முதலீட்டு அறிவுரை. ஒவ்வொரு தனிநபரும் ஏன் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
1) நிதி ஒழுக்கத்தைக் கற்றல்
இவ்வகை முதலீட்டில் முதல் மற்றும் முக்கிய நன்மையே, முதலீட்டாளரை நிதி ஒழுக்கமுடையவராக மாற்றும் என்பதே. ஏனெனில் இதில் ஒரு நிலையான அளவு பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். இந்த முதலீட்டுத் திட்டத்தில் செலுத்தும் பணம் பெரிய அளவில் இருக்கவேண்டிய அவசியமில்லை. மாதம் ரூ100ஐ கூட மாதந்திர முதலீடாகச் செலுத்தலாம்.
உங்கள் வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் நிதி இலக்குகளை விரைவாக அடையும் பொருட்டு, இந்த முதலீட்டுத் திட்டத்தில் செலுத்தும் மாதாந்திர முதலீட்டை அதிகரிக்கும் வசதியும் உள்ளது. இவை சந்தை நிலவரங்களால் பாதிப்பு ஏற்படாதவகையில் முதலீடுகளை உங்களிடம் இருந்து பெறுகின்றன. உங்கள் சம்பள தேதியின் போது மாதாந்திர முதலீட்டைத் தானாகவே செலுத்தும் வசதியையும் தெரிவு செய்துகொள்ளலாம்.
2) கூட்டுப் பலன்கள்
இந்த முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் நீண்ட கால முதலீடுகள் என்பதால், கூட்டு சேர்த்தல் என்பது மிகப்பெரிய நன்மையைத் தரும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிகளவு லாபத்தையும் தரும்.வல்லுநர்களின் பரிந்துரைப்படி பணிக்குச் சேர்ந்த உடனேயே இந்த முதலீட்டைத் துவங்கி விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிலான வருவாய் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக நீங்கள் மாதம் ரூ1000ஐ பங்குகளுடன் சேர்ந்த முறைப்படுத்தப்பட்ட முதலீடாக 10 ஆண்டுக்கால இலக்குடன் முதலீடு செய்கிறீர்கள். 10 ஆண்டுகள் கழித்து 12% லாபத்துடன் கிட்டத்தட்ட ரூ2.3லட்சம் கிடைக்கும். ஆனால் அதே அளவிலான இலக்கை அடைய 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாதம் ரூ1500 என முதலீடு செய்யும் போது , 5 ஆண்டுகள் கழித்து உங்களால் ரூ1,20,000 ஐ சேர்க்க முடியும்.
3) சராசரி முதலீட்டு அளவை மதிப்பிட உதவும்
முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போது, குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, நிதி அலகுகளின் மொத்த சொத்து மதிப்பு குறைவாக இருந்தால் அதிக அலகுகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒரு மாதம் நீங்கள் ரூ1000செலுத்தும் போது, ஓர் அலகின் மொத்த சொத்து மதிப்பு ரூ20 என இருந்தால் 500 அலகுகள் கிடைக்கும். அடுத்தமுறை அதே 1000 ரூபாயைச் செலுத்தினால், அலகுகளின் நடப்பு மொத்த சொத்து மதிப்பைப் பொறுத்துக் கடந்தமுறை கிடைத்த அலகுகளை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தான் கிடைக்கும்.
ஒரு முறை முதலீடு செய்வதைக் காட்டிலும், இம்முறையில் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து முதலீடு செய்வதால், பொதுவாகவே முடிவில் அதிகளவிலான அலகுகள் இருக்கும். அதிக அளவு அலகுகளின் மூலம் அதிக லாபத்தை அடையலாம்.
ஆகவே அனைத்து பொதுவான முதலீடுகளிலும் முன்கூடியே கூறப்படும் மொத்தத் தொகையைப் பொறுத்து குறிப்பிட்ட காலத்திற்கான சராசரி முதலீட்டு மதிப்பை முதலீட்டாளர் அறியலாம். அந்தச் சராசரி முதலீட்டு அளவின் மூலம் கிடைக்கும் வருவாய் சராசரி முதலீட்டைப் பொறுத்து அமையாமல் அதன் மூலம் வரும் பரஸ்பர நிதி அலகுகளின் மதிப்பைப் பொறுத்து இருக்கும் என்பதால், முன்னர்க் கணித்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
4) எதிர்கால நிதி இலக்குகளுக்கான திறவுகோல்
முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு என்பது எதிர்கால நிதி இலக்குகளை அடைய உதவும் திறவுகோல். முன்னோர்களின் சொத்துக்கள் இல்லாத நிலையில், எதிர்காலத்தில் வரும் பெரும் செலவுகளைச் சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. எனவே முன்னெச்சரிக்கையாக உங்கள் குழந்தைகளின் உயர்கல்வி, கனவு இல்லத்தை வாங்குதல், திருமணம் போன்றவற்றிற்காக முன்கூடியே குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது.
5) பன்முகத்தன்மை
முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் உள்ள முக்கியமான நன்மை பன்முகத்தன்மை ஆகும். ஏனெனில் இதில் கடன், பங்கு, அரசு பத்திரங்கள் எனப் பல்வேறு வித முதலீட்டுத் திட்டங்களில் குறைந்த அளவு பணத்தைக் கூட முதலீடு செய்யமுடியும் என்பதால் ஆபத்துக் குறைவு.