பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் கணக்கு மீதான வட்டி விகிதம் கடந்த சில காலாண்டுகளாகச் சரிந்து வந்தாலும் மிகப் பிரபலமான வங்கி பிகசட் டெபாசிட் திட்டங்களை விடக் கூடுதல் லாபத்தினை அளித்து வருகிறது.
தற்போது இந்தப் பிபிஎப் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலத்தினை 15 வருடங்களுக்குக் கூடுதலாகவும் நீட்டித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வருடங்கள் முதலீட்டினை செய்து முதிர்வு காலம் வரும் போது பணம் தேவைப்படவில்லை என்றால் தொடர்ந்து கூடுதல் ஆண்டுகளுக்கு முதலீட்டினை செய்ய முடியும்.
பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் சேமிக்க முடியும். எனவே பிபிஎப் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிபிஎப் கணக்கு
பொதுவாகப் பிபிஎப் கணக்கில் முதலீடு செய்யும் போது 15 வருடம் தான் முதிர்வு காலம் ஆகும். அதற்குப் பிறகு பிபிஎப் கணக்கில் இருந்து பணத்தினை எடுக்கவில்லை என்றாலும் அதற்கான வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும். பின்னர்த் தேவைப்படும் போது பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.
வட்டி விகிதம்
தற்போது பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 7.6 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் திரும்பப் பெறுதல்
பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்து 15 வருடங்கள் கழித்துப் பணத்தினைப் பகுதி பகுதியாகவும் திரும்பப் பெறலாம். ஆனால் ஒரு நிதி ஆண்டில் ஒரு முறை தான் பணத்தினை எடுக்க முடியும்.
காலக்கெடு நீட்டிப்பு
ஒரு வேலை பிபிஎப் திட்டத்தில் 15 வருடங்களுக்குப் பிறகும் முதலீட்டினை தொடர வேண்டும் என்றால் குறைந்த 5 ஆண்டுகள் வரை நீட்டித்துத் தொடர்ந்து எத்தனை வருடங்கள் வரை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். எத்தனை முறை வேண்டுமானால் 5 வருடங்கள் என முதிர்வு காலத்தினை நீட்டித்துக்கொள்ளலாம்.
15 வருடத்திற்குப் பிறகு முதலீட்டினை தொடர என்ன செய்ய வேண்டும்?
பிபிஎப் கணக்கில் முதலீடு செய்பவர்கள் 15 வருடத்திற்குப் பிறகு தங்களது பங்களிப்பினை தொடர்ந்து அளிக்க விரும்பினால் அதற்குப் படிவம் -எச் என்பதைப் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் -எச் சமர்ப்பிக்கவில்லை என்றால் என்ன ஆகும்?
15 வருடங்கள் முதலீட்டிற்குப் பிறகு படிவம் -எச் சமர்ப்பிக்கப்படாமல் தங்களது பங்களிப்பினை தொடர்ந்து செலுத்தி வந்தால் இந்தப் பணத்திற்கு வட்டி விகித லாபம் அளிக்கப்பட மாட்டாது.
வருமான வரி
மேலும் 15 வருடம் வரை முதலீடு செய்த பணத்திற்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்கப்படும். அதற்குப் பின்பு கூடுதலாகப் பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
முதிர்வு காலம் நீட்டிப்பிற்குப் பிறகு
பிபிஎப் திட்டத்தினை மேலும் 5 தொடரும் போது இடையில் பணம் வேண்டும் என்றால் 60 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும். இது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஆகும்.