5500 கோடியா...? இந்தியாவின் ஒரே ஒரு வங்கியில் மட்டும் ஸ்டெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மட்டும் கடந்த ஏப்ரல் 01, 2018 தொடங்கி செப்டம்பர் 30, 2018 வரையான காலகட்டத்தில் 1329 புகார்கள் பதிவாயின. இந்த புகார்களின் படி மொத்தம் 5554 கோடி ரூபாய் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் கொள்ளை போனது. இந்த 5554 கோடி திருட்டில் ஒரு கும்பலை தில்லி போலீசார் பிடித்திருக்கிறார்கள்.
OTP கும்பல்
இந்த 5,500 கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்தை விசாரித்து வந்த போலீசாருக்கு மற்றும் ஒரு நெட் பேங்கிங் கொள்ளை வழக்காக ராஜேந்தர் சிங்கின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜேந்தர் சிங்கின் வங்கிக் கணக்குகள், வங்கி ஸ்டேட்மென்ட்கள், அவரின் வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் போன்றவைகளை கவனித்த போது ஒரு விஷயத்தை ராஜேந்தர் சிங் மறுத்தார்.
போலீஸ் சந்தேகம்
ராஜேந்தர் சிங்-ன் பணம் நெட் பேங்கிங் முறையில் கொள்ளை போவதற்கு சில வாரங்களுக்கு முன் தான், அவரின் செல் போன் எண் வங்கியில் மாற்றப்பட்டிருக்கிறது. இதை ராஜேந்தரிடம் காட்டி விசாரித்த போது தான் கடந்த பல வருடங்களாக ஒரே எண்ணை மட்டுமே பயனபடுத்தி வருவதாகவும், தான் பயன்படுத்தும் அனைத்து வங்கிக் கணக்குகளிலும் அந்த எண்ணைத் தான் கொடுத்து இருப்பதாகவும் ஆதாரத்தோடு போலீசாருக்கு காட்டுகிறார்.
யார் மாற்றியது
இப்போது யார், ராஜேந்தரின் அனுமதி இல்லாமல் வங்கிக் கணக்கோடு இணைத்த செல் எண்ணை மாற்றியது என்று கண்டு பிடிக்க, ராஜேந்தர் சிங் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தில்லி அசோக் ஹோட்டல் கிளைக்கு நேரடியாகச் சென்று சிசிடிவி பதிவுகளை துலாவுகிறார்கள் காவல் துறையினர்.
சிக்கிய கோஷி குமார்
அதில் ராஜேந்தர் குமாரின் வங்கிக் கணக்கு விவரங்களையும், செல் போன் எண் மாற்று படிவத்தையும் சமர்பிக்கும் கோஷி குமாரைப் பார்க்கிறார்கள். பின் கோஷி குமாரை தேடிப் பிடித்து கைது செய்கிறார்கள். எப்படி ராஜேந்தர் சிங்கின் பணத்தை எடுத்தார்கள் என்று விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஸ்டெப் 1: ஹேக்கிங்
ஹேக்கர்களை வைத்து எந்த வங்கிக் கணக்குகளில் நிறைய பணம் இருக்கிறது என்று வங்கி டேட்டா பேஸ்களில் இருந்தே தேடி எடுப்பார்கள். பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் முழுமையாக அதே வங்கி டேட்டா பேஸில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, உங்கள் முகவரி, வங்கிக் கணக்கு எண், பான் எண், வங்கி ரெக்கார்டில் இருக்கும் பெயர், கஸ்டமர் ஐடி, நெட் பேங்கிங் தரவுகள், மொபைல் பேங்கிங் தரவுகள் எல்லாம் எடுத்துக் கொள்வார்கள், இதில் வங்கி பாஸ்வேர்டுகள் உட்பட. அதோடு இந்த வங்கிக் கணக்குக்கான செக் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள் வரை அனைத்தும் இந்த ஸ்டேஜிலேயே ரெடியாகி விடும். அதன் பின் தான் செல் போன் எண். இன்று மக்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை செல் போன் எண்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-ஐ வைத்துத் தான் தெரிந்து கொள்கிறார்கள். ஆக முதலில் அந்த விவரத்தைத் துண்டிக்கவும், வரும் ஓடிபி-க்களை பயன்படுத்தவும் தான் மொபைல் எண்களை, கொள்ளையர்கள் மாற்றிக் கொள்கிறார்கள்.
ஸ்டெப் 2: செல் நம்பர்
வங்கிகளில் இருந்து வரும் படிவங்களுக்கு, வங்கி அழைப்புகளுக்கு, குறிப்பாக வங்கிகளில் இருந்து ஏடிஎம், க்ரெடிட் கார்ட், பேலன்ஸ் எஸ்.எம்.எஸ் போன்ற அத்தியாவசிய வங்கிக் சேவைகளுக்கு மாற்றுக் கருத்து இன்றி நம் செல் போன் எண்களை சமர்ப்பிக்கிறோம். இந்த செல் போன் எண்ணை மாற்ற வங்கிகள் அத்தனை கடுமை காட்டுவதில்லை. கூடுமானவரை கஸ்டமர் ஃப்ரெண்ட்லியாக இருக்க எளிமையான விதிகளையே கடை பிடிக்கிறார்கள்.
வங்கியிடம் செல் நம்பர்
இன்று எத்தனை வழிகளில் நம் வங்கிக் கணக்குக்கான செல் போன் எண்ணை மாற்றலாம்.
1. ஏடிஎம் கார்டுகள் பயன்படுத்தி மாற்றலாம்
2. செல்போனின் புதிய எண்களில் இருந்தே எஸ்.எம்.எஸ் முறையில் மாற்றலாம்.
3. நெட் பேங்கிங் முறையில் மாற்றலாம்.
4. கால் சென்டர்கள் மூலமாக புதிய செல் எண் மட்டும் வைத்தே மாற்றலாம்.
5. ஏடிஎம்-ல் இயந்திரங்களில் கார்ட் லெஸ் டிரான்சாக்ஷன் முறையில் மாற்றலாம்.
6. நேரடியாகச் வங்கிகளில் படிவம் சமர்பித்து மாற்றுவது.
ஸ்டெப் 3: செல் எண் மாற்றம்
பிடிபட்ட கோஷி குமார் மொழியில் "எங்களுக்கு ஏடிஎம்- இயந்திரங்களில் கார்ட் லெஸ் டிரான்சாக்ஷன் முறையில் பெரும்பாலும் திருட இருக்கும் நபர்களின் செல் எண்களை மாற்றி விடுவோம். சில முறை சொதப்பும் போது தான் நேரடியாக வங்கிக்குச் சென்று, வங்கி டேட்டா பேஸில் இருந்து எடுத்த வங்கிக் கணக்கு விவரங்களை எழுதிக் கொடுத்து செல் எண்ணை மாற்றம் செய்யச் சொல்லி வருவோம். வங்கிகளும் எங்கள் கையெழுத்துக்களை அதிகம் சரி பார்க்காது. காரணம் வங்கி டேட்டா பேஸில் ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளரின் கையெழுத்தும் இருக்கும். அவைகளையும் பல முறை பயிற்சி செய்து தான் போடுவோம் என்பதால் வங்கிகளில் கையெழுத்துக்காக மாட்டுவது இல்லை. தவிர வங்கிகளுக்கும் கையெழுத்துக்களில் அதிகம் கவனம் இருப்பதில்லை. எனவே ராஜேந்தர் விஷயத்தில் நேரடியாக வங்கிக்குச் சென்று ராஜேந்தர் பெயரில் செய்து வந்து போலி ஏடிஎம் கார்டை காட்டி செல் போன் எண் மாற்றத்துக்கு படிவங்களை சமர்பித்தேன்." என்கிறார்.
ஸ்டெப் 4: பணப் பரிமாற்றம்
"இப்போது எங்களிடம் எல்லாமே இருக்கிறது. ராஜேந்தரின் வங்கி விவரங்கள், அவரின் ஏடிஎம் கார்டுகள், செக் புத்தகங்கள் தொடங்கி அவருக்கு வரும் ஓடிபி வரை. இந்த பணத்தை நெட் பேங்கிங் முறையில் வெளிநாட்டு கணக்குகளுக்கு அப்படியே பணப் பரிமாற்றம் செய்து விடுவோம். பணம் எடுக்கப்பட்ட விவரம் அவரே நேரடியாக வங்கிக்கு சென்று கேட்டால் தான் தெரியும். அதுவரை அவர் கணக்கில் பணம் இருப்பதாகவே நினைப்பார். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய பணத்தை, ஹவாலா வாகவும் மாற்றி காசு பார்ப்போம். இப்படி எங்களுக்கு தேவையான போது, தேவையான இடத்தில், தேவையான நாட்டுப் பணத்தில் எடுத்துப் பயன்படுத்துவோம்" என்று போலீஸாரை அலறவிட்டிருக்கிறார் நம் கோஷி குமார்.
சிக்கிய கூட்டாளிகள்
கோஷி குமாரோடு தற்போது வினோத் குமார் என்கிற டெக்கி மட்டுமே பிடிபட்டிருக்கிறான். ஹேக்கர்கள் யாரும் இதுவரை சிக்க வில்லை. அவர்களைத் தொடர்ந்து இன்னும் எத்தனை பேர் இந்த கும்பலில் இருக்கிறார்கள், இவர்கள் மட்டும் எத்தனை கோடி ரூபாய் திருடி இருக்கிறார்கள் என்கிற விவரங்களை எல்லாம் காவல் துறை விசாரித்து வருகிறது. சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளில் செக் புத்தகங்கள், ஏகப்பட்ட நபர்களின் ஓடிபி-க்கள் வந்திருக்கும் சில செல்போன்கள் போன்றவைகளை கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
காவல் துறை எச்சரிக்கை
திருடர்கள் வங்கி டேட்டா பேஸில் இருந்தே திருடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி வங்கி டேட்டா பேஸிலேயே கை வைப்பது எல்லாம் அத்தனை சுலபம் கிடையாது. ஆக இந்த ஹேக்கர்களுக்கு எங்கிருந்து வங்கி டேட்டாக்கள் கசிகின்றன என்பதை விசாரித்து வருகிறோம். இந்த திருடர்களை பிடிபட்டதை விட அந்த ஹேக்கர்களை ஒழிப்பது தான் முக்கியம். அவர்களிடம் இருந்து தான் இவர்கள் வங்கி டேட்டாக்களை வாங்கி இருக்கிறார்கள். எனவே அவர்களையும் கண்டுபிடிக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தரவுகளை கூடுமான வரை மிகவும் பத்திரமாக வைத்திருக்குமாறு வேண்டுகோளும் விடுத்திருக்கிறது காவல் துறை.