சென்னையில் வசித்து வரும் குமார் 2015-ம் ஆண்டுப் பொதுத் துறை வங்கி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுச் சொந்தமாக வீடு ஒன்று வாங்குகிறார். அன்மை காலங்களில் வங்கிகள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது எளிமையாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் கடன் பெறுபவர்களாலும் எளிமையாகத் தவணை முறையில் கடனை திருப்பிச் செலுத்த முடிகின்றது.
ஆனால் குமாருடைய குழந்தைகளின் பள்ளி கட்டண செலவு உயர்வு மற்றும் சில அவசர செலவுகளால் வீட்டு கடன் தவணையினைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் கடன் அளித்த நிறுவனங்களில் இருந்து அவரது வீட்டிற்கு வந்த கடனை வசூலிக்க முயல்வார்கள்.
வீட்டு கடன் தவணையைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?
வீட்டு கடன் தவணையினைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குச் செலுத்தாமல் இருந்தால் வங்கிகள் கூடுதலாக இரண்டு மாதங்கள் அளித்துக் கடனை திருப்பிச் செலுத்த கோரிக்கை வைக்கும். அதனையும் செய்யத் தவறும் போது அந்தக் கடனை வாரா கடன் பட்டியலுக்குக் கொண்டு செல்வார்கள். பின்னர் அந்த வீட்டை ஏலத்தில் விட்டு கடன் தொகையினை மீட்பார்கள். வீட்டை ஏலத்தில் விடும் போது கிடைக்கும் கூடுதல் தொகையினை வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள்.
வங்கிகள் பெரும்பாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் செல்லும் முன்பு எப்படியாவது கடன் தொகையினை வசூலிக்க முடியாமா என்பதில் தான் குறியாக இருப்பார்கள். வீட்டை ஏலத்தில் விடுவதற்கெல்லாம் நீண்ட காலம் ஆகும். எனவே வங்கிகள் கடன் வசூலிப்பவர்கள் மூலம் 6 மாதத்திற்கு நெருக்கடி கொடுத்துக் கடனை வசூலிக்க முயல்வார்கள். அதன் பின்பே சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் செல்வார்கள்.
எனவே கடன் வசூலிக்கும் அதிகாரிகள் விட்டு கதவை தட்டும் போது கடன் பெற்றவர்களுக்கு உள்ள உரிமைகள் என்னவென்று இங்குப் பார்ப்போம்.
ஐடி சரிபார்த்தல்
மோசடிகள் அதிகளவில் நடைபெறும் இந்தக் காலத்தில் கடனை வசூலிக்க வரும் அதிகாரிகளிடம் இருந்து ஐடி கார்டினை வாங்கிச் சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர்த் தான் கடன் தவணை பற்றி விவாதிக்க வேண்டும்.
தனியுரிமை
தனியுரிமை விதிகளின் படி நீங்கள் வாங்கிய கடன் குறித்த விவரங்களை வங்கி நிர்வாகம் மூன்றாம் நபருடன் பகிரக்கூடாது. ஒரு வேலை நீங்கள் கடன் பெற்று இருந்த வங்கி அல்லது நிறுவனம் உங்கள் கடன் விவரங்களைப் பற்றி மூன்றாம் நபர்களிடம் தெரிவித்து இருந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கடன் பெற்றவர்களுக்கு உரிமை உண்டு.
மனிதாபிமான உரிமை
பணத்தினை வசூலிக்க வரும் அதிகாரிகள் கடன் வாங்கியவர்களிடம் கெளரவமாக மற்றும் நாகரீகமாகவும் நடந்துகொள்ள வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் மட்டுமே வாடிக்கையாளர்களைக் கடன் வசூலிக்கும் அதிகாரிகள் அணுக வேண்டும். அதனைக் கடன் அளித்த நிறுவனங்கள் மீறும் போதும் அதற்காகச் சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
கடன் தவணையினைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாத போது அதனைக் கடன் பெற்றவர்கள் எப்படிச் சரியாக அணுகுவது, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்குப் பார்ப்போம்.
கடன் பெற்ற வங்கி அதிகாரிகளை அணுகுதல்
வீட்டு கடன் பெற்றுள்ள வங்கி அதிகாரிகளை அணுகி உங்களது நிதி சிக்கலை எடுத்துரைத்து அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தாமத்திற்காக வங்கிகள் எடுக்கும் நடவடிக்கையில் இருந்து சிறிது விலக்குப் பெறலாம்.
வீட்டு கடன் அமைப்பை மாற்றி அமைத்தல்
நிதி சிக்கல் இருக்கும் போது அதற்கு ஏற்றவாறு கடன் தவணையினை மாற்றி அமைக்கலாம். இது போன்ற சூழலில் பல நேரங்களில் வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கு ஏற்ற வகையில் கடன் திட்டத்தினை மாற்றி அமைக்க வழிவகைச் செய்யும். வங்கி கடன் திட்டத்தினை மாற்றி அமைத்தது உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் போது மீண்டும் கடன் தவணையினைக் கட்ட தொடங்கலாம்.
ஒரு முறை தீர்வு
கடன் பெற்றவரின் நிலை மிக மோசமாக இருந்து ஒரு சிறிய அளவிலான தொகை அதாவது கடனின் முதன்மை தொகையில் 90 சதவீதத்தினைச் செலுத்தினால் 100 சதவீத வட்டி விகித தள்ளுபடி பெற முடியும். இப்படிச் செய்யும் போது அந்தக் கடனை முழுமையாகச் செலுத்த தேவையில்லை என்று கூறினாலும் கூடுதலாக அந்த இடத்தின் மீது கடனை பெற முடியாது. அது மட்டும் இல்லாமல் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.