இம்ரான். சென்னையில் அப்பா, அம்மா, வேலைக்குப் போகும் மனைவி, ஒரு வயது மகள் என தன் முழு குடும்பத்துடன் வசிக்கும் 29 வயது இளைஞர். மாதம் 45,000 சம்பளம். பத்திரிகையில் வேலை. கையில் ஒரு 10 லட்சம் ரூபாய் சேமிப்புப் பணம் இருக்கிறது. அப்பா முன்னாள் அரசு ஊழியர். மனைவிக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் வேலை மாதம் 40,000 சம்பளம். அனைவரும் அம்பத்தூர் பகுதியிலேயே ஒரு வாடகை வீட்டில் (Rented House) வசிக்கிறார்கள்.
சண்டை
இம்ரான் குடும்பத்துக்கே சொந்த வீட்டில் ஒரு ஆசை உண்டு. இம்ரானைத் தவிர. இம்ரான் ஒரு பிரபல பொருளாதார பத்திரிகையில் வேலை என்பதால், பணத்தை முதலீடு செய்வதிலேயே குறியாக இருப்பான். ஒரு நாள் அப்பாவுக்கும், மகனுக்கு சரியான சண்டை. இப்போது வீடு வாங்குகிறாயா..? இல்லையா..? என கத்திவிட்டார் இம்ரானின் தந்தை ஜலால்.
முதலீடு
இம்ரானின் முதலீட்டில் நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது மற்றும் மாதாமாதம் மியூச்சுவம் ஃபண்டுகளில் முதலீடு செய்வது என தொடர்கிறான். இப்படி கடந்த நான்கு வருடமாக 8.15 லட்சத்தை 9.77 லட்சமாக உயர்த்தி இருக்கிறான். சுமார் 19.87% வருமானம்.
அப்பாவின் வீட்டுக் கனவு
முன்னாள் அரசு ஊழியர் என்பதால் ஓய்வு காலத்தில் கிடைத்த தொகையாக ரூபாய் 13 லட்சத்தையும் அப்படியே வைத்திருக்கிறார். எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என வங்கிகளுக்கு அலையாத நாள் இல்லை. ஓய்வு பெற்ற ஒருவருக்கு எப்படி வங்கிகள் கடன் தரும். அறிவுக்குத் தெரிகிறது. ஆனால் மனம் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தை தேடுகிறது.
பிரச்னை வெடித்தல்
அப்பா: இம்ரான், இப்ப வீடு வாங்கப் போறியா இல்லையா..?
இம்ரான்: இல்லப்பா, முதலீடு தான் செய்யப் போறேன்
அப்பா: டேய் உன் படிப்புச் செலவுக்கு தான் நான் வீட்டோட காச கொடுத்தேன். இப்ப நீ படிச்சு முடிச்சு வேலைக்கும் பொய்ட்டா. ஓரளவுக்கு நல்ல சம்பாத்தியமும் வருது. இப்ப ஏன் வீடு வேண்டாங்குற..?
புரிய வையுங்க
அப்பா நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. என் முதலீடுகளை விட நீங்கள் சொல்வது போல வீடு தான் நல்லது என எனக்குப் புரியவைய்ங்கள் நான் இன்றே வீடு வாங்கும் வேலையைத் தொடங்கிறேன் எனகிறான் இம்ரான். பெருமூச்சு விட்டு வார்த்தைப் போருக்குத் தயாராகிறார் ஜலால். முதலில் வீடு வாங்குவதில் என்ன பிரச்னை என இம்ரானை கேட்கிறார்.
வீடு ஒரு தேய்மானம்
"அப்பா நான் ஒரு வீட்டை வாங்கணும்னா... அதுவும் 1000 சதுர அடி கார்ப்பெட் ஏரியாவுக்கு அம்பத்தூர்ல வாங்கணும்னா குறைந்தது 60 லட்சமாவது ஆகும். ஆக என் கிட்ட இருக்குற 10 லட்சம், உங்க கிட்ட இருக்குற 10 லட்சம் போக பாக்கி 40 லட்சம் வீட்டுக் கடன் வாங்கணும்.
கடன் சுமை
தற்போது வீட்டுக் கடன் திட்டங்களில் இருப்பதிலேயே அதிகமாக ஆர்பிஎல் வங்கி தான் 10.45% வழங்குகிறது. இந்த வட்டிக் கணக்கை மட்டும் இங்கு சொல்வோம். நான் கடன் வாங்கிய 40 லட்சத்துக்கு, 39.36 லட்சத்தை வட்டியாக கட்ட வேண்டும். இது எனக்கு தேவையா. அதோடு என் முழு சம்பளமும் வீட்டுக் கடன் இஎம்ஐ-க்குப் போய்விடும். 15 ஆண்டுகளுக்கு நான் வங்கிக்கு கப்பம் கட்ட வேண்டும். அது தான் யோசிக்கிறேன்.
முதலீடு
இதுவே நம் கையிலிருக்கும் 20 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானமாவது கிடைக்கும். ஆக 20 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு, ஆண்டுக்கு 15% வருமானம் என்றால் 15 ஆண்டு முடிவில் 1.25 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இதற்குத் தான் முதலீடுச் செய்யலாம் என்கிறேன் என முடித்தான் இம்ரான்.
வரி செலுத்தணுமே
இம்ரான் நீ சொல்வது போல அந்த 20 லட்சத்தை முதலீடு செய்தால் வருமானம் வரும். ஆனால் எடுக்கும் போது 1.25 கோடிக்கு 10% நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gain) செலுத்த வேண்டும். அதை ஏன் சொல்லவில்லை. ஆக நம் கைக்கு 1.12 கோடி தான் வரும்.
வாடகை கிடையாது
இப்போது நான் சொல்வது போல் வீடு வாங்கினால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு வாடகை தரத் தேவை இல்லை. இப்போது மாதம் 14,000 ரூபாய் வாடகை தருகிறோம். இந்த சுமை குறையும். அதோடு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்யும் போதும் வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் வட்டியை வருமான வரிச் சட்டப் பிரிவு 24 பிரிவிலும் மற்றும் வீட்டுக் கடனுக்கான முதல் தொகையை வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழும் கணக்கு காட்டி வரிச் சுமையை குறைத்துக் கொள்ளலாம்.
வரிக் கணக்கு
இப்போது நீ 5,40,000 ரூபாய் சம்பள பணத்துக்கு வரி சட்டப் படி வரி கட்டத் தேவை இல்லை. 87A பிரிவினால் அந்த வரிச் சுமை தள்ளுபடி ஆகிறது. அதோடு வீட்டு ஓனர் வேறு தன் பான் எண்ணை நமக்குத் தருவதில்லை ஆக நாம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் வாடகையாக காட்ட முடியும். வரிக் கணக்கீடுகளை மேலே படத்தில் பார்க்கவும்.
இவ்வளவு வரி மிச்சம்
இதுவே நீ வீட்டுக் கடன் வாங்கினால் உன் வருட சம்பளம் 6.50 லட்சம் வரும் வரை நீ ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவை இல்லை. இப்போதைக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் சம்பள உயர்வு கிடைத்தால் கூட, இன்னும் இரண்டு ஆண்டுக்கு நீ ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவை இல்லை. கணக்கை மேலே படத்தில் பார்க்கவும்.
வாடகை அதிகரிக்குமே..?
அதோடு ஆண்டுக்கு ஆண்டு வாடகை வேறு அதிகரித்துக் கொண்டு தானே இருக்கும். இப்போது 14,000 ரூபாய் என்றால் 15 வருட முடிவில் அது 29,105 ரூபாய். அதுக்கு மாதம் 44,092 ரூபாய் இ.எம்.ஐ கட்டி விடலாமே..? முழு வாடகை ஏற்றத்தையே மேலே படத்தில் பார்க்கலாம்.
இத்தனை லாபம்
ஆக முதலீடு செய்தால் கிடைக்கும் வரிக்கழிவுக்கு வரிக் கழிவும் கிடைத்துவிடும். வாடகை அதிகரிக்கும் என்கிற பயம் இருக்காது. முதலீட்டில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1.15 கோடி பணம் கிடைக்கும். அதற்கு சமமாக நம் வீட்டு நிலத்தில் விலை அதிகரித்திருக்கும். இது எல்லாம் முதலீட்டுக்கும், சொந்த வீடு வாங்குவதற்குமான ஒப்பீடுகள் தான். இதை எல்லாம் விட நமக்கே சொந்தமாக ஒரு வீடு கிடைத்துவிடும்.
லாபம் தானே
ஒரு வீட்டின் கட்டுமானம் 40 - 50 ஆண்டுகள் மட்டுமே தாங்கும் என வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. ஆக முதல் 15 வருடங்களில் நம் பணம் இ.எம்.ஐக்கு செலவாகிறது என்றால் கூட, 16-வது ஆண்டில் இருந்து 40-வது ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகளுக்கு வாடகை செலவு இல்லாமல், ஜாலியாக இருக்கலாமே..! சொந்த வீடு என்கிற நிறைவை விட, கையில் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய் பெரிய விஷயம் இல்லை என முடித்தார் இம்ரானின் அப்பா.
இம்ரான் யோசனை 1
1. அம்பத்தூர் வளர்ந்து வரும் மினி தொழில் நகரம். இன்று அப்பா சொல்வது போல் ஒரு 1000 சதுர அடிக்கு தனி வீடு வாங்கிப் போட்டால், நிச்சயம் விலை ஏறும்.
இம்ரான் யோசனை 2
2. கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆலைகளை கட்ட நிலம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று நம் கண் முன் நாமே ஓடி விளையாடி நிலங்கள் எல்லாம் இன்று ஏதோ ஒரு வெளிநாட்டு கார்ப்பரேட்டுக்குச் சொந்தம். இனியும் தாமதித்தால் நான் வாழ்ந்த நிலம் எனக்குக் கிடைக்காது.
இம்ரான் யோசனை 3
3. முதலீடுகளை மேற்கொள்வது சரி ஆனால் அதில் ஒரு ரிஸ்க் இருந்து கொண்டே தான் இருக்கும். நிலத்தை பொறுத்த வரை ரிஸ்க் என்பது வாங்கும் வரை தான். ஒழுங்காக எல்லா விவரங்களை பரிசோதித்து வாங்கிவிட்டால் காலாகாலத்துக்கும் நமக்கு ஒரு சொத்து இருக்கும்.
இம்ரான் யோசனை 4
4. மகளுக்கு இப்போது 1 வயது தான். ஆக அவள் 10-ம் வகுப்பு முடிக்கும் போது நம் சொத வீட்டில் இருப்போம். அதோடு கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, சம்பள உயர்வுகளை அவள் கல்விச் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். அடுத்த வருடம் அல்லது இரண்டு வருடம் கழித்து என்றால் கூட அவள் கல்லூரி செலவுகளுக்கு காசு சேர்க்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது. ஆக இதுவே சரியான நேரம்.
கண்ணீர் விட்ட அப்பா
ஆக அப்பா சொல்வது போல் ஒரு வீட்டை இப்போதே பார்த்து வாங்கி விடலாம் என முடிவு செய்தான் இம்ரான். அப்பா நீங்கள் சொல்வது போல் ஒரு வீடு வாங்கிவிடலாம். என்றான். இம்ரானின் தந்தை வெளிப்படையாக மகனை கட்டி அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் இட்டார்.
இம்ரானின் காலை பிடிக்கப் போன போது "என்னப்பா பன்றீங்க" என கலங்கிவிட்டான். அப்போது இம்ரானின் அப்பா சொல்கிறார் "என் அப்பாவுக்கு தான் சாவதற்குள்ளாவது சொந்த வீட்டில் சாவ வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. இன்று எனக்கும் அதே கனவு தான். இன்னும் ஐந்து அல்லது 10 வருடங்கள் தான். நம் சொந்த வீட்டிலேயே, என் மூச்சு நிற்க இருக்கும் என கனவை நனவாக்கியதற்காகத் தான் காலில் விழப் போனேன்" என்கிறார்.
உங்களுக்கு..?
இதே போல் வெறும் பணத்தின் பின்னாலும், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் கோடீஸ்வரன் ஆசை வார்த்தைகளுக்குப் பின்னாளும் ஓடாமல் கொஞ்சம் பேசி விசாரித்துப் பாருங்களேன். உங்களு சரி எனப் படுவதைச் செய்யுங்கள். இந்த வாழ்கை நமக்காக, நம்மைச் சார்ந்து இருப்பவரக்ளுக்காக, நாம் சார்ந்து இருப்பவர்களுக்காக.. எனக்கும் வீடு தான் சரி எனத் தோன்றுகிறது... உங்களுக்கு...?