மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் ஆறாவது முறையாக பட்ஜெட் (Union Budget) தாக்கல் செய்ய இருக்கிறார். அதுவும் இடை கால பட்ஜெட் தான். தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சி அமைப்பவர்கள் தான் புதிய பட்ஜெட்டை அறிவிப்பார்கள். அதன் படி தான் அரசும் இயங்கும். சரி திருபாய் அம்பானி வீட்டில் வருமான வரி சோதனை காரணமாக நிதியமைச்சர் பதவி பறிபோனது, கறுப்புப் பணத்துக்கு புது சட்டம், மறைத்து வைத்திருக்கும் வருமானத்துக்கு புது சட்டம், தன் பிறந்த நாளில் தான் பட்ஜெட் படிப்பே என அடம் பிடித்தது, சேவை வரி அறிமுகப்படுத்தியது என எல்லாத்தையும் பாருங்கப்பு...
ஹிந்தி இல்லையா..?
ஆம், நீங்கள் படித்தது சரி தான். சுதந்திர இந்தியாவின் பட்ஜெட் பேப்பர்கள், இந்தியாவின் நிதி நிலை அறிக்கைகள் எல்லாம் 1955 வரை ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டது. 1955 - 56 நிதி ஆண்டில் இருந்து தான் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அச்சிடப்படத் தொடங்கியது. முதல் ஹிந்தி - ஆங்கில பட்ஜெட் தாளை பாராளுமன்றத்தில் சமர்பித்தவர் சி டி தேஷ்முக். இவர் தான் முதல் இந்திய ஆர்பிஐ கவர்னரும் கூட.
காலக் கொடுமை
சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (International Monetary Fund)-ன் முதன்மை பொருளாதார ஆலோசகராக பதவி ஏற்றார். ஆனால் இந்தியாவில் இன்று வரை ஒரே ஒரு பெண் நிதி அமைச்சர் தான். அவர் இந்திரா காந்தி. அதுவும் விருப்பப்பட்டு எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. முரார்ஜி தேசாய் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய உடன் பொறுப்பேற்றதால் சரித்திரத்தில் கூடுதல் பேப்பர் வாங்கி இடம் பிடித்துவிட்டார் இந்திரா காந்தி.
பட்ஜெட் படித்த பிரதமர் 1
ஜவஹர்லால் நேரு - 1958 - 59 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமராக இருந்து கொண்டு கூடுதல் பொறுப்பாக நிதி அமைச்சர் பதவியையும் வகித்தார். அப்போது நிதி அமைச்சராக இருந்த டிடி கிருஷ்ணமாச்சாரி முந்த்ரா ஊழலுக்காக பதவியை ராஜினாமா செய்ய வைத்தது காங்கிரஸ். அப்போது தான் இந்த வரலாற்றுச் சிறப்பு நடந்தது. சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பிரதமரும் நேருவே. சரியாக பிப்ரவரி முதல் மார்ச் வரை இரண்டு மாதங்கள் மட்டும் நிதி அமைச்சராக பதவி வகித்து, பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு நிதி அமைச்சர் பதவியை மொரார்ஜி தேசாயிடம் கொடுத்துவிட்டார் நேரு.
பட்ஜெட் படித்த பிரதமர் 2
இந்திரா காந்தி - 1971 - 72 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரதமராக இருந்து கொண்டே தாக்கல் செய்தார். காரணம் மொரார்ஜி தேசாயின் ராஜினாமா. வங்கிகள் தேசியமயமாக்கள், மோரார்ஜியை அப்பா நேரு மதித்த அளவுக்கு மகள் இந்திரா மதிக்காதது, சர்வாதிகாரி போல எல்லா விஷயங்களிலும் செயல்படுவதால் மொரார்ஜி ராஜினாமா செய்துவிட்டு இந்திராவுக்கு எதிராக உருவான காங்கிரஸ் (ஓ)-ல் இணைந்தார். ஆகையால் ஜூன் 69 முதல் ஜூலை 70 வரையான காலத்தில் இந்திரா காந்தியே நிதி அமைச்சகத்தையும் பார்த்துக் கொண்டார். பட்ஜெட்டும் 71 - 72 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் படித்த பிரதமர் 3
இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி 1987 - 88 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைதாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்தது. அன்றைய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி பி சிங்கின் நேர்மை காரணமாக இரண்டு அமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார் அல்லது விலக்கப்பட்டார். திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் போன்ற பெருந்தலைகள் மீதே கட் அண்ட் ரைட்டாக வருமான வரி சோதனை நடத்தியது, தங்கத்தை திருட்டு தனமாக நாட்டில் கொண்டு வருவதை பெரிய அளவில் தடுத்து பல தங்க நகை வியாபாரிகளை பகைத்துக் கொண்டது போன்ற காரணங்களால் நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. விபி சிங்கின் பதவி பறிபோக திருபாய் அம்பானி மிக முக்கிய காரணம் என்கிறார்கள். அதை விட முக்கிய காரணம் காங்கிரஸுக்கு பணப்படி அளக்கும் தெய்வங்களே அம்பானி போன்ற வியாபாரிகள் தான் என்பது கட்சியின் கருத்து.
வருமானத்தைக் காட்டு
டிடி கிருஷ்ணமாச்சாரி தாக்கல் செய்த 1964 - 65 பட்ஜெட்டிலேயே மறைத்து வைத்திருக்கும் வருமானங்களை வெளிப்படையாக அரசிடம் காட்டி கொஞ்சம் வரி செலுத்திவிட்டு, மன்னிப்பு கேட்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.
கறுப்புப் பணம்
இந்தியா குடியரசாகி 15 ஆண்டுகளிலேயே கறுப்புப் பணம் குறித்துப் பேச ஆரம்பித்து விட்டது. 1965 - 66 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் சச்சிந்திர செளத்ரி கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், அரசிடம் வெளிப்படையாக கறுப்புப் பண விவரங்களைச் சொல்லி, ஒரு பகுதியை வரியாக காட்டிவிட்டு மன்னிப்பு கேட்க ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆக 2016-ல் மோடி கொண்டு வந்த Income Declaration Scheme எல்லாம் இதன் தழுவல் தான்.
ட்ரோல் செய்யப்பட்ட நிதியமைச்சர்
1983 - 84 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிரனாப் முகர்ஜி தாக்கல் செய்தார். என்ன 95 நிமிடம் நீ....ளமாக பேசிவிட்டு தாக்கல் செய்தார். மொத்த வையும் சோர்ந்துவிட்டது. எல்லோரும் தண்ணீர் குடித்துவிட்டு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி "the shortest Finance minister has delivered the longest budget speech" என ட்ரோல் செய்தார். ஆக அதிக நேரம் பட்ஜெட் உரையாற்றி விட்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நம் பிரனாப் முகர்ஜி தான்.
இந்தியாவின் முதல் பட்ஜெட்
சுதந்திர இந்தியாவிn முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தமிழர் ஆர் கே சண்முகம் என பலரும் படித்திருப்போம். ஆனால் 1947 - 48 நிதி ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டே ஒரு இடைக்கால பட்ஜெட் தான் என்பது தெரியுமா..? அதாவது இந்தியாவின் முதல் பட்ஜெட்டே ஒரு இடைக்கால பட்ஜெட் தான். அதுவும் வெறும் 7.5 மாதங்களுக்கு மட்டுமே ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
புதிய அறிமுகம்
1. 1987 - 88 நிதி ஆண்டில் தான், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெளிநாடுகள் போல கார்ப்பரேட் வரியை அறிவித்தார்கள். அறிமுகப்படுத்தியவர் அன்றைய பிரதமர் & நிதியமைச்சர் ராஜிவ் காந்தி.
2. 1994 - 95 நிதி ஆண்டில் தான் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. காரணம் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் சேவைத் துறையின் பங்கு 40%-க்கு மேல் உயர்ந்து நின்றது. ஆகையால் அதை வரி வரம்பிற்குள் கொண்டு வந்து கல்லா கட்ட திட்டமிட்டவர் The Accidental Prime Minister மன் மோகன் சிங்.
சரி யார் எத்தனை முறை
10 முறை - முரார்ஜி தேசாய்
09 முறை - ப சிதம்பரம்
08 முறை - பிரனாப் முகர்ஜி,
07 முறை - யஸ்வந்த் சிங்ஹா, வொய் பி சவான், சி டி தேஷ்முக்
06 முறை - மன்மோகன் சிங், டிடி கிருஷ்ணமாச்சாரி,
03 முறை - ஆர்.வெங்கடராமன், ஹெச்.எம்.படேல்
02 முறை - ஜஸ்வந்த் சிங், விபி சிங், சி சுப்ரமணியம், ஜான் மத்தாய், ஆர்.கே சண்முகம் செட்டி
01 முறை - ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சரண் சிங், என் டி திவாரி, மது தந்தவதே, எஸ் பி சவான், சச்சிந்திர செளதரி, பியுஷ் கோயல்
ரயில்வே பட்ஜெட் ஒழிப்பு
கடந்த 2017-ம் ஆண்டில் தான் ரயில்வேக்கு என்று தனியாக பட்ஜெட் ஒதுக்குவது நிறுத்தப்பட்டது. கடந்த 92 வருட மரபை மீறி மத்திய பட்ஜெட் உடனேயே ரயில்வே பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டது. அந்த வழக்கப்படி தான் இனி வரும் பட்ஜெட்களில் ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து அறிவிக்க இருக்கிறார்கள்.
நேரம் மற்றும் தேதி மாற்றம்
இந்தியாவுக்கான பட்ஜெட்டுக்கள் எப்போதும் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மாலை 5.00 மணிக்கு மேல் தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் 1990-களில் மாலை 5.00 மணிக்கு மேல் தாக்கல் செய்யப்பட்டு வந்த நேரம் காலை 11.00 மணியாக மாற்றப்பட்டது. 2017-ல் பிப்ரவரி கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படும் சடங்குகள் மாற்றப்பட்டு பிப்ரவரி 01-ம் தேதி அல்லது முதல் வேலை நாளில் தாக்கல் செய்யப்பட்டது.
மொரார்ஜி தேசாய்
இந்த இந்திய தலைவர் பாவம். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறந்த நாள் கொண்டாட முடியும். பிப்ரவரி 29-ல் பிறந்தவர். ஆகையால் இவருடைய பிறந்த நாளிலேயே இரண்டு முறை, இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்கிற பெயரை தட்டிச் செல்கிறார் மொரார்ஜி. தாக்கல் செய்த ஆண்டு 1960, 1968.