அடுத்த 2019 - 20 நிதி ஆண்டில் இருந்து தான் 5 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டாம். ஆனால் இந்த வருடத்துக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டுமே..? அதற்கு எப்படி வரி சேமிப்பு செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறோம்.
எதில் முதலீடு செய்யலாம் என்கிற கேள்விகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக வருமான வரி பிடித்தத்தில் இருந்து தப்பிக்கவும் வழி தேடுகிறார்கள்.
ஆக இங்கே ஒரு சாதாரண குடிமகன் கூட முதலீடு செய்து லாபம் பார்க்கக் கூடிய 10 வழிகளைச் சொல்கிறோம். இந்த 10 வழிகளில் பெரும்பாலானவைகளை நிலையான வருமானம் தரக் கூடிய திட்டங்களைச் சொல்லி இருக்கிறோம். மீதமுள்ள வரி தடுப்பு வழிகளையும் சொல்லி இருக்கிறோம்.
பிராவிடென்ட் ஃபண்ட் (P.F) 1
ஒருவரின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிராவிடென்ட் ஃபண்ட் தொகைக்கு வரிச்சலுகை உண்டு. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8.65% வருமானம் கொடுக்கிறார்கள். இது simple interest முறையில் வட்டி கணக்கிடாமல் Compound interest முறையில் வட்டிக்கு வட்டி சேர்ந்து நீண்ட காலத்தில் நல்ல பெரிய தொகையாகச் சேரும். வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை என இரண்டுக்குமே வரி கிடையாது.
பிராவிடென்ட் ஃபண்ட் (P.F) 2
அதோடு மத்திய அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்குவதால் உறுதியாக போட்ட பணம் திரும்ப கிடைத்துவிடும். ரிஸ்கே வேண்டாம் என்பவர்களுக்கான நல்ல திட்டம் இது. நம் அலுவலகத்தில் நமக்கு பிடித்தம் செய்யும் தொகை போக வி.பி.எஃப் என்கிற முறையில் அதே பிராவிடென்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்ய முடியும். இப்படி அலுவலகத்தில் பிடித்தம் செய்வது மற்றும் நாமே தனியா வி.பி.எவ்-ல் முதலீடு செய்வதென ஒரு நிதி ஆண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதற்கு வரிச் சலுகை உண்டு.
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF) 1
மாதாமாதம் சம்பளம் வாங்கும் சமளதாரர்கள் மட்டும் இல்லாமல், அமைசப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் தனியாக பார்ட் டைம் வேலை செய்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிக ஓய்வூதியம் வேண்டும் என்கிற சம்பளதாரர்கள் கூட இதில் பணம் போடலாம். சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படுபவர்கள், பிடித்தம் செய்யப்படாதவர்கள் என அனைவரும் பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் முதலீடு செய்து வருமான வரிச் சலுகையைப் பெறலாம்.
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF) 2
இந்த திட்டத்தில் இணைய அருகில் இருக்கும் தபால் அலுவலகம், வங்கிகளுக்குச் சென்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு முதலீட்டைத் தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 500. அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் ரூபாய். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8% வருமானம் கிடைக்கும். முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாகும். இதுவும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது. இது 15 ஆண்டுத் திட்டம் என்பதைக் கவனத்தில் கொண்டு முதலீடு செய்யவும். இதுவும் அரசுத் திட்டம் தான்.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
வங்கிகளில் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டும் தான் வரிச்சலுகை உண்டு. ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஒவ்வொரு அளவிலான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை இருக்கும். வட்டி வருமானமாக தற்போது 7.5 - 8.5% வரை கொடுக்கிறார்கள். 60 வயதுக்கு மேலான மூத்த குடிமக்களுக்கு இந்த 7.5 - 8.5 சதவிகிதத்துக்கு மேல் 0.25 - 0.5% கூடுதல் வட்டி கொடுக்கிறார்கள். இப்போது ஆர்பிஐ வட்டியை குறைத்திருப்பதால் பல வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களை குறைத்திருக்கிறார்கள். ஒரு முறை வட்டி முடிவு செய்தால் முதிர்வுக் காலம் வரை மாறாது. வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதையும் அனுசரித்து இதில் முதலீடு செய்யவும்.
தேசிய சேமிப்புப் பத்திரம்!
தபால் அலுவலகம் வழங்கும் ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான National Savings Certificate திட்டத்தைத் தான் தமிழில் தேசிய சேமிப்புப் பத்திரம் என்கிறோம். சுருக்கி (என்எஸ்சி) என்போம். இதில் போடும் முதலீட்டுக்கு வரிச் சலுகை உண்டு. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 8% வருமானம் தருகிறது மத்திய அரசு. இந்த முதலீட்டுக்கும் வங்கிகளைப் போல வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. இதுவும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களைப் போல பாதுகாப்பான முதலீடு என்றாலும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்!
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரியைச் சேமிக்கும் திட்டம் இது. தபால் அலுவலகம், வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை: ரூ.1,000. வருமானத்துக்கு வரி உண்டு. வருமானம் ஆண்டுக்கு 8.76%. வட்டி முதிர்வுக் காலம் வரை மாறாது. முதலீட்டை 5 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. ஒருவர் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம் என்றாலும், ரூ.1.5 லட்சத்துக்கு மட்டும்தான் நிபந்தனைக்கு உட்பட்டு வரிச் சலுகை கிடைக்கும். ரிஸ்க் வேண்டாம் என்கிறவர்களுக்கு ஏற்றது.
Tax Saving Mutual funds 1
இதை ஆங்கிலத்தில் ELSS - Equity Linked Saving Scheme என்போம். பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (இஎல்எஸ்எஸ்) நாம் முதலீடு செய்யும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டுவார்கள். இதிலும் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளில் இருந்து ஒரு ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை வரும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டாம். அதற்கு மேல் வந்தால் 10% வரி செலுத்த வேண்டும்.
Tax Saving Mutual funds 2
இந்த திட்டங்களில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக ரூ. 500 இருக்கிறது இந்த குறைந்தபட்சம் முதலீட்டுத் தொகை திட்டத்துக்கு திட்டம் மாறுபடும். எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளது. முதலீட்டுக் காலம் 3 ஆண்டுகள். ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை கொஞ்சம் நல்ல வருமானம் வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தி முதலீடு செய்யலாம்.
கல்விக் கட்டணங்களும்
உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரிச்சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும் தான் வரிச்சலுகை உண்டு. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும் போது, இரண்டு பிள்ளைகள் எனில் ஒரு பிள்ளைக்குத் தாயும், இன்னொரு பிள்ளைக்குத் தந்தையும் வரிச்சலுகை பெறுவதன் மூலம் அதிகமான வரியைச் சேமிக்க முடியும். ஆனால் ஒரு நபருக்கு இரண்டு குழந்தைகள் வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வீட்டுக் கடன் அசல்
சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகையை வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி-ன் கீழ் காட்டி வரிச் சலுகை பெறலாம். ஆனால் ஒரு ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, லைஃப் இன்ஷூரன்ஸ் முதலீடு, பிஎஃப், பிபிஎஃப், விபிஎஃப் என அனைத்து வகையான முதலீடுகள், கல்விக் கட்டணங்களை எல்லாம் சேர்த்து 1.5 லட்சம் ரூபாய் வரை தான் விலக்கு பெற முடியும். ஆக வீட்டுக் கடன் அசலை இந்த பிரிவின் கீழ் காட்டுபவர்கள் யோசித்து முதலீடுகளை மேற்கொள்ளவும்.
வீட்டுக் கடன் வட்டி
வீட்டுக் கடனின் அசல் தொகையில் ஆண்டுக்கு அதிகபட்சமாக எப்படி 1.5 லட்சம் ரூபாய் வரை காட்ட முடியுமோ..! அதே போல் வீட்டுக் கடனுக்கான வட்டித்தொ கையை வருமான வரிச் சட்டம் ப்ரிவிஉ 24-ன் கீழ் காட்டி வரி விலக்கு பெறலாம்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம்
ஆயுள் காப்பீட்டு பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. மேலே குறிப்பிட்ட 9 விஷயங்களுக்கும் சேர்த்து நிதியாண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும்.
என்பிஎஸ்
ஓய்வூதியச் சலுகை இல்லாதவர்கள், கூடுதலாக பென்ஷன் தேவை என்கிறவர்கள் மத்திய அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகள் மூலம் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக்குப் பிறகுதான் முதிர்வுத் தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.50,000 வரைக்கும் செய்யும் முதலீட்டுக்கு 80சி பிரிவைத் தாண்டி வரிச்சலுகை இருக்கிறது.