மும்பை: வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக, வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்தியர்களின் சமூக வலைதள கணக்குகளை சல்லடை போட்டு சலிக்கப் போகிறது இந்திய வருமான வரித் துறை.
Project Insight தான் இந்த விசாரணைத் திட்டத்தின் பெயர். இந்த திட்டத்துக்காக சுமார் 1000 கோடி ரூபாயை வருமான வரித் துறை முதலீடு செய்து இருக்கிறார்களாம். இந்த 1000 கோடி ரூபாய்க்கு கடந்த சில வருடங்களாக சில பிரம்மாண்ட அல்காரிதம்களை வருமான வரித் துறையும், ஐடி நிறுவனங்களும் இணைந்து எழுதி இருக்கிறார்களாம்.
இந்த அல்காரிதம்கள் பொதுவெளியில் கிடைக்கும் பிக் டேட்டா விவரங்களை வைத்து ஒரு பெரிய ஒழுங்குபடுத்தப்பட்ட டேட்டா பேஸை உருவாக்கும். அந்த டேட்டாபேஸை அடிப்படையாக வைத்துக் கொண்டு விசாரித்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க இருக்கிறார்களாம்.
பிக் டேட்டா என்றால் என்ன..?
ஒரு சாதாரண மனிதனின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே பிக் டேட்டா தான். காலையில் எத்தனை மணிக்கு பல் துலக்குகிறீர்கள், எத்தனை மணிக்கு குளிக்கிறீர்கள், எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, எத்தனை இட்லி சாப்பிடுகிறீர்கள் என நமக்கு சில்லறை விஷயமாக தோன்றும் அனைத்துமே பிக் டேட்டா தான். சரி இந்த பிக் டேட்டாக்களை எங்கு சென்று திரட்டப் போகிறார்கள்.
எதை எல்லாம் கண்காணிக்கலாம்
வருமான வரித் துறையின் இந்த புதிய அல்காரிதம்களைப் பயன்படுத்தி Facebook, Instagram, Twitter... என பல்வேறு சமூக வலைதளங்களில் இந்தியர்கள் இடும் பதிவுகளை கண்காணித்து பிக் டேட்டாக்களை திரட்டப் போகிறதாம். அதோடு பொதுவெளியில் இணையத்தில் வரும் செய்திகளையும் பயன்படுத்தி தனக்கான பிக் டேட்டாக்களை வருமான வரித் துறையினர் திரட்டிக் கொள்ளப் போகிறார்களாம்.
Artificial Intelligence
உலகமே அடுத்து Artificial Intelligence-ஐ பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது நம் வருமான வரித் துறை மட்டும் சும்மா இருக்குமா என்ன..? நீங்கள் நினைப்பது சரி தான். Project insight திட்டத்திலும் இந்த Artificial Intelligence வசதிகளை பயன்படுத்த முடியுமாம். ஆக சிங்கில் க்ளிக்கில் ஒவ்வொரு பான் கார்ட் வைத்திருக்கும் நபரின் ஜாதகத்தையும், அந்த நொடிப் பொழுது வரை இணையத்தில் சலித்துக் கண்டு பிடித்து விட முடியுமாம். குறிப்பாக வருமானம் சார்ந்த விவரங்களை இன்னும் வேகமாக கண்டு பிடிக்கும் விதத்தில் அல்காரிதம் எழுதி இருக்கிறார்களாம்.
ஏன் இந்த அல்காரிதம்
பொதுவாக இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் வரி கணக்கில் சொல்லும் வருமானத்துக்கும், அவர்கள் செய்யும் செலவுக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பதை நிறைய பார்க்க முடிகிறதாம். உதாரணமாக ஒரு பிசினஸ்மேன் தனக்கு 2017 - 18-ம் ஆண்டு வருமானமே 40 லட்சம் ரூபாய் தான் என கணக்கு சொல்கிறார். ஆனால் அதே 2017 - 18-ம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ஆடி கார் வாங்குகிறார். ஆக அரசால் தகுந்த ஆதாரத்தோடு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
முரண்களை வைத்து விசாரிக்கலாம்
இப்படி முன் பின் முரணாக இருப்பவர்களையும், அரசை ஏமாற்றி சுகமாக வாழ்பவர்களையும் கண்காணிக்கத் தான் இந்த project insight திட்டமாம். இந்தியாவிலேயே முதன் முறையாக வருமான வரித் துறை இப்படி தன் பழைய விசாரணை முறைகளை மாற்றி புதிய களத்தில் இறங்கி இருக்கிறது. இந்த project insight திட்டத்தின் மூலம் அத்தனை வலுவான ஆதாரங்களும், விவரங்களும் கிடைக்கும் என அடித்துச் சொல்கிறார்கள்.
இதுவரை
இந்த project insight-க்கு முன் வங்கிகள் கொடுக்கும் விவரங்கள் தான் அரசின் ஒரே பெரிய ஆதாரமாக இருக்குமாம். ஆனால் இன்று விர்ச்சுவலாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கிடைக்கும் விவரங்களை artificial intelligence முறையில் சேகரித்து விசாரிக்க இருக்கிறார்களாம்.
இனி விசாரணை
உங்கள் சமூக வலைதளங்களில் திரட்டும் விவரங்களை வருமான வரித் துறை முழுமையாக ஒரு நோட்டம் விடும். அதில் நீங்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றது, புதிய வீடு வாங்கியது, புதிய சொகுசு கார்கள் வாங்கியது, விலை உயர்ந்த நகைகளை வாங்கியது, புதிதாக பிசினஸ் தொடங்கி இருப்பது என என்ன படங்கள் அல்லது பதிவுகளை மேற்கொண்டாலும் அவைகளை நம் வருமான வரி படிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்.
இல்லை என்றால் Raid
சமூக வலைதளம் தாண்டி இணையத்தில் நாம் பதிவு செய்யும் விமான பயணச் சீட்டுகள், நம்மைப் பற்றி வரும் செய்திகள், நமக்கு கிடைத்த பரிசுகள், வென்ற பட்டங்கள், பதவிகள் எல்லாவற்றையும் artificial intelligence முறையில் இணையத்தில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். இவை அனைத்தும் சேர்ந்து தான் நம் profile தயார் ஆகும். இந்த செலவுகள் அனைத்தும் நாம் காட்டிய வருமான வரிக் கணக்கோடு ஒத்துப் போனால் பிழைத்தோம் இல்லை என்றால் அடுத்த 48 மணிநேரத்துக்குள் ஒரு குட்டி வருமான வரித் துறை சோதனை நம் வீட்டில் நடக்கலாம் என பயமுறுத்துகிறார்கள் நம் வருமான வரித் துறை அதிகாரிகள்.
நம் profile
இந்த ஏப்ரல் 01, 2019-க்குப் பிறகு ஒவ்வொரு வரிதாரருக்கும் ஒரு தனி profile-ஐ உருவாக்கப் போகிறது. அந்த profile-ல் ஒரு வரிதாரர் இதுவரை செய்திருக்கும் பெரிய செலவுகள், முதலீடுகள், வருமானம், வேலை பார்த்த விவரங்கள், பதவிகள், சொத்துக்கள் என ஒவ்வொரு விவரமும் கிடைத்த உடன் அப்டேட் செய்து பாதுகாக்கப்படுமாம். எப்போதாவது ஒரு சிறிய தவறில் மாட்டும் போது, நம்மை எடை போடவும் இந்த பிக் டேட்டாவை வைத்து தயார் செய்த profile-களை பயன்படுத்தப் போகிறார்களாம். எனவே இனி வருமான வரித் துறையிடம் மாட்டினால் உண்மையை ஒப்புக் கொள்வது நல்லது எனச் சொல்கிறார்கள்.
யார் டார்கெட்..?
முதலில் வருமான வரித் துறைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு தனி profile-களை போட்டு விவரங்களைத் திரட்டப் போகிறார்களாம். அப்படியே பான் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே ஒரு profile என தயாரிக்க உள்ளார்களாம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் வரி ஏய்ப்பு என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாக மாற்ற முயல்கிறது வருமான வரித் துறை.
யார் முன்னோடி..?
உலகில் இந்தியாவுக்கு முன்பே இங்கிலாந்து, பெல்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் project insight முறையில் தங்கள் நாட்டு மக்களின் பிக் டேட்டாக்களை வைத்து வருமானம் சார்ந்த விவரங்களை திரட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம். இங்கிலாந்தில் Connect என்கிற பெயரில் இங்கிலாந்து மக்களின் பிக் டேட்டாக்களை திரட்டி வருகிறார்களாம். இதனால் 2010-ம் ஆண்டில் இருந்து இன்ரு வரை சுமார் 4.1 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் (இந்திய மதிப்பில் சுமார் 40,000 கோடி ரூபாய்) வரியாக வசூலித்திருக்கிறார்களாம்.
மிஷன் சக்தியை விட இத்தகைய கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இது முழுமையாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இனியாவது அரசியல் வாதிகளும், ஊழல்வாதிகளும் லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும் பயப்படுவார்கள் என நம்புகிறோம்.