கடந்த ஐந்து ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சியின் ஐந்து பட்ஜெட்களில் என்ன மாதிரியான அறிவிப்புகள் எல்லாம் வந்திருக்கிறது என தொகுத்திருக்கிறோம்.
நடுத்தர சம்பளதாரர்களுக்கு என்ன மாதிரியான வரிச் சலுகைகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த அறிவிப்புகளைத் தொகுத்திருக்கிறோம்.
இங்கு நடுத்தர மக்கள் என்பது, ஏறத்தாழ ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள், பெரும்பாலும் சொந்த வீடு இல்லாதவர்கள், ஆனால் ஓரளவுக்கு நல்ல மாத சம்பள வேலையில் உள்ளவர்களையே குறிக்கும். இதில் வேறு ஏதாவது நல்ல வரி சார்ந்த விஷயங்களை நாங்கள் விட்டிருந்தால் நீங்கள் கமெண்டில் சொல்லுங்களேன்..! சேர்த்துக் கொள்கிறோம்.
2014
1. தனி நபர் வருமான வரி வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்வு.
2. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு.
3. வருமான வரி சட்டம் பிரிவு 24-ன் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையை 2 லட்சம் வரை காட்டி வரி விலக்கு பெறலாம். முன்பு 1.5 லட்சமாக இருந்தது.
4. கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் இன்ஷூரன்ஸுடனான தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (National Saving Certificate) கொண்டு வரப்பட்டன.
2015
1. வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-ன் கீழ் ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு செலுத்தும் பிரீமியத் தொகையில் 25,000 ரூபாய் வரை இந்த பிரிவின் கீழ் காட்டி வருமான வரிக் கழிவு பெறலாம். இதற்கு முன் 15,000 ஆக இருந்தது.
2. ஹெல்த் இன்ஷூரன்ஸில் இணையாத, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 30,000 ரூபாயை மருத்துவ செலவுகளுக்கு கணக்கு காட்டி வரிக் கழிவு பெறலாம்.
3. சில கொடிய நோய்களுக்கு செய்யும் செலவுக்கு 80,000 ரூபாய் வரை வரிக் கழிவு பெறலாம். இதற்கு முன் 60,000 ஆக இருந்தது.
4. மாற்றுத் திறனாளிகள் தங்கள் சொந்த செலவுகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் 25,000 ரூபாய் வரிக் கழிவு பெறலாம்.
5. வருமான வரிச் சட்டம் 80CCD-ன் கீழ் என்பிஎஸ் திட்டத்துக்கு கூடுதலாக 50,000 ரூபாய் வரிக் கழிவு கொடுத்தது.
6. போக்குவரத்து படிக்கு வரிக் கழிவு 800 ரூபாயில் இருந்து 1600 ரூபாயாக உயர்த்தியது.
7. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்துக்கு செலுத்தும் பணம் முழுமையாக 80C-ன் கீழ் வரிக் கழிவு கொடுத்தது.
2016
1. வருமான வரிச் சட்டம் பிரிவு 87A-ன் கீழ் 2,000 ரூபாயாக இருந்த வரிக் கழிவை 5,000 ரூபாயாக அதிகரித்தது.
2. வருமான வரிச் சட்டம் 80GG-ன் கீழ் வாடகைக்கான கழிவு 24,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாயாக அதிகரித்தது.
3. என்பிஎஸ் திட்டத்தில் இருந்து, ஓய்வு பெறும் போது 40% ரிடம்ஷனுக்கு முழு வரிக் கழிவு கொடுத்தது.
4. இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு (Single premium Annuity ரக பாலிசிகளுக்கு மட்டும்) சேவை வரியை 3.5 சதவிகிதத்தில் இருந்து 1.4 சதவிகிதமாக குறைத்தது.
5. முதல் முறையாக, 50 லட்சம் ரூபாய்க்குள் சொந்த வீடு வாங்குபவர்கள், வீட்டுக் கடனாக 35 லட்சம் ரூபாய்க்குள் வாங்கினால், கூடுதலாக 80EE பிரிவில் வரிக் கழிவு கொடுத்தது.
2017
1. 2,50,001 முதல் 5,00,000 ரூபாய்க்குள்ளான வருமானத்துக்கு 10 சதவிகிதமாக இருந்த வரியை 5 சதவிகிதமாக மாற்றியது.
2. வருமான வரிச் சட்டம் 87A-ன் கீழ் வழங்கி வந்த 5,000 ரூபாய் வரிக் கழிவை 2,500 ரூபாயாக் குறைத்தது.
3. தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி செய்தது.
2018
1. நிலையான கழிவுகளை (Standard Deduction) மீண்டும் கொண்டு வந்து 40,000 ரூபாய் வரிக் கழிவு கொடுத்து விட்டு போக்குவரத்து படிகள் மற்றும் மருத்துவ படிகளை நீக்கிவிட்டார்கள்.
2. வருமான வரிக்கு செலுத்தும் கூடுதல் செஸ் வரியை 3-ல் இருந்து 4 சதவிகிதமாக அதிகரித்தது.
3. பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கு 10% நீண்ட கால மூல தன ஆதாய வரியைக் கொண்டு வந்தது.
4. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகைக்கான வரிக் கழிவு, வருமான வரிச் சட்டப் பிரிவு 80D-யில் மூத்த குடிமக்களுக்கு 30,000-ல் இருந்து 50,000-ஆக அதிகரித்தது.
5. பங்கு சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து வரும் ஈவுத் தொகைக்கான வரியை 10%-ஆக நிர்ணயித்தது.
இந்த வருடம் என்ன மாதிரியான வரிக் கழிவுகள் கிடைக்கும் என நீங்கள் ஒரு கணிப்பாக கமெண்டில் சொல்லுங்களேன்... நம்மைப் போன்ற மற்ற நடுத்தர மக்களும் நம் மனதை புரிந்து கொள்ளட்டும்.