டெல்லி: கடந்த பிப்ரவரி 2019-ல் பாஜக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி (Income Tax) செலுத்துபவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லி இருந்தார்கள்.
குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த வரி தொடர்பான அறிவிப்புகள் கொஞ்சம் நிம்மதி அளிப்பதாகவே இருந்தன.
மாத சம்பளம் வாங்கி வரி செலுத்தும் நபர்களுக்கு ஒரு திட்டம், விவசாயிகளுக்கு ஒரு திட்டம் என இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் தொடும் விதத்தில் ஒரு பட்ஜெட் போட்டார்கள்.
அப்படி என்ன சொன்னார்கள்
ஐந்து லட்சம் ரூபாய்க்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழுமையான வரி விலக்கு (Tax Exemption) அளித்தது, நிலையான கழிவுகளை 50,000 ரூபாயாக உயர்த்தியது, காலி வீடுகளுக்கு வாடகை வந்ததாக கருதி வரி செலுத்த வேண்டாம் எனச் சொன்னது, டிடிஎஸ் அளவை அதிகப்படுத்தியது, ஒரு வீட்டை விற்று வரும் பணத்துக்கு செலுத்த வேண்டிய நீண்ட கால மூல தன ஆதாய வரிக்கு பதிலாக இரண்டு வீட்டை வாங்கிக் கொள்ள அனுமதித்தது என பட்டியல் நீள்கிறது.
5 லட்சம் குழப்பம்
பலரும் 5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம் என தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
ஒருவருக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் என்றால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம். ஒருவருக்கு 3.5 லட்சம் ஆண்டு வருமானம் என்றால், அவர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் முழு வரி விலக்கு கிடைக்கும். இல்லை என்றால், 3.5 லட்சத்தில் 2.5 லட்சம் அடிப்படை வரி வரம்பு விலக்கு போக 1 லட்சம் ரூபாய்க்கு 5% வரி + அபராதம் (5,000 ரூபாய் + அபராதம்) செலுத்த வேண்டும்.
5 லட்சத்துக்கு மேல் வருமானம்
அதே போல் ஒருவரின் ஆண்டு வருமானம் 5.5 லட்சம் ரூபாய் என்றால், அவருக்கு 5.5 லட்சத்தில் 0 - 2.5 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டாம். அடுத்த 2.51 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வருமானத்துக்கு 5% வரி செலுத்த வேண்டும். அதன் பின் 5,00,001 ரூபாயில் இருந்து 5.5 லட்சம் ரூபாய்க்கு 20% வரி செலுத்த வேண்டும். இதனால் தான் இந்த பட்ஜெட்டில் வரி வரம்பை அதிகரிக்கச் சொல்கிறார்கள் வரி துறை வல்லுநர்கள்.
ஐந்து லட்சமா உயர்த்துங்க
"பாஜகவின் இடைக்கால பட்ஜெட்டில் ஐந்து லட்சம் ரூபாய்க்குள் சம்பாதிப்பவர்களுக்கு ஒரு பைசா கூட வரி செலுத்தத் தேவை இல்லை எனச் சொன்னது வரவேற்கத்தக்கது தான். ஆனால், ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் தங்கள் வருமான வரி தாக்கல் செய்தால் தான் இந்த வரி விலக்கே பெற முடிகிறது. ஆக ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை, அடிப்படை வரி வரம்பாகக் கொண்டு வந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்" என்கிறார் டிலாயிட்டி இந்தியா நிறுவனத்தின் பார்ட்னர் ஹோமி மிஸ்த்ரி.
அதிகரிக்கவே இல்லை
"கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் வருமான வரி உச்ச வரம்பை 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்கள். அதற்குப் பின் இதுவரை உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வரவில்லை. ஆகையால் இந்த 2.5 லட்சத்தை 5 லட்சமாக வரம்பு மாற்றினால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கும் ஒரு நல்ல பயன் இருக்கும்" என்கிறார் மிஸ்த்ரி. மிஸ்த்ரி சொல்வது போல, அடிப்படை வரி வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தினால், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 12,500 ரூபாய் வரி + 500 ரூபாய் செஸ் தொகை மிச்சமாகும்.
இந்த பிரிவில் மாற்றமில்லை
மிஸ்த்ரியின் வாதங்களை ஆமோதிக்கும் விதத்தில் டாக்ஸ்மேன் பதிப்பகத்தின் இணைப் பொது மேலாளர் நவீன் வாதவா "எல்லா சம்பளதாரர்களைப் போலவே நானும் வருமான வரிச் சட்டப் பிரிவு 80சி மற்றும் பிரிவு 24-ன் வரம்புகளை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். கடைசியாக இந்த இரண்டு சட்டப் பிரிவுகளுக்கான விலக்குகளையும், பாஜக அரசு பதவிக்கு வந்த பின் 2014-ல் தான் அதிகரித்தார்கள். எனவே நிதி அமைச்சர், சம்பளதாரர்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிலையான கழிவுகள் மற்றும் ஹெஆர்ஏ (HRA) விலக்குகள் போல சம்பளதாரர்களுக்கு எந்த ஒரு பெரிய மாற்றமும், நன்மையும் இல்லை" என்கிறார்.