டெல்லி: நேற்று நிர்மலா சீதாராமன் 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில் குறிப்பிடும் படி பல விஷயங்கள் இருந்தாலும், வங்கிக் கணக்குகளில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்வது குறித்தும் பேசி இருக்கிறார்.
நேற்றைய பட்ஜெட்டில், வங்கிக் கணக்கில் இனி, வங்கி கணக்கு உரிமையாளரின் அனுமதி இல்லாமல் பணம் போடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.
2016-ல் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றான பணமதிப்பிழப்பின் போது, பல ஏழை எளிய மக்களுக்காக அரசு தொடங்கிக் கொடுத்த ஜன் தன் வங்கிக் கணக்குகளில், வங்கிக் கணக்கை வைத்திருப்பவர்களின் அனுமதியே இல்லாமல் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பதாக பல வங்கிக் கிளைகளில் இருந்து புகார்கள் வந்த வண்ணமே இருந்தன.
தற்போதைய வங்கி நடைமுறையில் ஒருவர், யாருடைய வங்கிக் கணக்கில் வேண்டுமானாலும் பணம் போடலாம். அதுவும் வங்கிக் கணக்கை வைத்திருப்பவருக்கு தெரியாமலேயே பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு சரியான வங்கிக் கணக்கு எண், பெயர் போன்ற அடிப்படை விவரங்கள் தெரிந்திருந்தாலே போதுமானதாக இருக்கிறது.
வெகு சில வங்கிகளில் தான், பணத்தை கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைகளில் செலுத்தாமல், மற்ற வங்கிக் கிளைகளில் செலுத்தினால் கொஞ்சம் கட்டணம் வசூலிக்கிறார்களே ஒழிய, பணத்தை செலுத்தக் கூடாது எனச் சொல்வதில்லை.
ஆக இனி வருங்காலங்களில் மற்றவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் தங்களுக்கு தெரியப்படுத்தாமல் டெபாசிட் செய்யும் வழக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார். அதோடு அரசு மற்றும் பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகமும் வலுப்படுத்தப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நேற்றைய பட்ஜெட்டில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் இரண்டு சதவிகிதம் டிடிஎஸ் (Tad Deducted at Source) பிடித்தம் செய்யப்படும் எனச் சொல்லி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு வியாபாரிகள், தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் பேமெண்ட் முறையில் பணத்தை வாங்கும் போது கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது எனச் சொல்லி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.