வரும் ஜூலை 05-ம் தேதி நிர்மலா சீதாராமன், தன்னுடைய முதல் பட்ஜெட்டை (Budget 2019) தாக்கல் செய்யப் போகிறார். அதே நேரத்தில் இது மோடி 2.0 அரசின் முதல் பட்ஜெட்டும் கூட.
இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான வரி தளர்வுகள் மற்றும் வரி விலக்குகளை எதிர்பார்க்கலாம் என, வருமான வரித் துறை அனலிஸ்டுகள் பரவலாக சொல்லி இருப்பதைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
1. வருமான வரி வரம்பு உயர்வு - பொதுவாக வருமான வரி வரம்பை 2.5 லட்சத்தில் இருந்து நேரடியாக 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்தச் சொல்லித் தான் கேட்பார்கள். ஆனால் ப்ளூம்பர்க் உட்பட பல அனலிஸ்டுகள் 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்த வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 2,500 ரூபாயாவது மிச்சமாகும் என்கிறார்கள்.
2. என்பிஎஸ் திட்டத்தில் இருந்து பணம் எடுத்தல் - தற்போது என்பிஎஸ் திட்டத்தில் இருந்து, 60 வயது ஆன பின் அல்லது ஓய்வு பெற்ற பின், எடுக்கும் பணத்தில் 40 சதவிகிதத்துக்கு மட்டுமே வரி விலக்கு கொடுக்கிறார்கள். இதை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அதோடு 80CCD பிரிவின் கீழ் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு 50,000 ரூபாய் வரை விலக்கு அளித்திருக்கிறார்கள். இதை 1,00,000 ரூபாயாக உயர்த்தவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
3. 80C மற்றும் 80D பிரிவு - உயர்ந்து வரும் விலை வாசிக்கு தகுந்தாற் போல இந்த இரண்டு பிரிவுகளிலும் கூடுதல் விலக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் வருமான வரி அனலிஸ்டுகள்.
4. வரி அல்லாத கடன் பத்திரங்கள் - இந்திய அரசுக்குத் தேவையான பணத்தை கடன் பத்திரங்கள் மூலமாகவும் திரட்டும். அப்படி தற்போது இந்தியாவுக்குத் தேவையான பணத்தை, வரி செலுத்தத் தேவை இல்லாத கடன் பத்திரங்களை வெளியிட்டு திரட்ட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். இதனால் முதலீட்டாளர்களுக்கு கடன் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கும் வரி செலுத்தத் தேவை இருக்காது.
5. நீண்ட கால மூல தன ஆதாய வரி - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பங்குகளில் இருந்து ஒரு வருடத்துக்குள், 1 லட்சம் ரூபாய் நீண்ட கால மூல தன ஆதாயம் கிடைத்தால், அதற்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த சட்டத்தையும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.