டெல்லி: நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் வருமான வரி (Income Tax) வரம்பை உயர்த்தவில்லை. அதே நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டில் சொன்ன 5 லட்சம் ரூபாய் விஷயத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி இருக்கிறார்.
இந்த 5 லட்சம் ரூபாய் என்ன பிரச்னை, அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது என எல்லாவற்றையும் அலசுவோம்.
அதற்கு முன் வருமான வரி செலுத்துதல் மற்றும் வருமான வரி தாக்கல் இரண்டுக்குமான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்வோம்.
அண்ணே வரிகட்டிட்டீங்களா?
கட்டிட்டேன் தம்பி. அதான், என்னோட கம்பெனியே 5,500 ரூபாய் மாசாமாசம் டிடிஎஸ் (TDS) பிடிச்சி அரசுக்கு கட்டிடுதே. என்னொட சம்பளத்துக்கு பிடிச்ச வரி, என்னோட வரிக் கணக்குல கட்டிட்டாங்கன்னு எனக்கு வருமான வரித் துறையில் இருந்து எஸ்.எம்.எஸ் எல்லாம் வந்துச்சே. அப்புறம் வரி தாக்கல் எதுக்கு ?
வருமான வரி தாக்கல் பண்ணீங்களா?
சூப்பர் சார். வரி கட்டுனத, முறைப்படி அரசாங்கத்துக்கு வருமான வரிப் படிவம், ITR - Income Tax Return மூலமா தாக்கல் பண்ணீங்களா?
தம்பி இது என்ன விளையாட்டா இருக்கு. அரசாங்கமே உங்க வரி எனக்கு வந்து சேர்ந்திருச்சுன்னு எஸ்.எம்.எஸ் அனுப்புது. இப்போ போய் வரி தாக்கல் பண்ணலையான்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க. சுத்த லூசுத்தனமால்ல இருக்கு...?
அண்ணே வரி கட்டுறது வேற வருமான வரி தாக்கல் பண்றதுங்கறது வேற.
லட்சுமி அக்கா டியூஷன்
உங்க மனைவி லட்சுமி அக்காவ எடுத்துக்குங்க. அவங்க ஸ்கூல்ல வாத்தியாரா வேலை பாக்குறாங்கல்ல?
ஆமா.
அவங்களுக்கும், மாச சம்பளத்துல, உங்கள மாதிரி டிடிஎஸ் பிடிச்சு அரசாங்கத்து கிட்ட ஸ்கூலே வரி கட்டிடராங்கள்ள?
ஆமா.
அக்கா ஸ்கூல் விட்டு வந்து, தனியா டியூஷன் எடுக்குறாங்கள்ள.
ஆமா.
டியூஷனுக்காக தனியா அரசாங்கத்துகிட்ட அனுமதி வாங்கி இருக்கீங்கள்ள.
ஆமா.
இப்போ அக்கா டியூஷன் எடுத்து சம்பாதிக்கிற காசுக்கு யார் டிடிஎஸ் பிடிப்பா?
ஆமா தம்பி. பாயிண்ட்.
இதுக்காகத் தான் அரசாங்கம், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் பண்ணச் சொல்லுது.
வருமான வரித் தாக்கல்
"இந்த வருஷத்துக்கு எனக்கு சம்பளத்துல இருந்து இவ்வளவு வருமானம், என்னோட சைடு இன்கம் இவ்வளவு, என்னோட ஃபிக்ஸட் டெபாசிட்ல இருந்து இவ்வளவு வட்டி வருமானம், எனக்கு பிசினஸ்ல இருந்து இவ்வளவு வருமானம், அதுல செலவுகள் போக என் லாபம் இவ்வளவு தான். இந்த லாபத்துக்கு, இவ்வளவு ரூபாய் வரியா கட்டிட்டேன் கட்டுனதுக்கான ஆதாரங்களோட இந்த வருமான வரிப் படிவத்த சமர்பிக்கிறேன்னு" எழுத்து மூலமா, அதாவது அவங்க கொடுக்குற பார்ம் மூலமா பண்ணா தான் ஒரு முழுமையான வருமான வரித் தாக்கல்.
ஒரு பகுதி தான்
ஆக வருமான வரி செலுத்துறதுங்குறது வருமான வரித் தாக்கல் செய்றதுல பாதி முடிஞ்சிருக்குன்னு தான் அர்த்தம். மீதிய நாம வரித் தாக்கல் பண்ணி முடிச்சாத் தான் முடியும்.
இது தான் வருமான வரி செலுத்துவதற்கும், செலுத்திய பின் வருமான வரி தாக்கல் செய்வதற்கும் உள்ள தொடர்பு. ஆக யார் வருமான வரி செலுத்தினாலும், அவர்கள், தங்கள் வருமான வரிப் படிவத்தையும் நிரப்பி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பிரச்னை தான் 5 லட்சம் ரூபாயிலும் வருகிறது.
எதெல்லாம் அடக்கம்
உங்கள் சம்பளம், கமிஷன், வட்டி வருமானம், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம், தனி நபர் பிசினஸ் வருமானம் கூட இதில் அடங்கும். ஆக ஒரு ஆண்டில் உங்களுக்கும் வரும் அனைத்து வருமானமும், வருமான வரி கணக்கிட எடுத்துக் கொள்ள வேண்டும். இது சம்பள தாரர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
வரி வரம்பு
ஒரு குறிப்பிட்ட வருமான அளவைச் சொல்லி அதற்கு கீழ் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டா எனச் சொல்வது வருமான வரி வரம்பு (Tax slab). இப்போதும் இந்திய வருமான வரி வரம்பு 2.5 லட்சம் ரூபாயாகத் தான் இருக்கிறது. இந்த வரம்புக்குக் கீழ் உள்ளவர்கள், ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.
வரிக் கழிவு
ஒரு குறிப்பிட்ட விஷயங்களுக்கு வரி செலுத்த வேண்டாம் எனச் சொல்வது வரிக் கழிவு (Tax Rebate). உதாரணம் 80C. இப்போது எப்படி 80C பிரிவின் கீழ் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்தியதற்கு வரிக் கழிவு பெறுகிறீர்கள் அது போல ஒருவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் அவர் செலுத்த வேண்டிய முழு வரித் தொகைக்கும் வரிக் கழிவு (Tax Rebate) கொடுத்திருக்கிறது அரசு. இந்த வருமான வரிக் கழிவைப் பெற வேண்டும் என்றால், வருமான வரி தாக்கல் செய்தே ஆக வேண்டும்.
யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்
பொதுவாக ஒருவருக்கு ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், 2.5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் (சம்பளம் + தனிநபர் பிசினஸ் வருமானம் + கமிஷன் + வட்டி + முதலீட்டு வருமானம்) என்றால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்.
யார் செய்தால் லாபம்
அதுவே ஒருவருக்கு 3.5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் (சம்பளம் + தனிநபர் பிசினஸ் வருமானம் + கமிஷன் + வட்டி + முதலீட்டு வருமானம்) என்றால், அவர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் முழு வரி விலக்கு கிடைக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் போது இவர் செலுத்த வேண்டிய வரி 5,000 ரூபாய் ஆனால் வருமான வரிச் சட்டம் அனுமதித்திருக்கும் 87A பிரிவின் படி இவர் செலுத்த வேண்டிய 5,000 ரூபாயை செலுத்த வேண்டாம் என கழித்துக் கொள்ளப்படும்.
இல்லை என்றால்
அப்படி இல்லை என்றால், 3.5 லட்சத்தில் 2.5 லட்சம் அடிப்படை வரி வரம்பு விலக்கு போக 1 லட்சம் ரூபாய்க்கு 5% வரியான 5,000 ரூபாய் நம் வருமான வரி கணக்கில் வரி பாக்கியாக காட்டும். இப்படி ஆண்டு வருமானம் (சம்பளம் + தனிநபர் பிசினஸ் வருமானம் + கமிஷன் + வட்டி + முதலீட்டு வருமானம்) 2,50,001 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி தாக்கல் செய்து இந்த 87A சட்டப் பிரிவின் கீழ் 12,500 ரூபாய் வரிக் கழிவு பெறலாம். வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் இந்த 12,500 ரூபாயை வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
5 லட்சத்துக்கு மேல் வருமானம்
அதே போல் ஒருவரின் ஆண்டு வருமானம் 5.5 லட்சம் ரூபாய் (சம்பளம் + தனிநபர் பிசினஸ் வருமானம் + கமிஷன் + வட்டி + முதலீட்டு வருமானம்) என்றால், அவருக்கு 5.5 லட்சத்தில் 0 - 2.5 லட்சம் ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டாம். அடுத்த 2.51 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வருமானத்துக்கு 5% வரியாக 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். அதோடு 5,00,001 ரூபாயில் இருந்து 5,50,000 ரூபாய்க்கு 20% வரியாக 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்கு 12,500 + 5 லட்சம் முதல் 5.5 லட்சம் ரூபாய்க்கு 10,000 ரூபாய் என மொத்தம் 22,500 ரூபாய் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம் 5,00,000 ரூபாய்க்கு மேல் கடந்து செல்பவர்களுக்கு மேலே சொன்ன 87A சட்டப் பிரிவு பொருந்தாது. எனவே இவர்கள் முழுமையாக வரி செலுத்த வேண்டும்.