டெல்லி : மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த படி, வாடகை வீடுகளுக்கான பிரச்சனையை ஒழுங்குபடுத்த, ஒரு மாதிரி குத்தகை சட்டத்தை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வாடகை ஒப்பந்த சட்டங்கள் lessor-lessee இடையிலான உறவுகளில், ஏற்படும் பிரச்சனைகளை களைய, பழமையான ஒப்பந்தங்களை களைந்து புதிய ஒப்பந்தங்கள் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
இதையடுத்து புதிய குத்தகை சட்டம் ஒன்றை மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. தற்போது இதன் மூலம் முன்மொழியப்பட்ட சட்டம் வெளியிடப்படவுள்ளது.
பிரச்சனைகளை தவிர்க்க புதிய ஒப்பந்தம்!
நாட்டில் வாடகை வீடுகளில் தங்கி இருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 1961ல் 54 சதவிகிதம் இருந்ததாகவும், இது தற்போது 2017 - 2018 பொருளாதார அறிக்கையில் 28 சதவிகிதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் தான் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் வீட்டு உரிமையாளருக்கும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையே, நிலவி வரும் பிரச்சனைகளை போக்கவும், வாடகை வீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதிரி வாடகை சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது மத்திய அரசு. இந்தச் சட்டம் வீடு வாடகைக்கு எடுப்பவர்களுக்கும், கடையை வாடகை எடுப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டு மாத வாடகைக்கு மேல் வைப்புத் தொகை கோர முடியாது?
இந்த புதிய சட்டத்தின் படி, வாடகைக்கு வீடு கேட்பவரிடம் பாதுகாப்பு வைப்புத்தொகையாக (security Deposit ) இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டு உரிமையாளரால் கோர முடியாது. புதிய சட்டத்தின் வரைவு வீடு-கடை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரரின் நலன்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ பல குடும்பங்கள் குடி பெயர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி மெட்ரோ நகரங்களுக்கு செல்லும் போது வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பல விதமான பிரச்சனைகளை மேற்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் தீர்க்க இந்த புதிய ஒப்பந்த சட்டம் தீர்வாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தாறுமாறான கட்டணங்களால் ஏற்படும் சிக்கல்கள்?
வீடுகளைக் வாடகைக்கு விடும் வீட்டின் உரிமையாளர்கள், தங்களுக்கு ஏற்றவாறு வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகையும், குடிநீர் தொகையையும், சுத்தம் செய்பவர்களுக்கான தொகையும், வீட்டுக்காவலர் தொகையும் என பல வகையிலும் கட்டணங்களை வசூலிக்கின்றனர். மேலும் முன்பணம், வாடகை ஒப்பந்தம் மற்றும் குத்தகை உள்ளிட்ட பல விஷயங்களில் கட்டிட உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையில் பலவேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க இந்த புதிய ஒப்பந்த சட்டம் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குத்தகைதாரர், வாடகைதாரர் நலனை கருதி “Model Tenancy Act”
இந்த நிலையில் மேற்கூறிய பல பிரச்சனைகளை போக்க மத்திய அரசு மாதிரி வாடகை சட்டத்தை (Model Tenancy Act) உருவாக்கி வருகிறது. இந்த சட்டத்தில் குத்தகைதாரர், வாடகைதாரர் இரு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
Pradhan Mantri Awaas Yojana
" Pradhan Mantri Awaas Yojana" திட்டத்தின் கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், அதே நேரம் வாடகை வீடுகளை மேம்படுத்துவதற்கு மாதிரி குத்தகை சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டத்தின் திட்டமே, வாடகை வீடுகளில் உள்ள பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பது தானாம். இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, வாடகை வீடுகளில் தெரிவுநிலை இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறதாம். இந்த ஒப்பந்த நகல் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படவுள்ளதாம்.
ஒப்பந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இந்த புதிய ஒப்பந்த சட்டத்தின்படி நில உரிமையாளர் வீட்டை ஆய்வு செய்யவோ அல்லது வீட்டை சரிசெய்ய விரும்பினாலோ, அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அதோடு இரு தரப்பினருக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் போடாமல் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கு விடக்கூடாது. மேலும் வாடகை ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பு, குத்தகைதாரர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு வாடகை செலுத்தாத வரை அவரை நீக்க முடியாது.
வீட்டை காலி செய்யாவிட்டால் வாடகை அதிகரிக்க உரிமை உண்டு?
இது எல்லாவற்றையும் விட வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும் கூட, குத்தகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால், நில உரிமையாளருக்கு நான்கு மடங்கு வாடகை கோர கூட உரிமை உண்டு. அதோடு இந்தச் சட்டத்தின் படி, குத்தகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால், நில உரிமையாளர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணங்களைக் அதிகரிக்கலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான்கு மடங்கு வாடகையையும் கேட்க நில உரிமையாளருக்கு உரிமை உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது.
வாடகை தீர்ப்பாயங்கள் அமைகக்ப்படும்
வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை தாரர்களுக்கும் நலன்களை சமன்படுத்தும் வகையில், வாடகை ஒழுங்குபடுத்தும் வாடகை தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும், அதோடு வாடகை மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் விவரங்களை ஆராயவும் இந்த தீர்ப்பாயம் இந்த வாடகை தீர்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சேதம் ஏற்பட்டால் குத்தகைதாரர் 15 நாட்களுக்கு தெரிவிக்க வேண்டும்?
இதே வீட்டில் ஏதேனும் பழுதோ அல்லது சேதங்களோ ஏற்பட்டால், அதுபற்றிய குறிப்புகளை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வீட்டின் உரிமையாளர் இந்த பழுதுகளை பார்க்க மறுத்தால் அதை குத்தகைதாரர், வாடகை தொகையிலிருந்து செய்து கொள்ளலாம். அதே போல் குத்தகை தாரர் அந்த தொகையை கொடுக்க மறுத்தால் உரிமையாளர் பாதுக்காப்பு வைப்பு நிதியிலிருந்து கழித்துக் கொள்ள முடியும். சொத்து வசிப்பிடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் குத்தகைதாரர் 15 நாட்களுக்குள் உரிமையாளருக்கு அறிவிப்பை கொடுக்க வேண்டும் என்றும், இதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.