மும்பை, இந்தியா: இன்று இந்தியாவில் வங்கிக் கணக்கைப் வைத்திருப்பவர்கள், வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
இதற்கு மத்திய அரசின் ஜன் தன் திட்டமும் ஒரு காரணம் எனச் சொல்லலாம். அதற்காக இந்தியாவில், அனைத்து தரப்பு மக்களிடமும் நிதிசார் அறிவு அதிகரித்துவிட்டது எனச் சொல்ல முடியாது.
இன்று வரை, இந்தியாவின் கிராம புறங்களில், அதிகம் படிக்காத ஏழை, எளிய மக்கள் இன்னும் ATM இயந்திரங்களைத் தான் அதிகம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ATM சிக்கல்
ATM இயந்திரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது தான் இன்று வரை பெரும்பாலான இந்திய மக்களின் இ வங்கிப் பயன்பாடு. சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து, இந்த ATM இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்ச வரம்புகள் விதிக்கப்பட்டன. பொதுவாக எஸ்பிஐ வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், ஒரு ஏடிஎம் (டெபிட்) கார்டைப் பயன்படுத்தி ஐந்து முறை மட்டுமே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். அது போக 3 முறை மட்டுமே மற்ற வங்கி ATM இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது. ஆக மாதம் ஒரு ஏடிஎம் கார்ட் மூலம் 8 பணப் பரிமாற்றங்கள் மட்டுமே பயன்படுத்தலாம்.
கட்டணம்
அதற்கு மேல் அதிகமாக பயன்படுத்துபவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தே வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கின. மிகக் குறிப்பாக ATM இயந்திரங்களின் கோளாறு மற்றும் பணம் இல்லாதது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பரிமாற்றத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் கூட, அந்தப் பரிமாற்றத்தையும் ஒரு பரிமாற்றமாக கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் தொடர்ந்து ஆர்பிஐ கவனத்துக்கு வந்த பின் தான் இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
ATM கோளாறுகள்
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியான RBI, கடந்த புதன்கிழமை அன்று (ஆகஸ்ட் 14, 2019) வங்கி ATM இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாத பரிமாற்றங்கள் மற்றும் ATM இயந்திரங்களில் டெக்னிக்கல் கோளாறுகளால் தடைப்பட்ட பரிமாற்றங்களை, இலவச பரிமாற்றங்கள் (Free Transaction) கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது. அதோடு ATM இயந்திரங்களில் பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்வது மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் பாக்கி தொகைகளைப் பார்க்கப் பயன்படுத்தும் பரிமாற்றங்களையும் இலவச பரிமாற்றங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறதாம்.
செல்லாது செல்லாது
அதாவது ATM வழியாக வங்கிக் கணக்கில் இருக்கும் பாக்கி தொகையைப் பார்ப்பது (Balance Enquiry) மற்றும் வங்கி ATM இயந்திரங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் (Bank fund transfer) செய்வது எல்லாமே இனி ஒரு பணப் பரிமாற்றங்களாக கருதப்படாது. சுருக்கமாக ஒவ்வொரு மாதமும் எட்டு ATM பரிமாற்றங்கள் மட்டுமே வங்கிகள் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த எட்டு பரிமாற்றங்களில் மேலே சொன்ன பரிமாற்றங்கள் கணக்கில் வராது.
இதெல்லாம் கணக்கில் வரக் கூடாது
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்
1. பேலன்ஸ் பார்ப்பது, காசோலை ஆர்டர் செய்வது, வரி செலுத்துவது
2. வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வது
3. வங்கி ATM இயந்திரக் கோளாறு காரணமாக பணம் எடுக்க முடியாமல் போவது
4. வங்கி ATM இயந்திரத்தில் போதிய பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாமல் போவது...
போன்ற ATM பரிவர்த்தனைகள் எல்லாம், வங்கி நமக்கு வழங்கி இருக்கும் மாதம் எட்டு இலவச ATM பரிமாற்றங்கள் கணக்கில் வராது. இதை ஒரு ATM பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது.