ஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ஜூலை 31, 2019 தான் கடைசி தேதி எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் சம்பளதாரர்களுக்கான ஃபார்ம் 16 வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு மாத காலம் கூடுதலாக கால நீட்டிப்பு கொடுத்தார்கள். இதற்கு மேல் நிச்சயமாக கால நீட்டிப்பு கொடுக்கமாட்டார்கள்.
இன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது வருமான வரிப் படிவத்தைச் செலுத்த வேண்டியவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.
யார் எல்லாம் செலுத்த வேண்டும்
1. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள்
2. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள்
3. க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள்
4. க்ளப்களில் ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள்.
5. சுமாராக 1,000 சதுர அடிக்கு மேல் சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ குடி இருப்பவர்கள்
6. 150 சதுர அடி வணிக இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ பயன்படுத்துபவர்கள்
7. கார் வைத்திருப்பவர்கள்
இவர்கள் எல்லாம் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
உங்களுக்கான வருமான வரிப் படிவம்
பான் அட்டை
ஆதார் அட்டை
ஃபார்ம் 16
ஃபார்ம் 26 AS
|
சொத்து விவரங்கள்
வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்கள்
முதலீட்டுக்கான ஆதாரங்கள்... போன்றவைகளை முதலில் திரட்டிக் கொள்ளுங்கள். அதன் பின் யாருக்கு எந்த மாதிரியான வருமான வரிப் படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கவனித்து நிரப்பவும். தவறான ஃபார்ம் நிரப்பினால் அது உங்களை சிக்கலில் மாட்டிவிடும். ஆக யாருக்கு எந்த ஃபார்ம் - https://tamil.goodreturns.in/personal-finance/2019/07/income-tax-which-itr-form-do-you-have-to-file-015348.html
என்பதை மேலே கொடுத்திருக்கும் லிங்கில் படித்துக் கொள்ளுங்கள்.
சரி பாருங்கள்
வருமான வரிப் படிவத்தை நிரப்பும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கொடுக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லாமல், தவறில்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன எழுத்துப் பிழை கூட உங்களுக்கு வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் வர வைக்கும் தவறாக அமையலாம். எனவே கவனம் தேவை..! முழுமையான வருமான வரிப் படிவத்தை நிரப்பிய பின் ஒரு முறை நிதானமாக படித்துப் பார்த்துவிட்டு சமர்பிக்கவும்.
சரியாகக் குறிப்பிடுவது
சம்பளம் வழியாக வந்த பணத்தை சம்பளத்துக்கான இடத்திலும், பங்குகளை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயங்களை, அதற்கான இடத்திலும் நிரப்ப வேண்டும். இப்படி வருமான வரித் துறையின் படிவத்தில் கேட்டிருக்கும் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். தவறான இடத்தில் வருமானங்களைக் குறிப்பிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உஷார் மக்களே.
கடைசி நேரத்தில் வேண்டாம்
நீங்கள் வருமான வரியை மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மார்ச் மாதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும். இப்போது வருமான வரிப் படிவத்தை நிரப்பப் போகும் போது, 80D, 80C என வரியை செலுத்தாமல் இருக்க வழி தேட வேண்டாம். ஒருவேளை ஆர்வத்தில் நீங்கள் அரசை ஏமாற்ற நினைத்து பொய்யான ஆவணங்களைச் சமர்பிப்பித்து சிக்கிக் கொண்டால் நாளை நோட்டீஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவீர்கள். எனவே என்ன வருமானம் வருகிறதோ அதற்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுங்கள்.