டெல்லி: பொதுவாக வருமான வரித் துறை அதிகாரிகள், வருமான வரித் துறையினர் என்றாலே வரியை வாங்கிப் போடுவது என்று தான் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அப்படி நினைத்து எல்லாம் தவறு என நிரூபித்து இருக்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள்.
வருமான வரித் துறை அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு கூட்டம் நேரடியாக இந்திய தனி நபர்களுக்கான வருமான வரி குறித்து ஆய்வு செய்து கடந்த ஆகஸ்ட் 19, 2019 அன்று மத்திய நிதி அமைச்சரிடம் ஒரு அறிக்கையை சமர்பித்து இருக்கிறார்கள்.
என்ன விஷயம்
நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான நேரடி வரிக் குறியீடு பணிக் குழு (Direct Tax Code Task Force), இந்தியாவில் இருக்கும் தனி நபர்களுக்கு புதிய வரி முறையைக் கொண்டு வரச் சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்கள். கிட்ட தட்ட, கடந்த 58 வருட பழைய இந்திய வருமான வரிச் சட்டத்தையே புரட்டிப் போடும் அளவுக்கு சில மாற்றங்களைப் பரிந்துரைத்து இருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.
தற்போதைய நடைமுறை
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம். ஆனால் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் 5% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்குமான வருமானம் ஈட்டுபவர்கள் 20% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அனைவரும் 4% செஸ் வரி வேறு கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது.
மாற்றம்
ஆனால் நம் வருமான வரித் துறை அதிகாரி அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு ஐந்து வரி வரம்புகளைக் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறார்களாம். இன்னும் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான நேரடி வரிக் குறியீடு பணிக் குழு (Direct Tax Code Task Force) அரசுக்கு சமர்பித்து இருக்கும் அறிக்கைகள் முறையாக பொது வெளியில் வரவில்லை. இருப்பினும் வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் படி பரிந்துரைத்து இருக்கும் வருமான வரி வரம்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம்.
பரிந்துரை வரம்புகள்
1 ரூபாய் முதல் - 2.5 லட்சம் ரூபாய் வரை = வரி கிடையாது
2.5 - 5.0 லட்சம் ரூபாய் வரை = 5 % வரி
5.0 - 10 லட்சம் ரூபாய் வரை = 10 % வரி
10 - 20 லட்சம் ரூபாய் வரை = 20 % வரி
20 - 200 லட்சம் ரூபாய் வரை = 30 % வரி
200 லட்சம் (2 கோடி) க்கு மேல் = 35 % வரி
மேலே சொல்லி இருக்கும் தகவல்கள் இன்னும் அரசாலோ அல்லது வருமான வரித் துறையினாலோ உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
என்ன பயன்
வருமான வரி வரம்பு இப்படி ஐந்தாகப் பிரிக்கப்பட்டால் நடுத்தர மக்களிடம் கொஞ்சம் அதிக பணம் புழங்கும். மேலே சொல்லி இருக்கும் உத்தேச வரி வரம்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், 5 லட்சம் முதல் 10 வரை ஆண்டுக்கு சம்பாதிப்பவர்கள் மற்றும் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதிப்பவர்களின் கைகளில் அதிகமாக பணம் புழங்கும். இதனால் அந்த பணம் செலவழிக்கப்பட்டு நுகர்வு அதிகரிக்கும், அதனால் பொருளாதாரமும் கொஞ்சம் மேம்படும் என்கிறார்கள்.
சில மாற்றங்கள்
தனி நபர் வருமான வரிகள் போக, பங்குகளுக்கு ஈவுத் தொகை கொடுத்தால் கூட அரசுக்கு டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் டேக்ஸ் என்கிற பெயரில் வரி செலுத்த வேண்டி இருக்கிறது. இப்போது இந்த ஈவுத் தொகைக்கான வரியை நீக்க அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்களாம். அதே போல் பிசினஸ் சமூகத்துக்கு தலை வலி கொடுத்துக் கொண்டு இருந்த MAT எனச் செல்லமாக அழைக்கப்படும் Minimum Alternate Tax வரியையும் நீக்க பரிந்துரைத்து இருக்கிறார்களாம். அதோடு சர் சார்ஜ் விதிப்பதையும் குறைக்கச் சொல்லி இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications