டெல்லி : ஹவுசிங் பைனான்ஸ் துறையை சேர்ந்த, எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இதன் நிகர லாபம் 7.39 சதவிகிதம் அதிகரித்து, 609.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 567.18 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே வருமானம் 4,815.57 கோடி ரூபாயாக முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,068 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்தார்த்தா மொஹந்தி கூறுகையில், நிறுவனத்தின் வர்த்தக சூழல் தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. எனினும் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வருமானம் கண்டுள்ளோம். குறிப்பாக வீட்டுக் கடன் பிரிவில் லாபத்தில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிறுவனம் சொத்து தரம் மற்றும் மீட்புத் அம்சத்தில் வலுவான கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் நடப்பு ஆண்டிலும் நிலைமையை நிவர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எனினும் நடப்பு ஆண்டில் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டில், வீட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகையில், 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்க முன்மொழிகிறது. இது நிச்சயம் ஒரு வலுவான கோரிக்கையை தூண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இதன் நிகரலாபம் 16.7 சதவிகிதம் அதிகரித்து, 693.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2017 - 2018ம் நிதியாண்டில் மார்ச் மாதத்தில் 594.34 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வீடுகளுக்கான ஜி.எஸ்.டி விகிதங்கள் குறித்த சலுகையாலும் இன்னும் வீடு விற்பனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆயுள் காப்பீடு கழகத்தின் துணை நிறுவனமான எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் இந்த நிகரலாபம், நடப்பு நிதியாண்டில் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கைகள் சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளதால் பங்கு சந்தையில் இதன் எதிரொலி காணப்படவில்லை. எனினும் திங்கட்கிழமையன்று சந்தையில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.