மும்பை, இந்தியா: மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தால், ஏழை எளிய மக்கள் கூட இன்று வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது.
ஆனால் இந்த ஏழை எளிய மக்கள் வங்கிக் கிளைகளுக்கு பதிலாக அதிகம் பயன்படுத்தும் ஒரே விஷயம் ஏடிஎம். இந்த ஏடிஎம் தொடர்பான கட்டணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை முறைகளைப் பற்றி கடந்த ஆகஸ்ட் 14, 2019 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது மத்திய ரிசர்வ் வங்கி.
இந்த ஆர்பிஐ சுற்றறிக்கையை, சில வங்கிகள் இன்னும் இந்த விஷயங்களை பின்பற்றவில்லை என ஒரு சிலர் புகார் சொல்கிறார்கள். இதை எப்படி எதிர் கொள்வது. எப்படி வங்கிகளிடம் இதைப் பற்றிப் பேசி கட்டணங்கள் வசூலிக்காமல் தவிர்த்துக் கொள்வது எனப் பார்ப்போம். அதற்கு முன் ஆர்பிஐ சுற்றறிக்கையை முதலில் தெளிவு படுத்திக் கொள்வோம்.
என்ன சொல்கிறது ஆர்பிஐ
ATM இயந்திரத்தைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்வது தான் இன்று வரை பெரும்பாலான இந்திய மக்களின் இ வங்கிப் பயன்பாடு. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து, இந்த ATM இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்ச வரம்புகள் விதிக்கப்பட்டன. பொதுவாக எஸ்பிஐ வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், ஒரு ஏடிஎம் (டெபிட்) கார்டைப் பயன்படுத்தி ஐந்து முறை மட்டுமே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். அது போக 3 முறை மட்டுமே மற்ற வங்கி ATM இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது. ஆக மாதம் ஒரு ஏடிஎம் கார்ட் மூலம் 8 பணப் பரிமாற்றங்கள் மட்டுமே பயன்படுத்தலாம்.
அபராதம்
அதற்கு மேல் அதிகமாக பயன்படுத்தினால், பயன்படுத்துபவர்களின் வங்கிக் கணக்கில் இருந்தே வங்கிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கின. மிகக் குறிப்பாக ATM இயந்திரங்களின் கோளாறு மற்றும் பணம் இல்லாதது போன்ற ஏடிஎம் இயந்திரப் பிரச்னைகள் ஏற்பட்டு பரிமாற்றத்தை முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் கூட, அந்தப் பரிமாற்றத்தையும் ஒரு பரிமாற்றமாக கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் தொடர்ந்து ஆர்பிஐ கவனத்துக்கு வந்த பின் தான் இப்போது ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
ஆர்பிஐ அதிரடி
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியான RBI, கடந்த ஆகஸ்ட் 14, 2019 அன்று வங்கி ATM இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாத பரிமாற்றங்கள் மற்றும் ATM இயந்திரங்களில் டெக்னிக்கல் கோளாறுகளால் தடைப்பட்ட பரிமாற்றங்களை, இலவச பரிமாற்றங்கள் (Free Transaction) கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனச் சொல்லி இருக்கிறது. அதோடு ATM இயந்திரங்களில் பணத்தை வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்வது மற்றும் வங்கிக் கணக்கில் இருக்கும் பாக்கி தொகைகளைப் பார்க்கப் பயன்படுத்தும் பரிமாற்றங்களையும் இலவச பரிமாற்றங்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறதாம். ஆர்பிஐ சுற்றறிக்கை லிங்க் - https://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=11661&Mode=0
ஒரு பரிமாற்றம் அல்ல
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால்
1. ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பேலன்ஸ் பார்ப்பது, காசோலை ஆர்டர் செய்வது, வரி செலுத்துவது
2. வங்கிக் கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வது
3. வங்கி ATM இயந்திரக் கோளாறு காரணமாக பணம் எடுக்க முடியாமல் போவது
4. வங்கி ATM இயந்திரத்தில் போதிய பணம் இல்லாததால் பணம் எடுக்க முடியாமல் போவது... போன்ற ATM பரிவர்த்தனைகள் எல்லாம், வங்கி நமக்கு வழங்கி இருக்கும் மாதம் எட்டு இலவச ATM பரிமாற்றங்கள் கணக்கில் வரக் கூடாது. இதை ஒரு ATM பரிவர்த்தனையாக கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதல் கட்டணங்களையும் கட்டாயம் வசூலிக்கக் கூடாது என்கிற ஆர்பிஐ சுற்றறிக்கை.
புகார்
இப்போது ஒருவர் கனரா வங்கியின் டெபிட் (ஏடிஎம்) கார்டை பயன்படுத்துகிறார். கடந்த ஆகஸ்ட் 2019-ல் ஏடிஎம் மாதாந்திரக் கட்டணம் 35.40 ரூபாய் மற்றும் மாதாந்திர அலெர்ட் கட்டணமாக 11.80 ரூபாய் போக ஏடிஎம் கூடுதல் கட்டணமாக (பணம் எடுத்ததற்கு) 20 ரூபாய் ஒரு முறை மற்றும் ஏடிஎம் கூடுதல் கட்டணமாக (பணம் எடுக்காமல் மற்ற பரிமாற்றங்கள்) 8 ரூபாய் என இரண்டு முறை கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது இந்த 20 ரூபாய் மற்றும் 8 ரூபாய் கூடுதல் ஏடிஎம் கட்டணம் ஏன் வசூலித்தார்கள் எனப் பார்க்க வேண்டும்.
செக் செய்யுங்கள்
1. ஒரு மாதத்தில் 8 முறைக்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தினீர்களா..?
2. ஆகஸ்ட் 15, 2019-க்கு முன்பே எட்டு முறை ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்திவிட்டீர்களா..?
3. ஆம் என்றால் எத்தனை முறை பணம் எடுத்தீர்கள்..?
4. எத்தனை முறை பணம் எடுக்காமல் மற்ற சேவைகளுக்காகப் பயன்படுத்தினீர்கள்..? ஆகஸ்ட் 15, 2019-க்கு முன் எத்தனை முறை ஆகஸ்ட் 15,2019-க்குப் பின் எத்தனை முறை..? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் தகுந்த ஆதாரத்துடன் விடை இருக்க வேண்டும். நீங்கள் எட்டு முறைக்கு மேல் பணம் எடுத்து இருந்தால் (ஆகஸ்ட் 15, 2019 முன் பின் தேவை இல்லை) அந்த 20 ரூபாய் கூடுதல் ஏடிஎம் கட்டணம் விதித்தது சரி தான்.
ஆகஸ்ட் 15, 2019
ஒருவேளை நீங்கள் இந்த எட்டு முறை பரிமாற்றத்துக்குப் பிறகு பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளை ஆகஸ்ட் 15, 2019-க்கு முன்பே செய்துவிட்டீர்கள் என்றால் அந்த 8 ரூபாய் கட்டணம் விதித்தது கூட சரி தான். ஒருவேளை ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பணம் எடுக்காத ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் வசூலித்து இருந்தால், மேலே கொடுத்த ஆர்பிஐ சுற்றறிக்கை மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனை ஆதாரத்துடன் வங்கியிடம் பேசுங்கள் நிச்சயமாக வங்கி விதித்த கட்டணத்தை பின் வாங்க வாய்ப்புகள் அதிகம். எனவே மக்களே, இனியும் வங்கிகள் உங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்காதீர்கள். நம் பணம் நம் உரிமை.