மும்பை: இந்திய அரசு அமைப்புகளில் மக்களுக்கு கூடுமான வரை நெருக்கமாக இருந்து வேலை பார்த்து வரும் அமைப்புகளில் ஆர்பிஐயும் ஒன்று. ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தே ஆர்பிஐ-க்கு என்று மக்களிடம் தனி மரியாதை கூடி இருக்கிறது.
இப்போது ஆர்பிஐ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, வங்கி சேவைகளை போராடிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விடிவு காலம் கொடுத்து இருக்கிறது.
இனி சில வங்கி சேவைகளில் தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதமாக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வங்கி அதிகாரிகள் வயிற்றில் புளியையும், வங்கி வாடிக்கையாளர்கள் வயிற்றில் பாலையும் வார்த்து இருக்கிறார்கள். இது எதற்கு எல்லாம் பொருந்தும்..?
ஆர்பிஐ சுற்றறிக்கை
கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று ஆர்பிஐயிடம் இருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில்
1. பரிவர்த்தனை நடந்து முடிய வேண்டிய நேரம்
2. அரசு அனுமதித்து இருக்கும் பேமெண்ட் சிஸ்டம் வழியாக பணப் பரிமாற்றத்தை மேற் கொண்டு, பணப் பரிமாற்றம் சரியாக நடக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. இந்த சுற்றறிக்கையின் படி, குறிப்பிட்ட நேரத்துக்குள், பணம் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகளுக்குச் சென்று சேரவில்லை என்றாலோ அல்லது பணப் பரிமாற்றம் தாமதமானாலோ வங்கி வாடிக்கையாளர்களுக்கு, வங்கி அபராதம் செலுத்த வேண்டும் எனச் சொல்கிறது.
ஏடிஎம்
ஏடிஎம் இயந்திரங்களில் (மைக்ரோ ஏடிஎம்களும் அடக்கம்) பணம் எடுக்கும் போது கையில் பணம் வரவில்லை, ஆனால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழித்து விட்டார்கள் என்றால், அடுத்த ஐந்து நாட்களுக்குள் பணத்தை மீண்டும் வங்கிக் கணக்கில், வங்கி செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவர் வங்கி.
எடுத்துக்காட்டு
சலீம் நம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். அவர் செப்டம்பர் 23, 2019 அன்று அண்ணா சாலை ஏடிஎம்-ல் இருந்து 5,000 ரூபாய் பணம் எடுக்க முயல்கிறார். ஏடிஎம்-ல் இருந்து பணம் வரவில்லை. ஆனால் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கழித்துக் கொண்டார்கள். ஆக, செப்டம்பர் 23-ம் தேதி + 5 நாள் ஆக செப்டம்பர் 28, 2019-க்குள், தவறாக சலீம் கணக்கில் இருந்து கழித்த பணத்தை அவர் கணக்கில் மீண்டும் போட்டு விட வேண்டும்.
அபராதம்
ஒருவேளை இந்தியன் வங்கி தரப்பினர், நம் சலீம் கணக்கில் அக்டோபர் 01-ம் தேதி தான், தவறாக எடுத்த 5,000 ரூபாய் பணத்தை போடுகிறார்கள் என்றால், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 01 வரையான 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் என 3 * 100 = 300 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமாம்..! மாஸான சட்டமாக இருக்கிறது இல்லயா..? இதே உதாரணம் அடுத்தடுத்து உள்ள அனைத்து வகையான பரிமாற்றங்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
கார்ட் டூ கார்ட்
கார்ட் டு கார்ட் பரிமாற்றத்துக்கு உதாரணமாக நம் டெபிட் கார்ட் வழியாக க்ரெடிட் கார்ட்-க்கு பணத்தை மாற்றுவதைச் சொல்லலாம். இப்படி ஒரு கார்ட் வழியாக இன்னொரு கார்டுக்கு பணத்தை மாற்றும் போது, நேரடியாக எந்த கார்டுக்கு பணத்தை அனுப்புகிறோமோ, அந்த கணக்குக்கு பணம் சென்று சேர்ந்து விட வேண்டும். அப்படி ஒருவேளை பணம் சரியான கணக்குக்குச் சென்று சேரவில்லை என்றால், பரிமாற்றம் செய்த நாள் + 1 நாளுக்குள், பணத்தை அனுப்பியவர் கணக்கில் சேர்த்து விட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாயை நஷ்ட ஈடாக பரிமாற்றம் செய்தவருக்கு கொடுக்க வேண்டும்.
பி ஓ எஸ்
Point of Sale (PoS) வழியாக நாம் பொருள் வாங்கும் கடையில் பேமெண்ட் செய்கிறோம். பேமெண்ட் ஆகவில்லை என கடைக்காரர் சொல்கிறார். ஆனால் நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கழித்துவிட்டார்கள் என்றால் - பரிமாற்றம் செய்த நாள் + 5 நாட்களுக்குள் பி ஓ எஸ் வழியாக ஸ்வைப் செய்த போது நம் கணக்கில் இருந்து எடுத்த பணம், நம் கணக்குக்கு வந்து விட வேண்டும். இல்லை என்றால் 6-வது நாள் முதல் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் நஷ்ட ஈடு வசூலிக்கலாம்.
யூ பி ஐ
கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம், பிம், மொபிக்விக் போன்ற யூபிஐ பேமெண்ட் செயலிகள் வழியாக பேமெண்ட் செய்கிறோம். பணம் நம் வங்கிக் கணக்கில் இருந்து கழித்துவிட்டார்கள். ஆனால் பணம் நாம் செலுத்திய நபருக்குச் சென்று சேரவில்லை என்றால், பரிமாற்றம் செய்த நாள் + 1 நாளுக்குள் பணம் நம் கணக்குக்கு வந்து சேர வேண்டும். இல்லை என்றால் 2-வது நாள் முதல் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் நஷ்ட ஈடு வசூலிக்கலாம்.
ஐ எம் பி எஸ்
வங்கிகளின் ஐ எம் பி எஸ் சேவை வழியாக, நாம் ஒருவருக்கு பணம் அனுப்புகிறோம். முதலில் நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழித்துக் கொள்வார்கள். பிறகு அந்த பணம் அடுத்த சில நிமிடங்களில், நாம் அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஒருவேளை நாம் அனுப்பியவரின் வங்கிக் கணக்குக்கு பணம் சென்று சேரவில்லை என்றால்... பரிமாற்றம் செய்த நாள் + 1 ஒரு நாளுக்குள் நம் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர வேண்டும். இல்லை என்றால் 2-வது நாள் முதல் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் நஷ்ட ஈடு வசூலிக்கலாம்.